• June 12, 2025
  • NewsEditor
  • 0

2014-ம் ஆண்டு முதல் சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழாய்வுப் பணிகள் நடந்து வருகிறது. தற்போது 10-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வரும் நிலையில், 2023-ம் ஆண்டு, முதல் இரண்டு கட்ட ஆய்வுகளின் அறிக்கையை அமர்நாத் ராமகிருஷ்ணன் மத்திய தொல்லியல் துறைக்கு அனுப்பி வைத்தார். ஆய்வறிக்கைகள் சமர்பிக்கப்பட்டு 2 ஆண்டுகள் கடந்த நிலையிலும், இந்திய தொல்லியல் துறை கீழடி அகழாய்வு அறிக்கையினை வழங்காதது குறித்து கேள்விகள் எழுந்தது.

கீழடி

மத்திய அரசு விளக்கம்

இந்த நிலையில் மத்திய கலாச்சாரத்துறை, “தொல்லியல் நிபுணர்களின் பரிந்துரைப்படி ஆய்வறிக்கையில் சில திருத்தங்கள் செய்யும்படி மட்டுமே கோரினோம். ஆனால், தொல்லியல்துறை இயக்குநர் அறிவுறுத்திய திருத்தங்களை ஆய்வாளர் செய்யவில்லை” என விளக்கமளித்தது. தமிழ்நாட்டில் களத்தில் இருந்து ஆய்வு செய்தவரின் ஆய்வில் மாற்றத்தை ஏற்படுத்த வற்புறுத்துவது கீழடியை வைத்து அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி என பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்களும், எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது.

வைரமுத்து விமர்சனம்

இது தொடர்பாக கவிஞர் வைரமுத்து தன் எக்ஸ் பக்கத்தில், “ஒன்றிய அமைச்சர் ஷெகாவத் அவர்கள் கீழடித் தொன்மையை மெய்ப்பிக்க இன்னும் அறிவியல் தரவுகள் தேவையென்று சொல்லித் தமிழர் பெருமைகளைத் தள்ளி வைக்கிறார். ஒரு தமிழ்க் குடிமகனாக அமைச்சர் அவர்களுக்கு எங்கள் அறிவின் வலியைப் புலப்படுத்துகிறேன்.

கீழடியின் தொன்மைக்கான கரிமச் சோதனைகள் இந்தியச் சோதனைச் சாலையில் முடிவு செய்யப்பட்டவை அல்ல; அமெரிக்காவில் ஃபுளோரிடாவின் நடுநிலையான சோதனைச் சாலையில் சோதித்து முடிவறியப்பட்டவை. அதனினும் சிறந்த அறிவியல் தரவு என்று அமைச்சர் எதனைக் கருதுகிறார்?

ராமர் கோயில் – மோடி

தமிழர்களின் நெஞ்சம் கொதிநிலையில் இருக்கிறது

சில தரவுகள் அறிவியலின்பாற்பட்டவை; சில தரவுகள் நம்பிக்கையின்பாற்பட்டவை. ராமர் என்பது ஒரு தொன்மம் அதற்கு அறிவியல் ஆதாரங்கள் இல்லை; நம்பிக்கையே அடிப்படை. கீழடியின் தொன்மை என்பதற்கு அறிவியலே அடிப்படை. ராமரின் தொன்மத்தை ஏற்றுக்கொண்டவர்கள் கீழடியின் தொன்மையை ஏற்றுக்கொள்ளாதது என்ன நியாயம்? தொன்மத்துக்கு ஒரு நீதி, தொன்மைக்கு ஒரு நீதியா? தமிழர்களின் நெஞ்சம் கொதிநிலையில் இருக்கிறது.

தமிழ் இனத்தின் தொன்மையை, இந்தியாவின் தொன்மையென்று கொண்டாடிக் கொள்வதிலும் எங்களுக்கு எந்த மறுப்பும் இல்லை. “தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும் – இவள் என்று பிறந்தவள் என்றுண ராத இயல்பின ளாம் எங்கள் தாய்” என்ற பாரதியார் பாட்டு எங்கள் முதல் சான்றாக முன்நிற்கிறது.

மேலும் பல தரவுகள் சொல்வதற்கு உள்ளன.

விரிக்கின் பெருகுமென்று அஞ்சி விடுக்கிறோம்.

அங்கீகார அறிவிப்பை விரைவில் வெளியிட வேண்டுகிறோம்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *