• June 12, 2025
  • NewsEditor
  • 0

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

 தீபாவளி என்றாலே, வீட்டில் கண்டிப்பாக கேதார கௌரி விரதம் இருந்து, நோன்பு எடுக்க வேண்டும் என்பது பரம்பரைப் பழக்கம் என்பதால் எப்பொழுதும் தீபாவளி சமயத்தில்  வீட்டை விட்டு வெளியூர் செல்லுவதெல்லாம் முற்றிலுமாக இல்லை.

ஆனால், 2024 ஆம் வருட தீபாவளி அத்தனை சட்டதிட்டங்களையும் கட்டுப்பாடுகளையும் புயலாக மாறி உடைத்தெறிந்து, எங்களையும் அள்ளிக்கொண்டு சென்று குலு மணாலியில் வீசியெறிந்தது.

ஆம், நாங்கள் 2024 ஆம் வருட தீபாவளியை மணாலியில் கொண்டாடினோம். காரணம் கொஞ்சம் கொசுவத்தியைச் சுற்றவிடுவோம்.

2024 ,மே மாதம்  மருத்துவ அறிக்கை எனக்கு நுரையீரல் புற்றுநோய்  இருப்பதை உறுதிப்படுத்தியது. பல்வேறு தேடல்கள்,ஆராய்ச்சிகள், விவாதங்களுக்குப்  பிறகு புரோட்டான் தெரபி எடுக்கத் தொடங்கினேன்.

கீமோ,ரேடியேஷன் சிகிச்சைக்குப் பிறகு ஒரு மாதம் கழித்து  சி.டி ஸ்கேன் ( CT scan). அதன் ரிப்போர்ட்  வருவதற்குள்ளும் வந்த பிறகும் டாக்டரிடம் செல்வதற்குள்ளாக அத்தனை அழுகை,வலி,வேதனை என் கணவருக்கும் இரு மகன்களுக்கும். எனக்குச் சொல்லாமலேயே. 

மீண்டும் இரண்டு மாத இடைவெளி…….  பெட் ஸ்கேன்  (PET scan) …… இந்த முறை சூழலை என் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தேன். பிடிவாதமாய் நின்றேன். விளைவு….. மலைபிரதேசமா?….. குளிரும்!!!!…. சளி பிடிக்கக் கூடாதே….. இவ்வளவு தூரம் போக வேண்டுமா? …… திடீரென உடம்பு சரியில்லாமல் போனால் என்ன செய்வது… நோ… நோ….என்ற அலறல்களுக்கிடையே  பெட் ஸ்கேன் எடுத்த அன்று இரவே  விமானத்தில் டெல்லிக்குப் பறந்தோம் நால்வரும்.

நள்ளிரவு . மிதமான குளிரோடு எங்களை வரவேற்றது, டெல்லி. நாங்கள் பதிவு செய்திருந்த கார், தமிழ் பேசும் காரோட்டி உதவியுடன் மணாலி நோக்கி எங்கள் பயணம் தொடங்கியது. அடுத்த நாள் மதியம் மணாலியை அடைந்தோம். நீண்ட பயணத்தின் காரணமாக விடுதியில் ஓய்வு எடுக்க அறிவுறுத்தப்பட்டது. (  அறிவுரை உபயம்: எம். பி. பி. எஸ் முடித்த என் மூத்த மகன்).

ஆனால் ஓய்வெடுக்கவோ உறங்கவோ  ஜன்னல் வழியாகத்  தெரிந்த மலைகள் விடவில்லை. மாலை நேரம் மால் ரோட்டில்   நடை போட்டோம். ஏழு சுவை ஐஸ்க்ரீம்,சுடச்சுட குலோப்ஜாமூன் என மணாலி மால் ரோட்  ஸ்பெஷல்களை டேஸ்ட் பார்த்தோம். அடுத்த நாள் தீபாவளி என்பதால் விதவிதமான இனிப்புகளும் பூக்களும் ஆடைகளும் குவிந்து கிடந்தன. நான் நீர் ஊற்றினால் எரியக்கூடிய விளக்குகள் இரண்டும் கொஞ்சம் பூவும் சந்தடியின்றி வாங்கிக் கொண்டேன். ( தீபாவளி நோன்புக்காக).

 அடுத்த நாள் தீபாவளி. ஐந்தரை மணிக்கெல்லாம் எழுந்து உறைந்து போய்விடுவோமோ  என அச்சமூட்டிய  குளிரின் நடுவே குளித்து ,நோன்பு எடுப்பதற்கான  வேலையைத் தொடங்கினேன்.  ஹோட்டல் ரூமிலேயே கலசம் வைத்து, விளக்கேற்றி, 21  கோலங்கள்  போட்டு அவற்றிற்கெனத் தயாரிக்கப்பட்ட வண்ணங்களால் அலங்கரித்து முடித்தேன்.

மற்ற மூவரையும் எழுப்ப, இதையெல்லாம் எப்படி பிளைட்டில் எடுத்து வந்தாய்?,விளக்கு ஏது? ஹோட்டல்காரன்  பார்த்தால் பில்லி சூனியம் செய்யறதா நெனைக்கப்போறான் என கேள்விகளோடும் கேலிகளோடும் எனது முப்பதாவது ஆண்டு நோன்பினை  எடுத்து முடித்தேன்.( முதல் முறையாக  வெளியிடத்தில்) . இருள் பிரியா விடியற்காலையும் ஜன்னல் வழியாக தெரிந்த இமயமலைச்சாரலும் இதமான மனநிறைவைத் தந்தன என்பது   மறுக்க முடியாத உண்மை.

 நாங்கள் புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிந்த பிறகு தங்கியிருந்த விடுதியில் எங்களுக்காக சிறப்பான தென்னிந்திய உணவு வகைகளைச் செய்து கொடுத்து அசத்தினர். தீபாவளிக்காக ஸ்பெஷல் கேக் வேறு அறைக்கே வந்தது. காலை உணவுக்குப்  பிறகு  தொடங்கிய எங்கள் பயணம் அட்டல் சுரங்கப்பாதை வழியாக சிசு பள்ளத்தாக்கைச் சென்று அடைந்தது.

பனி மலைகளும் பளிங்கு நீர்நிலைகளும் எங்களைச்  சிறு பிள்ளைகளாக மாற்றின.சோலங் பள்ளத்தாக்கில் பாராக்ளைடிங் தொடங்கி அத்தனை விளையாட்டுகளிலும் கலந்து கொள்ள வைத்தன. இதில் நான் மட்டும் மேற்கொண்ட  யாக்  ரைடிங்கில் நான் பாவம்; அந்த யாக்  ரொம்ப ரொம்ப பாவம்!

  வசிஷ்டா  வெந்நீர் ஊற்று, ஹிடும்பா கோவில் என அன்றைய நாள் முடிந்தது. மறுநாள் இரண்டரை மணிநேரம் குலுவில்  பியாஸ் நதியில் மேற்கொண்ட சாகசப்பயணம்  வாழ்க்கையைப் போலவே யூகிக்க முடியாத சுவாரசியமாய் இருந்து.பச்சையும் நீலமும் கலந்த மரகத மணிபோல் மின்னிய பியாஸ் நதியில் நீச்சல் அடித்த என் இளைய மகன் ஜெர்ரியிடம் அடிவாங்கிய டாம் போல வெளியே வந்தான்!

 அன்று மதியம் சிம்லா செல்லலாம் என முடிவு செய்து ஒரு நீண்ட பயணம். அடுத்த நாள் சிம்லாவில் சுற்றுலாத்தலங்களைப் பார்ப்பதாகத் திட்டம். ஆனால்,மணாலியில்  பனிப்பொழிவினைச்  சமாளித்த என்னால் சிம்லாவின்  சரிவான மலைப்பாதைகளைக்  கடக்கவே முடியவில்லை.

பத்தடி நடந்தால் என் நுரையீரல் காற்றுக்காகத் தவித்தது. நடக்கவே முடியாமல் திணறினேன்.ஒரு ராணுவ வீரரின் உதவியால் ஜனாதிபதி மாளிகையைப் பார்த்தோம். தி ரிட்ஜ் பகுதியில்  சூரிய அஸ்தமனம் பார்த்தோம். மற்ற இடங்களுக்குச் சென்றாலும் என் உடல் நிலையின் காரணமாக முழுமையாகப் பார்க்க முடியவில்லை. டெல்லி திரும்பலாம் என முடிவு செய்து கிளம்பினோம்.

 காரில் ஏறப்போகும் சமயம்,   மொபைல் நோட்டிஃபிகேஷன் பெட் ஸ்கேன் ரிப்போர்ட் வந்துவிட்டதை உறுதிப்படுத்தியது. மருத்துவருக்கு உரிய நிதானத்துடன் என் மகன் ரிப்போர்ட்டைப் படிக்கத்தொடங்கினான்.

மனதில் பதட்டம் இருந்தாலும் ஏதோ  ஒரு நம்பிக்கை. அதனை உறுதிப்படுத்துவது போல் என் கைகளைப் பிடித்து வாழ்த்தினான்  என் மகன்; கங்கிராட்ஸ் அம்மா! ஜெயிக்க ஆரம்பிச்சிட்டீங்க…… என்ற அவனின் குரலில் மகனுக்குரிய  மகிழ்ச்சி. ஆம். கடந்து சென்ற ஆறு மாதங்களில் முதல்முறையாக ரிப்போர்ட்டில் நம்பிக்கை வெளிச்சம். நட்டநடு வீதியில் மீண்டும் உற்சாகம்…. எங்கள் பயணம் யூ- டர்ன் போட்டு ஆக்ராவில் நின்றது.

       பனி விழும் அதிகாலை, வரலாறு உறைந்து கிடக்கும் வீதிகள், உற்சாகமாய் நடைபோடும் பலதரப்பட்ட மக்கள் ,மௌனமாய் பேசும் கோட்டை மதில்கள், சலசலத்து சற்றே குறைவாய் ஓடும் யமுனை இவற்றின் நடுவே அன்பின் சாட்சியாய் உயர்ந்து நிற்கும் தாஜ்மஹால்……..அற்புதம்…..தெய்வீகம்…

                   ஆக்ராவோடு எங்கள் நான்கு நாள் சுற்றுலாப் பயணம் முடிந்தது. எத்தனையோ பயணங்கள் சென்றிருந்தாலும் நம்பிக்கைகளும் எண்ணங்களும் காற்றில் மிதக்கும் இறகுகள் அல்ல; வாழ்க்கையைக் கடக்க உதவும் சிறகுகள் என உணரவைத்த இந்த சுற்றுலா எங்களுக்கு ரொம்பரொம்ப ஸ்பெஷல்.          

My Vikatan-க்கு உங்களது `சுற்றுலா’ கட்டுரை

டூர்

இனி வாசகர்கள் விகடன் அறிவிக்கும் மாதாந்திர தலைப்பை மையப்படுத்தி கட்டுரைகள் அனுப்பலாம்.

இந்த மாதத்திற்கான தலைப்பு – `சுற்றுலா’. சுற்றுலா என்கிற தலைப்பில் My Vikatanக்கு உங்களது கட்டுரை படைப்புகளை அனுப்பலாம். நீங்க சுற்றுலா போன அனுபவமாக இருக்கலாம், பார்க்க வேண்டிய தலங்களாக இருக்கலாம், சுற்றுலா போகும் போது செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்த தகவல்களாகவும் இருக்கலாம். ஆனால், உங்களின் சொந்த படைப்பாக, இதுவரை எந்த தளத்திலும் வெளிவராத படைப்பாக இருக்க வேண்டும், புகைப்படங்களுடன் அனுப்பவேண்டும். தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் அனைத்தும் பிரசுரம் ஆகும்.

வாசகர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில், இந்த மாதம் அனுப்பப்படும் பயணக் கட்டுரைகளில் சிறந்த கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.   

பரிசுத்தொகை விவரம்:

  • முதல் பரிசு : ரூ. 2,500 (2 வெற்றியாளர்கள்)

  • இரண்டாம் பரிசு : ரூ. 1000 (5 வெற்றியாளர்கள்)

  • நினைவுப் பரிசு: ₹500 (10 வெற்றியாளர்கள்)

நினைவில் கொள்க: 

  • நீங்க கட்டுரையை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஜூன் 20, 2025

  • ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை அனுப்பலாம்.

  • உங்கள் படைப்புகளை: my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்

  • விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்

  • உங்கள் படைப்பை திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது. 

  • கட்டுரையின் தரத்தின்  அடிப்படையில் வெற்றியாளர்கள் விகடன் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *