
நெல்லையில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், தி.மு.கவின் கூட்டணிக் கட்சிகளோடு பா.ஜ.க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு நேரடியாக பதிலளிக்க மறுத்த அப்பாவு, “இறுதிவரை இ.பி.எஸ் அவர்களோடு இருப்பாரா என்று பார்ப்போம்” எனக் கூறினார். மேலும், “அவர் நல்ல முடிவெடுத்துவிட்டார்.
மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் சுயமாக சிந்திக்கக்கூடியவர், விரைவில் நல்ல முடிவை எடுப்பார். பொறுத்திருந்து பாருங்கள்” என்றும் கூறினார்.
அப்பாவுவின் இந்த கருத்துகள், அ.தி.மு.கவில் நிலவும் உட்கட்சிப் பூசலையும், எதிர்காலத்தில் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் நிலைப்பாடு குறித்தும் பல்வேறு யூகங்களை எழுப்பியுள்ளன.
அ.தி.மு.கவில் ஒற்றைத் தலைமைக்கு பிறகு, எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் நெருங்கிய உறவு கொண்டிருப்பதாக கருதப்படும் நிலையில், அப்பாவுவின் இந்தப் பேச்சு முக்கியத்துவம் பெறுகிறது. “சுயமாக சிந்திக்கக்கூடியவர் விரைவில் நல்ல முடிவை எடுப்பார்” என்ற அவரது கூற்று, எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க கூட்டணியில் இருந்து விலகி வேறு ஏதேனும் முடிவை எடுக்க வாய்ப்புள்ளதா என்ற கேள்வியையும் எழுப்புகிறது.

தமிழக அரசியல் சூழலில், மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பா.ஜ.கவின் அடுத்தகட்ட நகர்வுகள் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய சூழலில், சட்டப்பேரவை தலைவர் அப்பாவுவின் இந்த கருத்துக்கள், தமிழக அரசியல் களத்தில் மேலும் பல விவாதங்களை கிளப்பியுள்ளது.