கடந்த சில மாதங்களாகவே, பாமகவில் உள்கட்சி பூசல் அவ்வப்போது வெடித்துகொண்டு வருகிறது. இளைஞரணி தலைவர் பதவியில் தொடங்கிய மோதல் இப்போது தலைவர் பதவிக்கு வந்து நிற்கிறது.
கடந்த டிசம்பர் மாதம், பா.ம.கவின் சிறப்பு புத்தாண்டு பொதுக்குழு கூட்டத்தில், தன்னுடைய மகள் வழி பேரனான முகுந்தனை பாமகவின் இளைஞரணி தலைவராக அறிவித்தார் பாமக நிறுவனர் ராமதாஸ். இதற்கு மேடையிலேயே கடும் எதிர்ப்புகளை தெரிவித்திருந்தார் பாமக தலைவர் அன்புமணி.
இந்த முட்டல், மோதல் தொடர, கடந்த ஏப்ரல் மாதம், ‘இனி நானே பாமகவின் தலைவர்’ என்று பரபரப்பை கிளப்பினார் ராமதாஸ். இதற்கு இடையில் ஏகப்பட்ட சமாதான பேச்சுவார்த்தைகள் நடக்க, எதுவும் கைக்கொடுக்கவில்லை.
கடந்த வாரம் கூட, தைலாபுரத்திற்கு சென்று அன்புமணி தனது தந்தையுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அன்புமணிக்கு அடுத்து, அதே நாளில் ஆடிட்டர் குருமூர்த்தி, சைதை துரைசாமியும் தைலாபுரத்திற்கு சென்று, ராமதாஸுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ் பேசியவற்றில் முக்கிய 10 பாயிண்டுகள்…
1. ஆடிட்டர் குருமூர்த்தி – சைதை துரைசாமி நடத்திய சமாதான பேச்சுவார்த்தையின் ரிசல்ட் ‘டிரா’.
2. ‘மாநாட்டு மேடையிலேயே அன்புமணிக்கு தலைவர் பதவியை தருகிறேன்’ என்று கௌரவ தலைவர் மற்றும் சமூக முன்னேற்ற சங்கத்தின் தலைவரை அன்புமணியிடன் பேச அனுப்ப முயன்றேன். ஆனால், அவர் நேரில் சந்திக்க மறுத்துவிட்டார். அதனால் தான், எனக்கு கோபம் வந்தது.
3. ‘கொள்ளுபேரன்களோடு விளையாட்டு..’ என்று என்னால் இருக்க முடியாது. 46 ஆண்டுகளாக மக்களோடு பழகி வருகிறேன். அதை நான் தொடர வேண்டும்.
4. இன்னும் ஓரிரு ஆண்டுகளுக்கு தலைவராக இருந்துகொள்கிறேன். அதற்கு எனக்கு உரிமை இல்லையா?
5. தேர்தலுக்கு பிறகு, அன்புமணி தலைவர் பதவி உள்பட அனைத்தையும் எடுத்துகொள்ளட்டும். 40 – 50 தொகுதிகளில் நாம் வலுவாக இருந்தால் தான் கூட்டணி பேச முடியும். வெற்றி பெற முடியும்.
6.பிரதமர் மோடியின் பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ள நான், ஜி.கே. மணி மற்றும் அன்புமணி சென்றபோதே, அவருக்கு கட்சியை எடுத்துகொள்ள வேண்டும் என்று எண்ணம்.

7. சௌமியா பேசியதற்கு இணங்க, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, அன்புமணிக்கு முடிசூட்டு விழா நடத்தப்பட்டது. ஆனால், என் குடும்பத்து பெண்கள் அரசியல் மற்றும் கட்சி சம்பந்தமான விஷயங்களில் ஈடுபடுவதை நான் விரும்பவில்லை.
8. அன்புமணி என் பேச்சை கேட்காமல் இருப்பதற்கு பாஜக பின்புலம் கிடையாது.
9. எந்தக் கட்சி உடன் கூட்டணி என்பதை நானே முடிவு செய்வேன். இப்போதைக்கு தவெக உடன் இதுவரை கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை. இதுகுறித்து கட்சியின் தலைவர்கள் இணைந்து முடிவு செய்வோம்.
10. கண்டிப்பாக, அன்புமணியை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கமாட்டேன்”.