
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த ஜனவரி மாதம் மகா கும்பமேளா நடைபெற்றது. ஜனவரி 29-ம் தேதி மெளனி அமாவாசை தினத்தில் புனித நீராட கோடிக்கணக்கான மக்கள் அங்கு குவிந்தனா்.
அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 37 போ் உயிரிழந்ததாகவும் 60-க்கும் மேற்பட்டோா் காயமடைந்ததாகவும் உத்தரப்பிரதேச அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சமாஜ்வாதி தலைவரும் எம்.பி.யுமான அகிலேஷ் யாதவ் மக்களவையில் பேசியபோது, “மகா கும்பமேளாவில் உயிரிழந்தோா் எண்ணிக்கையை மத்திய அரசும், மாநில அரசும் மூடி மறைக்கிறது. இச்சம்பவம் தொடா்பான விவரங்கள் நாடாளுமன்றத்தில் சமா்ப்பிக்கப்பட வேண்டும்.” எனப் பேசினார்.
இதற்கிடையில், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இன்னும் இழப்பீடு வழங்கவில்லை என அலாகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகள் சௌமித்ரா தயாள் சிங், சந்தீப் ஜெயின் அமர்வு, “கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டியது அரசின் கடமை. அதை இன்னும் ஏன் நிறைவேற்றவில்லை?
இறந்தவர்களின் உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்ததும் கண்டனத்துக்குரியது. மக்களின் துயரத்தைப் பற்றி மாநில அரசுக்கு அக்கறையில்லை என்றே நாங்கள் கருதுகிறோம்.
கும்பமேளாவில் இறந்தவர்களின் விவரங்கள், அவர்களுக்கு செலுத்தப்பட்ட, செலுத்தப்பட வேண்டிய இழப்பீடு தொகை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டு இந்த வழக்கின் அடுத்த விசாரணையை ஜூலை 18-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இந்த நிலையில்தான் பிபிசி இந்தி கும்பமேளாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 37 அல்ல, 80 என அதிர்ச்சிகரச் செய்தியை வெளியிட்டிருக்கிறது.

பிபிசியின் செய்தியைக் குறிப்பிட்ட காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தன் எக்ஸ் பக்கத்தில், “கும்பமேளா கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் புள்ளிவிவரங்கள் மறைக்கப்பட்டதாக பிபிசி செய்தி வெளியிட்டிருக்கிறது.
கொரோனா தொற்றின் போது ஏழைகளின் உடல்கள் புள்ளிவிவரங்களிலிருந்து அழிக்கப்பட்டது. ஒவ்வொரு பெரிய ரயில் விபத்துக்குப் பிறகும் உண்மை மறைக்கப்படுகிறது. இதுதான் பா.ஜ.க-வின் மாதிரி அரசியல். ஏழைகளின் மரணங்கள் கணக்கிடப்படுவதுமில்லை, அதற்கு பொறுப்புக் கூறப்படுவதுமில்லை.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், “ஜனவரி 29 அன்று மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்து உத்தரபிரதேச அரசு பொய்க் கூறுவதாக, உண்மையை மறைப்பதாக முன்னரே குறிப்பிட்டிருந்தேன். தவறான புள்ளிவிவரங்களை வழங்கி மக்களின் நம்பிக்கையை சிதைப்பவர்கள், பொதுமக்களின் நம்பிக்கைக்கு தகுதியற்றவர்கள்” என்றார்.