• June 12, 2025
  • NewsEditor
  • 0

பீகார் மாநிலம், பூர்னியா மாவட்டத்தில் ஒரு மோசடி கும்பல் கிட்டத்தட்ட ஒரு ஆண்டு காலம் போலி காவல் நிலையம் ஒன்றை நடத்திவந்தது தற்போது தெரியவந்துள்ளது.

சமஸ்திப்பூர் என்ற பகுதியில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஏ.எஸ்.ஐ ஒருவர், ஏகே-47, இன்சாஸ் ரைபிள் மற்றும் கார்பைன் உள்ளிட்ட அதிநவீன ஆயுதங்களுடன் பிடிபட்டதைத் தொடர்ந்து இந்த கும்பல் பற்றிய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

மோஹானி கிராமத்தில் உள்ள அரசுப்பள்ளி கட்டடம் ஒன்றில் இந்த போலி காவல்நிலையம் இயங்கி வந்துள்ளது. இதற்கு மூளையாக செயல்பட்ட ராகுல் குமார் ஷா என்ற நபர் தலைமறைவாகியிருக்கிறார்.

போலி காவல்நிலையத்தில் குடியரசுதினம் – பாதிக்கப்பட்ட இளைஞர்

இந்த வழக்கை விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக பூர்னியா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.பி. கார்த்திகேய சர்மா தெரிவித்துள்ளார்.

இது நடந்தது எப்படி?

ராகுல் குமார் ஷா, பீகார் அரசின் உள்ளூர் காவல் அமைப்பான கிராம் ரக்‌ஷா தள் அமைப்புக்கு ஆட்சேர்க்கும் நபராகத் தன்னைக் காட்டிக்கொண்டு இந்த வேலைகளைத் தொடங்கியுள்ளார்.

உள்ளூர் இளைஞர்களிடம் 2,500 முதல் 5,000 ரூபாய் வரை பணம் வாங்கிக்கொண்டு, அவர்களை காவலாளி மற்றும் கான்ஸ்டபிள்களாக பணியில் சேர்த்துள்ளார். அவர்களுக்கு போலீஸ் சீருடைகள், தடிகள் மற்றும் போலி அடையாள அட்டைகளை வழங்கியுள்ளார்.

பின்னர் அவர்களுக்கு குடித்துவிட்டு வருபவர்களைப் பிடிப்பது, மதுபான கடத்தல்காரர்களின் வாகனங்களை சோதனை செய்வது போன்ற வேலைகளையும் கொடுத்துள்ளார். அதைவைத்து பணியாற்றுபவர்களுக்கும் பணம் கொடுத்து தானும் சம்பாதித்துள்ளார்.

உதாரணமாக ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்கள், ஓட்டுநர் உரிமம் வைத்திருக்காதவர்கள் போன்றவர்களைப் பிடித்து 400 ரூபாய் அபராதம் வசூல் செய்துள்ளார். அதில் 200 ரூபாயை தனது பாக்கெட்டுக்குள் போட்டுக்கொண்டு, 200 ரூபாயை சம்பந்தப்பட்ட காவலர்களுக்கு வழங்கியுள்ளார்.

ராகுல் ஷா-வை நம்பி தன்னை ஒரு காவலராக நினைத்துக்கொண்டிருந்த ஒருவர், “ராகுல் எங்களிடம் மீதமுள்ள பணம் அரசாங்க கருவூலத்துக்குச் செல்வதாகக் கூறினார்” என வாக்குமூலம் அளித்துள்ளார்.

மிகவும் துணிச்சலாக, அரசுப்பள்ளி வளாகத்திலேயே இந்தப் போலி காவல்நிலையத்தை நடத்தியுள்ளார். மதுபானக் கடத்தல்காரர்களிடம் சட்டவிரோதமாக பணம் (லஞ்சம்) வாங்கிக்கொண்டு, பிடித்துவைக்கப்பட்ட அவர்களது வாகனங்களைத் திருப்பிக்கொடுத்துள்ளனர்.

கிராமத்தலைவர் ஷியாம் சுந்தர் ஓரான் மற்றும் அவரது மருமகன் சினோத் ஓரானுக்கும் இந்த மோசடியில் தொடர்பு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஏனென்றால் போலி காவல் நிலையத்தால் ஜனவரி 26ல் நடத்தப்பட்ட குடியரசு தின விழாவில் இவர்கள் கலந்துகொண்டுள்ளனர். மேலும் சில பொது பிரதிநிதிகளும் இதில் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த மோசடி வெளிவந்ததால் கிராமத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். உள்ளூர் நிர்வாகத்தின் அலட்சியமே இத்தனை பெரிய குற்றம் நடக்கக் காரணம் என வெளிப்படையாகக் குற்றம்சாட்டியுள்ளனர்.

எதிர்கட்சிகள் இந்த விவகாரத்தில் வெளிப்படையான ஆழமான விசாரணை நடத்தப்பட வேண்டுமெனக் வலியுறுத்தியுள்ளனர். அரசு நிர்வாகத்தின் அனுமதியுடனே இது நடந்திருக்கக் கூடும் என்றும் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்படுகின்றன.

ராகுல் குமார் ஷா மற்றும் அவரது கூட்டாளிகளைப் பிடிக்க காவல்துறையினர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பீகாரின் வேலைவாய்ப்பின்மை, மலிந்து கிடக்கும் ஊழல், அரசு எந்திரத்தின் அலட்சியப்போக்கு ஆகியவற்றைக் காட்டுவதாக மக்கள் விமர்சித்து வருகின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *