
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ஐஷ்பாக் ஸ்டேடியத்திற்கு அருகில் ஒரு பாலம் கட்டப்பட்டு வருகிறது. மார்ச் 2023-ல் கட்டுமானப் பணிகள் தொடங்கிய நிலையில், 648 மீட்டர் நீளம், 8.5 மீட்டர் அகலம் கொண்ட இந்த மேம்பாலம் 36 மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் கட்டிமுடிக்கப்படவில்லை. அதற்குள் பல்வேறு விமர்சனங்களை எதிர்க்கொண்டிருக்கிறது.
பொதுவாக பாலம் ‘ட’ வடிவில் கட்டப்படாது. குறிப்பாக லாரி. பேருந்து போன்ற பெரிய வாகனகள் ‘ட’ வடிவிலான இடங்களில் திரும்புவது மிகவும் சிரமம். அதனால், வளைவாகவே கட்டப்படும்.
ஆனால், போபாலில் கட்டப்பட்டிருக்கும் இந்தப் பாலம் 90 டிகிரி திருப்பத்துடன் கட்டப்பட்டிருக்கிறது. ரூ.18 கோடியில் கட்டப்பட்ட இந்தப் பாலத்தை பயன்படுத்த முடியாத சூழல் நிலவுவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தனர்.
இது தொடர்பாக பேசிய மத்தியப் பிரதேச பொதுப்பணித்துறை அமைச்சர் ராகேஷ் சிங், “ஒரு பாலம் கட்டப்படும்போதெல்லாம், நிறைய தொழில்நுட்ப பரிசீலனைகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. தற்போது கட்டப்பட்டிருக்கும் பாலம் தொடர்பாக இருக்கும் குற்றச்சாட்டுகளைப் பரிசீலிப்போம். ஆனால், காங்கிரஸ் இதை அரசியலாக்குகிறது. அதன் நோக்கம் தவறானது.” என்றார்.
இந்த மேம்பாலம், மஹாமாய் கா பாக், புஷ்பா நகர், ரயில் நிலையத்தின் நெரிசல் மிகுந்த பகுதிகளை நியூ போபாலுடன் இணைக்கும் திட்டமாக கருதப்பட்டது. ரயில்வே கிராசிங்குகளில் காத்திருப்பதையும், போக்குவரத்து நெரிசலையும் தவிர்க்க கட்டப்பட்ட இந்தப் பாலத்தில் தினமும் சுமார் மூன்று லட்சம் மக்கள் பயன்பெறுவார்கள் எனக் கூறப்பட்டது.
இது தொடர்பாக பொதுப்பணித் துறையின் (பாலத் துறை) தலைமைப் பொறியாளர் வி.டி. வர்மா, “மெட்ரோ நிலையம் காரணமாக, அந்தப் பகுதியில் நிலம் குறைவாகவே கிடைத்தது. நிலம் இல்லாததால், வேறு வழியில்லாமல் பாலத்தை சுருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த மேம்பாலத்தில் இலகுரக வாகனங்கள் மட்டுமே இயக்கப்படும். கனரக வாகனங்கள் அனுமதிக்கப்படாது” என்றார்.