
திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே கூவம் ஆற்றின் குறுக்கே சேதமடைந்துள்ள வரதராஜநகர் – மணவாளநகர் பாலத்தில் ஆபத்தை உணராமல் இரு சக்கர வாகன ஓட்டிகள் பயணித்து வருகின்றனர். ஆகவே, அப்பாலத்தை அகற்றிவிட்டு, புதிதாக தரைப்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து, அவர்கள் தெரிவித்ததாவது: திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பெரியகுப்பம், வரதராஜநகர்- மணவாளநகர் ஆகிய பகுதிகளுக்கு இடையே கூவம் ஆற்றின் குறுக்கே சுமார் 300 மீட்டர் நீளமுள்ள பாலம் உள்ளது. சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலான பழமையான இப்பாலத்தையும், பாலம் அருகே இருந்த ரயில்வே கடவுப்பாதையையும் கடந்துதான் திருவள்ளூரிலிருந்து, ஸ்ரீபெரும்புதூர், பூந்தமல்லி மற்றும் சென்னை பகுதிகளுக்கு, பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் சென்று வந்தன.