
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
(இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் கொடுத்துள்ள ’drop down’ மூலம் பாகம் 1-25 படிக்காதவர்கள் படிக்கலாம்).
Smug என்னும் ஆங்கில வார்த்தைக்கு `திருப்தி அடைவது’ என்று சொல்லலாம். என் `Smug Life’ ஐ பற்றிய பழைய ஞாபகங்கள் தான் இந்த கட்டுரை.
நேற்றைய தினம் இங்குள்ள “Mercato Mall” (Dubai) என்ற எனக்கு பிடித்தமான வணிக வளாகத்தில் (Mall) உள்ள VOX திரையரங்கில் “Thug Life” படம் பார்த்தேன். சிலர் சமூக வலைத்தளங்களில் இந்த படத்தை எதிர் மறையாக விமர்சிக்க அப்படி என்னதான் உள்ளது என்று பார்த்து விடுவோமே என்று கங்கணம் கட்டிக்கொண்டு சென்றேன்.
இது முதல் முறையல்ல. சில மாதங்களுக்கு முன் இந்தியன் 2, கங்குவா போன்ற படங்களையும் ஏறக்குறைய தனி ஆளாக அமர்ந்து பார்த்திருக்கிறேன். மனைவி பாதி நேரம் மகளிடமோ இல்லை தன் அம்மாவிடமோ இருப்பது ஒரு சப்பைக்கட்டு, தனியாக திரைப்படம் பார்க்க. இப்போது நான் இந்த படங்களை பற்றி என் கருத்துக்களை சொல்லப்போவதில்லை.
ஏதோ ஒரு விஷயம் செய்யும்போது திடீரென்று அது சம்பந்தமான பழைய ஞாபங்கங்கள் வருமில்லையா. பழைய ஞாபகம் என்றால் ஏற்ககுறைய 40 வருடம் முன்பு.
சென்னையில் விவேகானந்தா கல்லூரியில் பி.காம் (B.Com) படித்துக்கொண்டிருந்த நேரம். விடுதி வாசம். சோற்றுக்கு கவலை இல்லை.
நைனா (அப்பா) மாதம் தவறாமல் விடுதிக்குண்டான தொகையை அனுப்பிவிடுவார். கூடவே எனக்கு சோப்பு சீப்பு மற்றும் இதர செலவுக்காக ஒரு தொகை அனுப்புவார். எவ்வளவு என்று ஞாபகம் இல்லை ஆனால் தேவைக்கு சற்று அதிகமாகவே அனுப்புவார். கேட்க ஆளில்லை.

படிப்பு தவிர பெரிய கடமைகளும் இல்லை. படிப்பை நான் ஒரு கடமையாகவும் பார்க்கவில்லை. ஏதோ முன்னோர் செய்த புண்ணியம், அப்படி இப்படி படித்து முதல் 5-10 இடத்துக்குள் வந்து விடுவேன். அம்மா நைனா நான் ஏதோ விழுந்து விழுந்து படித்ததாக நினைத்தார்கள். அவர்களுக்கு தெரியாது நான் மற்றும் 2 நண்பர்கள் வாரா வாரம் 2 படங்களாவது பார்த்துவிடுவோம் என்று. இப்போது போல online அறவே இல்லை.
விடுதியில் இருந்து 21சி பேருந்து பிடித்து தேவி, ஆனந்த் இல்லை சத்யம் (A/C அவசியம்) எதாவுது ஒன்றில் முன்பதிவு செய்து படம் ரிலீஸ் ஆகும் அன்றோ இல்லை 2-3 நாட்களுக்குள்ளோ பார்த்து விடுவோம்.
விடுதி மெஸ்ஸில் (உணவு உண்ணுமிடம்) வாழை இலையில் நல்ல ஒரு மதிய உணவு உண்டு ஒரு 10 நிமிட நடையில் பேருந்து நிறுத்தம் வந்து 21சி பிடித்து மவுண்ட் வீதியில் இறங்கி திரை அரங்கை அடைந்து இருக்கையில் அமர்ந்து … ஆஹா என்ன சுகம். கொஞ்சம் வசதி உள்ளவர்கள் வரும் இடம்.
எனவே சற்று நல்ல உடை உடுத்த வேண்டும். அழகான பெண்களை பார்த்துவிட்டால் கொஞ்சம் பீட்டர் (தயவு செய்து இந்த தமிழ் வார்த்தைக்கு அர்த்தம் சொல்லவும்) விடுவோம். அப்புறம் அந்த எஸ்ப்ரெஸ்ஸோ காபி ஸ்டைலுக்காக வாங்குவோம். ஆனால் எந்த பெண்ணும் என்னை ஏறெடுத்து பார்த்த மாதிரி ஞாபகம் இல்லை. அதுக்கு ஒரு குடுப்பணை வேண்டும். அது இருக்கட்டும்.

