
00″கடந்த வாரம் அதிபர் ட்ரம்ப் குறித்து நான் போட்ட பதிவுகளுக்கு வருத்தமடைகிறேன். அவை மிகவும் எல்லை மீறிவிட்டன’ – இது நேற்று எலான் மஸ்க் போட்ட பதிவு. ‘என்னதிது…?’ என்று இந்தப் போஸ்ட் பெரும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் கிளப்பியது.
ஏன் இந்தத் திடீர் முடிவு?
கடந்த வாரம் முழுவதும் ட்ரம்பை தொடர்ந்து சாடி வந்த எலான் மஸ்க் திடீர் அந்தர்பல்டி அடித்ததுதான் இந்த ஆச்சரியம் மற்றும் அதிர்ச்சிக்கு காரணம்.
எலான் மஸ்க்கின் அதிரடி பதிவுகளால், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எலான் மஸ்க் நிறுவனங்களுக்கு அரசு கொடுத்து வரும் ஆதரவுகளை நிறுத்தும் என்று எச்சரித்தார். இன்னொரு பக்கம், ட்ரம்பை விமர்சித்ததில் இருந்து டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பங்குகள் சரியத் தொடங்கின.
இதனையடுத்து, அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி வான்ஸ், வெள்ளை மாளிகை தலைமைப் பணியாளர் சூசிவைல்ஸ், மற்றும் கிரிப்டோ ஆலோசகர் டேவிட்சாக்ஸ் ஆகியோர் எலான் மஸ்கை அழைத்து, இந்தப் பிரச்னையை சரி செய்யுமாறு பேசியிருக்கிறார்கள். இதனையடுத்து, எலான் மஸ்க் கடந்த திங்கட்கிழமை (ஜூன் 9) ட்ரம்ப் உடன் தொலைபேசியில் பேசியிருக்கிறார். இதன் விளைவு தான் இந்தப் போஸ்ட் என்று தகவல்கள் கூறுகின்றன.
இன்னும் என்ன?
வருத்தம் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், ‘ஒன் பிக் அண்ட் பியூட்டிஃபுல் பில்’லின் விமர்சனம் தவிர, ட்ரம்பை கடுமையாக சாடி இருந்த அனைத்து பதிவுகளையும் எலான் மஸ்க் நீக்கிவிட்டார்.
தற்போது சரிந்த எலான் மஸ்க் நிறுவன பங்குகள் ஏறுமுகத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளன.
ட்ரம்ப் என்ன சொல்கிறார்?
எலான் மஸ்க்கின் இந்தக் கருத்து குறித்து நேற்று ட்ரம்பிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘எலான் மஸ்க் ஒரு பில்லிற்காக இவ்வளவு தூரம் செல்வார் என்று நான் நினைக்கவில்லை. மஸ்க் தான் பேசியதற்கு வருந்துகிறார் என்று நினைக்கிறேன். அவருக்கு மன்னிப்பு உண்டு’ என்று பதிலளித்துள்ளார்.
சமாதானம் எல்லாம் சரிதான்… மீண்டும் பழைய நட்பு தொடருமா?!