• June 12, 2025
  • NewsEditor
  • 0

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “நெற் களஞ்சியம் டெல்டா மாவட்டங்கள் என்றால் அதற்கு ஜீவநாடி காவிரி நீர்தான். அந்த காவிரியைத் தேக்கி வைத்து கொண்டிருக்கக்கூடிய மேட்டூர் அணையை கடந்த 4 ஆண்டுகளாக குறித்த நேரத்தில் திறந்து வைத்து விவசாயிகளின் வயிற்றில் பால் வார்த்துள்ளோம். பொங்கி வரும் காவேரி போல உங்களைப் பார்க்கும் போது மகிழ்ச்சி பொங்குகிறது. விவசாயிகளுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்துவது போல ஒரு அறிவிப்பு வெளியிடுகிறேன். ஒரு குவிண்டால் நெல்லுக்கு இனி ரூ.2500 பெறுவார்கள். அதற்கேற்றார் போல சாதாரண ரகத்துக்கு ரூ.131, சன்ன ரகத்திற்கு ரூ.156 எனவும் உயர்த்தி வழங்கப்படும். இதன்மூலம் சாதாரண ரகத்திற்கு ரூ.2500, சன்ன ரகத்திற்கு ரூ.2540-ம் விவசாயிகளுக்கு கிடைக்கும். இந்த அறிவிப்பின் மூலம் 10 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள்.

சேலம் மாவட்டம் பாலமலை, ஜருகுமலை, பச்சமலை என மலைகள் சூழ்ந்துள்ளது. மலைகளைப் போல அரசுத் திட்டங்களை வழங்குவதில் பெருமையடைகிறேன். திமுக ஆட்சியில் சேலம் மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். சேலம் உருக்காலை, சேலம் ரயில்வே கோட்டம், பாதாள சாக்கடைத் திட்டம், பெரியார் பல்கலைக்கழகம், ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள், நான்குவழிச்சாலை, விமானச் சேவை என கணக்கற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் அமித்ஷா மதுரைக்கு வந்து பேசினார். அவர் அரசியல் மட்டும் பேசியிருந்தால் நான் அரசு விழாவில் பேசியிருக்க மாட்டேன். திமுக ஆட்சியில் எதுவும் செய்யவில்லை என குறை கூறியிருக்கிறார். அவருடைய ஆத்திரத்தை கொட்டித் தீர்த்திருக்கிறார். மத்திய அரசின் திட்டங்களை மடைமாற்றி திமுக அரசு தன்னுடைய திட்டங்களாக மாற்றி விட்டதாக அவர் கூறியுள்ளார். மத்திய அரசு திட்டத்திலும், மாநில அரசுதான் கூடுதல் நிதி தருகிறது. பிரதமர் பேரில் உள்ள திட்டத்திற்கு கூட மாநில அரசுதான் 50 சதவீதம் நிதி தருகிறது. படையப்பா திரைப்படத்தில் வருவது போல மாப்பிள்ளை போட்டிருக்கிற சட்டை என்னுடையது இல்லை என்று வருவது போல, மத்திய அரசு திட்டத்திற்கு மாநில அரசுதான் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. ஆனால் மத்திய அமைச்சர் அமித்ஷா பிளேட்டை திருப்பி போட்டு பேசியுள்ளார்.

மதுரை வந்த அமைச்சர் அமித்ஷா 10 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு அறிவித்த எய்ம்ஸ் மருத்துவமனை என்ன ஆனது என்று பார்க்கவில்லை. ஆனால் திமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் மதுரையில் செய்யப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளாக கட்ட அது என்ன விண்வெளி ஆராய்ச்சி மையமா? உரிய நிதி ஒதுக்கி இருந்தால் 2 ஆண்டுகளில் எய்ம்ஸ் கட்டுமானப் பணி முடிந்திருக்கும். 9 ஆண்டுகால ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் தமிழ்நாட்டிற்கு நாங்கள் செய்த சாதனையை சொல்ல தயாராக உள்ளோம். ஆனால் 11 வருடங்களாக நீங்கள் செய்த சாதனைகளை கேட்டாலும் நீங்கள் சொல்வதில்லை. ஆண்டுகள் பல கடந்த நிலையில், பணத்தின் மதிப்பு உயர்ந்து விட்டது.

மதுரையின் தொன்மையை நிராகரித்து மத்திய அமைச்சர் ஷெகாவத் பேசியுள்ளார். கீழடி ஆய்வறிக்கையை நிராகரிக்க வேண்டும் என அவர் சொல்லியுள்ளார். அதன் தொன்மையை அழிக்க மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் தலையாட்டி பொம்மை போல அவர்கள் அருகில் உள்ளார். தமிழ்நாட்டிற்கும், தமிழ் பண்பாட்டிற்கும் எதிராக உள்ள பாஜகவையும், அவர்களின் கூட்டணியையும் தமிழ்மக்கள் தொடர்ந்து புறக்கணித்து வருகிறார்கள். அதிமுக ஆட்சியின் போது, பாஜகவை எதிர்த்து எதையும் செய்யவில்லை. பாஜக கூட்டணி ஆட்சி அமையும் என மத்திய அமைச்சர் அமித்ஷா நேரடியாக சொல்லியபிறகும் சுயநலத்திற்காக சொந்த கட்சியை அடகு வைத்து அதிமுகவினர் வாய் மூடி உள்ளனர். ஆனால் மக்கள் தெளிவாக உள்ளனர். உங்களிடம் மீண்டும் அவர்கள் ஏமாற மாட்டார்கள். தமிழர்கள் சுயமரியாதை உள்ளவர்கள். டெல்லியில் இருந்து தமிழ்நாட்டை ஆள நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இப்போது இருப்பது போல 2026-லும் மக்கள் எங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். மக்களுக்கு ஆதரவாக நாங்கள் இருப்போம்” என்று பேசினார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *