
தமிழகத்தையே உலுக்கிய கள்ளக்குறிச்சி விஷச் சாராய உயிரிழப்பு சம்பவம் நடைபெற்று எதிர்வரும் 18-ம் தேதியோடு ஓராண்டு நிறைவு பெறுகிறது. கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில், கடந்தாண்டு ஜூன் 18-ம் தேதி மெத்தனால் கலந்த விஷச் சாராயம் அருந்திய 229 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 69 பேர் உயிரிழந்தனர். 160 பேர் சிகிச்சைப் பெற்றதில் சிலர் கண்பார்வை இழந்துள்ளனர். விஷச் சாராயம் விற்பனை செய்தது, கடத்தியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில் 21 பேர் கைது செய்யப்பட்டு, ஒருவரை தவிர மற்றவர்கள் ஜாமீனில் வெளி வந்துள்ளனர். இதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் நிவாரணமாக ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.
கள்ள சந்தையில் மது… – இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் நிலை குறித்து அறிய கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் வசித்து வருவர்களை சந்தித்தபோது, நம்மை எதிர்நோக்கிய சத்யா என்ற பெண், “கடந்தாண்டு ஒரு களேபரமாக காட்சியளித்த பகுதியில் தற்போது கள்ளச் சாரய விற்பனை இல்லை. இது நிம்மதியாக இருக்கிறது. ஆனால் இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 10 மணி வரை மது பாட்டில் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது. ‘கைப்பழக்கம் சுடுகாடு வரை’ என்பது போலவே வேறு வழியில் மது பழக்கமும், புழக்கமும் இருக்கிறது” என்று கவலையுடன் தெரிவித்தார்.