அந்த குளிரூட்டப்பட்ட அரங்கம், ரஜினி அல்லது கமல் கூடவே ஸ்ரீதேவியோ அம்பிகாவோ, மாதவியோ (ஜெயப்ரதா சலங்கை ஒளியில் வந்த மாதிரி இன்னும் யாரும் வரவில்லை என்பது என் நண்பனின் தாழ்மையான கருது. அவன் மனம் புண்படக்கூடாது. எனவே என் கருத்தும் அதுவே).
அந்த பெரிய திரையில், இது மௌனமான நேரம். Sheer Magic. சுத்தமான மாயாஜாலம். என்ன காரணம்…என் வயதா அவர்கள் நடிப்பா அவர்களின் அழகா இல்லை ராஜாவின் உள்ளத்தை அள்ளும் இசையா? இல்லை, எல்லாம் கலந்ததா? எது எப்படி ஆகினும், அந்த படம் பார்க்கும் 2-3 மணி நேரம், பின்னர் படத்தை நண்பர்களுடன் இரவு உணவுக்கு பின், விடுதி அறையில் அலசி ஆராயும் நேரம், இன்றும் நினைவு கூறும்போது இன்பமாக இருக்கிறது.
1979 அல்லது 1980 என்று நினைக்கிறேன். தர்மயுத்தம், நான் வாழவைப்பேன், தம்பிக்கு எந்த ஊரு, ஜானி, கழுகு, தில்லு முல்லு, நெற்றி கண், மூன்று முகம் போன்ற ரஜனி படங்கள். தர்ம யுத்தத்தில் ரஜினி அந்த ‘ஆகாய கங்கை” பாடலில் கருப்பு பேண்டும் மஞ்சள் ஷர்ட்டும் அணிந்து ஒரு நடை நடப்பார்.
அது ஒன்றே போதும். கூடவே ஸ்ரீதேவி. நெற்றிக்கண் பாடல்கள் கதை எல்லாமே சிறப்பு. மூன்று முகம், சொல்லி முடியாது. “காதலின் தீபம் ஒன்று” என்று ரஜினி “தம்பிக்கு எந்த ஊரு” படத்தில் ஒரு நடை நடப்பார். நானும் அந்த மாதிரி மனதிற்குள் சில சமயம்….

அப்படியே கமல் பக்கம் வந்தால், சரியான போட்டி. ரஜனியோடு மட்டும் அல்ல, அவருடைய படங்களோடேயே. வறுமையின் நிறம் சிவப்பு, குரு, ராஜ பார்வை, சவால், சங்கர் லால், மூன்றாம் பிறை, சகல கலா வல்லவன், மீண்டும் கோகிலா, கல்யாண ராமன் போன்ற படங்கள். ‘ராதா ராதா நீ எங்கே”, “ஹே ஹே ஓராயிரம்”, “மலர்களில் ஆடும் இளமை”, “அந்தி மழை”, “கண்ணே கலைமானே”…அடுக்கிக்கொண்டே போகலாம்.
பிரபுவின் படங்களும் விதிவிலக்கல்ல. அப்புறம் என் மனம் கவர்ந்த ராஜேந்தர் படங்கள். நீங்கள் நம்பியே ஆகவேண்டும், 2007 இல் “வீராசாமி” பார்க்க துபையில் இருந்து சென்னை வந்தேன். ராஜேந்தர் சார் வேற லெவல். வாய்ப்பே இல்லை.
ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் அருமையான படங்கள். என்ன ஒரு அருமையான காலம். எளிமையான கதைகள். இளைய ராஜாவின் ஆக சிறந்த இசை. நினைத்து பாருங்கள். 20 வயது. கவலை ஒன்றும் இல்லை. பணத்தேவை அப்பாவின் கவலை.
என் வேலையெல்லாம் நன்கு சாப்பிட்டு தூங்கி நல்ல உடை உடுத்தி சினிமா பார்த்து நண்பர்களுடன் அரட்டை அடித்து ……. தேர்வுக்கு சற்று முன்னால் படித்து 75-80% எடுத்து நல்ல பெயரை தக்கவைத்துக்கொள்ளவேண்டியது. இந்த காலக்கட்டத்தில் பெரும்பாலான அரட்டைகள் ரஜினி கமல் படங்கள் பற்றியும் இளையராஜாவின் பாடல்கள் பற்றியும் தான். அப்புறம் எல்லா இளைஞர்கள் போல பெண்கள் பற்றியும்.

சில நேரங்களில் கொழுப்பு அதிகமாகி இரவுக்காட்சி செல்ல தூண்டும். என்ன பெரிய விஷயம் என்று நினைக்காதீர்கள். விடுதியில் கெடுபிடி அதிகம். மிக அதிகம். 8 மணிக்கு மேல் கதவுகள் பூட்டப்படும். விடுதி காப்பாளர் (Warden) ராமகிருஷ்ணா மடத்தின் துறவி. மரியாதையாக ஸ்வாமிஜி என்றுதான் அழைப்போம்.
சொல்லாமல் கொள்ளாமல் இரவு வந்து சோதனை செய்வார். தப்பி தவறி 2-3 மாணவர்கள் இல்லையென்றால் அவருக்கு தெரியும் “புள்ளைங்கோ” காமதேனுவுக்கோ (Luz Corner, Mylapore) கபாலிக்கோ (Mandaveli) இரவு காட்சிக்கு போய் இருக்குதுங்கோ என்று. பாவம் போனா போவுதுங்கோ என்று போவாரென்றால் இல்லை.
நாங்கள் படம் பார்க்க முழிப்போம். அவர் எங்களை பார்க்க முழித்திருப்பார். அதுவும் நாங்கள் பூட்டிய கதவின் மேல் ஏறி லுங்கி மாட்டாமல் லாவகமாக இறங்கும்போது நேராக முகத்தில் ஒளி பாய்ச்சி குறித்துக்கொள்வார். அதோடு நிற்காது அவர் கடமை. அடுத்த நாள் காலை நல்ல பூஜை செய்து வீட்டுக்கு அனுப்பிவிடுவார். (யு ப்ளடி ராஸ்கல்ஸ், கோ அண்ட் பிரிங் யுவர் பாதர்). என் ஞாபகத்தில் நான் மூன்று முறைதான் மாட்டியுள்ளேன்.

அப்பாவும் மூன்று முறையும் ஸ்வாமிஜி தரிசனம் செய்தார். இப்போது காமதேனுவும் இல்லை. கபாலியும் இல்லை. நைனாவும் இல்லை. அப்புறம் ஸ்வாமிஜி இருக்கிறார், நலமாக. எனக்கு எல்லாம் பசுமையாக நினைவிருக்கிறது. ஆண்டவன் கட்டளை (ஆறு மனமே ஆறு), அடிமை பெண் (அதோ அந்த பறவை போல, ஓடும் மேகங்களே), MGR, சிவாஜி …சலிக்காமல் பார்த்திருக்கிறேன், பல முறை.
இன்னொரு விஷயம் ஞாபகம் வருகிறது. நான் தனியாக முதல் முதல் பார்த்த படம் “ஆளுக்கொரு ஆசை”. என் 14வது வயதில். பேருந்து பிடித்து கடலூர் சென்று பார்த்தேன். முத்துராமன் ஜெயசித்ரா என்று நினைக்கிறேன். இன்னொரு முறை, என் மாமா (அக்கா வீட்டுக்காரர்) எங்கள் அனைவரையும் (அண்ணன் தம்பிகள்) “வாலிபமே வா வா” என்ற திரைப்படத்திற்கு அழைத்து சென்றது.
ஏதோதோ செய்து தீபாவளி அன்று அந்த கூட்டத்தில் டிக்கெட் வாங்கினார். வரக்கால்பட்டில் “கீற்று கொட்டகையில் ‘அதே கண்கள்” பார்த்து வியந்தது. என்ன ஒரு அருமையான காலங்கள், நினைவுகள்.

எத்தனை பேருக்கு தெரியும் என்று சொல்ல முடியாது. அப்போது “பேசும் படம்” என்ற சினிமா இதழ் (Magazine) மிக பிரபலம். கூடவே பொம்மை என்று இன்னொரு இதழ். பின்னர் சினிமா எக்ஸ்பிரஸ் வந்தது. எல்லாவற்றையும் எழுத்து விடாமல் படிப்பேன்.
சென்னை விட்டு மும்பை சென்றபோதும், மாதுங்காவில் நிறைய தமிழ் படங்கள் பார்த்திருக்கிறேன். என்ன, சாண்டா கிரூஸ் (வீடு அங்குதான்) மாதுங்கா நிறைய தொலைவு. அதனால் அடிக்கடி செல்ல மாட்டேன். ஆனால் செல்லும்தோறும் சவுத் இந்தியா கன்செர்ன்ஸில் நல்ல வாழை இல்லை சாப்பாடு, பின் படம். திரும்பும்போது தின தந்தி, விகடன் என தமிழ் இதழ்களோடு வீட்டுக்கு வந்து கவலை என்றால் கிலோ என்ன விலை என்று தூங்குவேன்.
துபாய் வந்த பிறகு சினிமா பார்ப்பது குறைந்து போனது. காரணம் ஸ்ட்ராண்ட் மற்றும் அல் நாசர் சினிமாக்கள் தான் தமிழ் மலையாள படங்களை திரையிடுவார்கள். அது சில காலத்திற்கு பிறகு மாறிப்போய் VOX அரங்குகள் நிறைய வந்து தமிழ் படங்கள் வெகுவாக வர ஆரம்பித்தன.
ஒரே மாற்றம்…எப்போது அரங்கிற்கு சென்றாலும் நான் நன்கு தூங்கிவிடுவேன். இடைவேளையின்போது மனைவி எழுப்பி “nachos” (சிற்றுண்டி) வாங்கி வர அனுப்புவார்கள். படம் முடிந்ததும் பத்திரமாக எழுப்பி வீட்டுக்கு அழைத்து செல்வார்கள்.

காலம் வெகு சீக்கிரம் சென்று விட்ட மாதிரி தோன்றுகிறது. 60 வயது…பிள்ளைகள் மற்றும் அவர்கள் குடும்பம் என்று மனம் எப்போதும் சுற்றி சுற்றி அவர்களைப் பற்றியே. தொடக்கம் முதல் இறுதி வரை சினிமா பார்த்து பல நாட்கள் ஆகிவிட்டன. லப்பர் பந்து, மகாராஜா மற்றும் அண்மைய டூரிஸ்ட் பேமிலி நான் மிகவும் ரசித்த படங்கள். முழுமையாக பார்த்தோம். திரை அரங்கில். இந்த படங்களுக்கு ‘ட்ரைலர் ரிலீஸ்’ ‘சாங் ரிலீஸ்’ ‘ப்ரோமோ’ என்று எதுவும் வந்ததாக நினைவில்லை.
நான் முதலிலேயே சொன்னேன். எனக்கு சில சமயங்களில் (உண்மையில் பல சமயங்களில்) வினோதமான ஆசைகள் வரும். என்னவோ தெரியவில்லை, கடந்த இரண்டு நாட்களாக ‘தக் லைப்’ படத்தின் ‘ப்ரோமோ’ விடீயோக்களை தேடி தேடி பார்த்துக்கொண்டிருக்கிறேன். Thug Life – 2, கங்குவா – 2 மற்றும் இந்தியன் – 3 எப்போது வருமோ?

பின் குறிப்பு: நான் என் பயணக்கதை எழுதுவதை நிறுத்தி 4 ஆண்டுகள் ஆகிவிட்டன. கடந்த மாதம் ஒரு வாசகி ஆஸ்திரேலியாவிலிருந்து மின் அஞ்சல் அனுப்பி விசாரித்தார். என்ன சார் எப்ப அடுத்து என்று. என் சகோதரர் நியூ ஜெர்சியில் அவர் நண்பரை நீண்ட நாள் கழித்து பார்க்கும்போது அவரும், ஏன் உன் தம்பி திரும்ப எழுதவில்லை, நன்கு சென்று கொண்டிருந்தது அவர் தொடர், என்று வினவியுள்ளார்.
பரங்கிப்பேட்டை வாசகர் அடிக்கடி தொடர்புகொண்டு நலம் விசாரிப்பார். ஏதோ நம்மையும் ஒரு ரெண்டு மூணு பேர் நினைத்துப்பார்க்கிறார்கள் என்று மகிழ்ச்சியாக உள்ளது.
Dec 21 – Jun 25 பெரிதாக எங்கும் செல்லவில்லை. செய்சல்ஸ் (Seychelles) மற்றும் செர்பியா (Serbia) தவிர. என் குடும்ப உறுப்பினர்களை பார்க்க கனடா மற்றும் அயர்லாந்து தான் சென்று வந்தேன்.
இந்தியாவில் பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய இருக்கின்றன. பாப்போம். சொல்ல மறந்துவிட்டேன். இந்த வருடம் மார்ச் மாதம் ஷிர்டி, டெல்லி, வாரணாசி, மதுரா, அயோத்தி மற்றும் திருப்பதி சென்று வந்தோம். சுவாரஸ்யமான பயணம் மற்றும் அனுபவங்கள்.
My Vikatan-க்கு உங்களது `சுற்றுலா’ கட்டுரை

இனி வாசகர்கள் விகடன் அறிவிக்கும் மாதாந்திர தலைப்பை மையப்படுத்தி கட்டுரைகள் அனுப்பலாம்.
இந்த மாதத்திற்கான தலைப்பு – `சுற்றுலா’. சுற்றுலா என்கிற தலைப்பில் My Vikatanக்கு உங்களது கட்டுரை படைப்புகளை அனுப்பலாம். நீங்க சுற்றுலா போன அனுபவமாக இருக்கலாம், பார்க்க வேண்டிய தலங்களாக இருக்கலாம், சுற்றுலா போகும் போது செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்த தகவல்களாகவும் இருக்கலாம். ஆனால், உங்களின் சொந்த படைப்பாக, இதுவரை எந்த தளத்திலும் வெளிவராத படைப்பாக இருக்க வேண்டும், புகைப்படங்களுடன் அனுப்பவேண்டும். தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் அனைத்தும் பிரசுரம் ஆகும்.
வாசகர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில், இந்த மாதம் அனுப்பப்படும் பயணக் கட்டுரைகளில் சிறந்த கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.
பரிசுத்தொகை விவரம்:
-
முதல் பரிசு : ரூ. 2,500 (2 வெற்றியாளர்கள்)
-
இரண்டாம் பரிசு : ரூ. 1000 (5 வெற்றியாளர்கள்)
-
நினைவுப் பரிசு: ₹500 (10 வெற்றியாளர்கள்)
நினைவில் கொள்க:
-
நீங்க கட்டுரையை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஜூன் 20, 2025
-
ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை அனுப்பலாம்.
-
உங்கள் படைப்புகளை: my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்
-
விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்
-
உங்கள் படைப்பை திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது.
-
கட்டுரையின் தரத்தின் அடிப்படையில் வெற்றியாளர்கள் விகடன் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.