
புதுடெல்லி: மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, நேற்றுடன் 11 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. இந்த 11 ஆண்டுகளில் மத்திய அரசின் சாதனைகளை நாட்டு மக்களிடம் விளக்கும் வகையில் பாஜக ஆளும் மாநிலங்களில் பல முக்கிய நிகழ்ச்சிகளை பாஜக தொடங்கி உள்ளது. குறிப்பாக பாஜக ஆளும் உ.பி.யின் 75 மாவட்டங்களிலும் பிரதமர் மோடி ஆட்சியின் சாதனைகளை விளக்கும் புகைப்படக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இன்று ஜுன் 12 முதல் 14 வரை, விக் ஷித் பாரத் சங்கல்ப்சபை கூட்டங்கள், கோட்ட அளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இவை அனைத்திலும் சிறுபான்மையினரை கவரும் உத்தியை நேற்று முதல் பாஜக கையாள தொடங்கி உள்ளது. இதில், உ.பி.யின் மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் குருத்துவாராக்கள் முன்பாக சவுபால் எனும் சிறப்புக் கூட்டங்களை பாஜக நடத்துகிறது. பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால சாதனை விளக்க விவாதங்கள் இதில் நடைபெற உள்ளன.