• June 12, 2025
  • NewsEditor
  • 0

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே கணபதிபாளையத்தைச் சேர்ந்தவர் செல்லம்மாள் (90). இவருக்கு 3 மகன், 2 மகள். ஒரு மகன் இறந்துவிட்டார்.

இந்நிலையில், மூதாட்டிக்குச் சொந்தமாக 110 ஏக்கர் நிலம் உள்ளது. அதில், ஒரு குறிப்பிட்ட பகுதியை விற்க முயன்றபோது, அந்த நிலம் ஏற்கெனவே வேறு சிலரின் பெயரில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுதொடர்பாக பல்லடம் வட்டாட்சியர், பதிவாளர் மற்றும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், 1983-ஆம் ஆண்டு சிலர் போலி ஆவணங்கள் தயாரித்து, நிலத்தை எடுத்திருப்பதால், உரிய ஆவணங்களை காண்பித்து புகாரில் தெரிவித்திருந்தார்.

மூதாட்டி

இதுதொடர்பாக விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில் வயது மூப்பு காரணமாக கடந்த சிலநாள்களாக மூதாட்டி மிகவும் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். நேற்று முன் தினம் விசாரணைக்காக பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு அழைத்திருந்தபோது, மூதாட்டி செல்லம்மாள் தனது வாரிசுகளுடன் ஆம்புலன்ஸில் படுத்தநிலையில் வந்திறங்கினார்.

ஆனால், பல்லடம் துணை வட்டாட்சியர் பெரியசாமி வெளியே சென்றிருப்பதாக கூறி, அனுப்பிவைத்தனர். இதில் அதிருப்தி அடைந்த மூதாட்டி மற்றும் குடும்பத்தினர் வீட்டுக்கு சென்றனர். இந்நிலையில் புதன்கிழமை காலை மூதாட்டி திடீரென வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து செல்லம்மாளின் மகன் சண்முகசுந்தரம் கூறுகையில், “அம்மாவுக்கு வயதான காரணத்தால் தனது பெயரில் உள்ள சொத்துகளை எங்களுக்குப் பிரித்துக் கொடுக்க முடிவு செய்தார். அதற்காக பட்டா மாறுதலுக்கு கொடுத்தபோது ஐந்து முறை பட்டா மாறுதலை துணை வட்டாட்சியர் ரத்து செய்து விட்டார்.

மேலும் எங்களுடைய முழு ஆவணங்களும் மூதாதையர் காலத்தில் இருந்து முறையாக இருக்கும் நிலையில் வேறு நபர்களுக்கு ஆவணத்தில் முறைகேடு செய்து நிலத்தை அபகரிக்க துணை வட்டாட்சியர் உடந்தையாக முயற்சி செய்வதாகவும், செல்லம்மாள் பெயரில் பட்டா மாறுதல் செய்ய வேண்டும் என்றால் ஏக்கருக்கு 5 லட்சம் வீதம் 27 ஏக்கருக்கு லஞ்சம் வழங்கும்படி கேட்டனர்” என்றார்.

மூதாட்டி

இதுகுறித்து வருவாய்த் துறை அதிகாரிகள் கூறுகையில், “செல்லம்மாள் பெயரில் உள்ளதாக கூறப்படும் சொத்துகள் 4 பேருக்கு விற்பனை செய்யப்பட்டு மாறி மாறி பட்டா மாறுதல் செய்யப்பட்டுள்ளது. செல்லம்மாள் உறவினர்களிடம் பட்டா மாறுதலுக்கு லஞ்சம் கேட்டதாக கூறப்படுவது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றனர்.

பட்டா மாறுதலுக்காக 90 வயது மூதாட்டியின் உறவினரிடம் வருவாய்த்துறையினர் லஞ்சம் கேட்டதாக எழுந்த புகார் திருப்பூர் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *