
பாமக கட்சிக்குள் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இருவருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் இந்த சூழலில் ராமதாஸ் தற்போது செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.
அவர் பேசிவருவதாவது…
‘தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை
கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ?
எண்ணமெல்லாம் நெய்யாக எம்முயிரினுள் வளர்ந்த
வண்ண விளக்கிது மடியத் திருவுளமோ?
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்’ என்று பாரதியார் சுதந்திரப் போராட்டம் குறித்து உருக்கமாக இப்படி பாடியிருக்கிறார். ஆக, எனக்கும், செயல் தலைவருக்கும் போய் கொண்டிருக்கும் பிரச்னை முழுவதும் உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை.
தலைவிதி…
‘காத்து போகாத இடத்திற்கு காவல் துறை போகும்’ என்று காவல்துறையினர் கூறுவார்கள். அதே மாதிரி, ஊடகத்தினர் சளைச்சவர்கள் அல்ல.
எங்கள் இருவருடைய சமரசப் பேச்சுவார்த்தை போய் கொண்டிருக்கிறது. அவர்கள் இங்கே வந்தார்கள்… நான் அங்கே போனேன்… பேச்சுவார்த்தை சென்றது. ஆனால், கடைசியில் பேச்சுவார்த்தை ‘டிரா’வில் முடிந்துவிட்டது.
14 பஞ்சாயத்துக்காரர்கள் வந்தார்கள். அவர்கள் நான் தொடங்கிய 34 அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் . இது தான் தலைவிதி என்று ஏற்றுக்கொண்டேன்.
எனக்கு அவமானமாக இருக்கிறது!
என்ன அதிசயம்? எல்லாரும் ஒரே விதமான தீர்ப்பையே சொன்னார்கள். ‘நான் இங்கே இருந்துகொண்டு கட்சியை வளர்ப்பது… அவர் வெளியே சென்று மக்களைப் பார்ப்பது’ – அது தான் அவர்கள் சொன்ன தீர்ப்பு. 14 பஞ்சாயத்துகளோடு இதுவும் ஒரு பஞ்சாயத்து ஆனது.
அன்புமணிக்காக தலைவர் பதவி விட்டுத்தர தயார் என்று கூறினேன். அதற்காக, மாநாட்டிற்கு முன்பு, கௌரவ தலைவர், சமூக முன்னேற்ற சங்கத்தினுடைய தலைவர் இருவரும் அன்புமணியை சந்திக்க செல்ல இருந்தனர். ஆனால், ‘வரவேண்டாம்… போன்லேயே சொல்லுங்க’ என்று அவர் கூறிவிட்டார்.
‘மாநாட்டு மேடையிலேயே இதை எழுதி தருகிறேன் என்று ஐயா சொல்கிறார்’ என்று அவர்கள் அவரிடம் பேசினார்கள். அதற்கு அன்புமணி, ‘அவரை (ராமதாஸை) நம்ப முடியாது’ என்று கூறிவிட்டார். ஆக, நான் தயாராக இருந்தும், அப்படி நடந்துவிட்டது. இதன் பிறகு தான், ‘நீயா… நானா’ என்று என்னுள் உள்ள இயற்கையான கோபம் பொங்கியது.
‘ராமதாஸ் பெயரைத் தான் பின்னால் போட்டுக்கொள்கிறோமே… அவனுக்கு என்ன தர வேண்டும்; கொள்ளு பேரன்களோடு விளையாடட்டும்’ என்று கூறினார். என்னால் அப்படி இருக்க முடியாது.
மக்களோடு 46 வருடங்களாக பழகி வருகிறேன். அவர்கள் என்னை உயிராக நினைத்து வருகிறார்கள். அவர்களை நான் உயிருக்கும் மேலாக கடவுளாக நினைக்கிறேன். அவர்கள் என்னை குலதெய்வமாக நினைக்கிறார்கள். நான் அவர்களைத் தொண்டர்களாக அல்ல… வழிகாட்டிகளாக நினைக்கிறேன்.
இன்னும் ஓரிரு ஆண்டுகள் தலைமையை ஏற்க எனக்கு உரிமை இல்லையா? உரிமை இல்லையா என்று கேட்பதே எனக்கு அவமானமாக இருக்கிறது.” என்றார்.
(தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பு நடக்கிறது… தகவல்கள் சேர்க்கப்படும்…)