
புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற கட்சி நிர்வாகி இல்ல விழாவில் கலந்து கொள்ள வந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “திருமாவளவன் தி.மு.க கூட்டணியில் உள்ளார். அதனால், பா.ஜ.க கூட்டணி பலமாக இல்லை என கூறுகிறார். பலம் பொருந்திய தேசிய கூட்டணியான எங்கள் கூட்டணி, தி.மு.க கூட்டணியை வீழ்த்தும். மக்கள் விரோத தி.மு.க ஆட்சியில் மக்கள் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
இதில் எந்த தவறும் இல்லை
கீழடியில் பல்வேறு தொன்மையான பொருட்கள் கிடைத்தாலும் அதன் காலம் உள்ளிட்டவைகளை அறிவியல் பூர்வமாக நிருபிக்க வேண்டும். அதை தான் மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.
இதில் எந்த தவறும் இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணி முழுமை பெற்று அந்த கூட்டணியில் உள்ளவர்கள் தன்னைப் பிரசாரத்திற்கு அழைக்கும்பட்சத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவராக 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வேன். எடப்பாடி பழனிசாமி 234 தொகுதிக்கும் பிரசாரத்திற்கு வருவாரா என்பதை அவர்தான் கூறவேண்டும். அமித் ஷா தொடர்ந்து 2024 அதற்கு முன்னர் நடந்த தேர்தலில் பிளவுபட்ட அ.தி.மு.க-வை ஓரணியில் கொண்டு வர முயற்சி செய்தார். ஆனால், அது சாத்தியமாகவில்லை.
அமித் ஷாவின் முயற்சி வெற்றி அடைந்துள்ளது!
ஆனால், வரும் 2026 -ம் வருட தேர்தலில் ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஒரு அணியில் இணைக்கும் அமித் ஷாவின் முயற்சி வெற்றி அடைந்துள்ளது. அதனால், இந்த தேர்தலில் உறுதியான வெற்றியாக இருக்கும். தமிழ்க் கடவுள் முருகனுக்கு மாநாடு நடத்துவதில் தவறில்லை. தமிழ்நாட்டில் பா.ஜ.க, இந்து அமைப்புக்கள் வளர்ந்துள்ளது. தேவை ஏற்படும் போது ஒரு மாநாடு நடைபெறும். தற்போது, முருகன் மாநாடு நடத்துவதற்கு தேவை இருப்பதால் முருகன் மாநாடு நடைபெறுகிறது. ஒரு காலத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியே திருச்செந்தூருக்கு வேல் எடுத்துச் சென்றவர் தான். தமிழக அரசே திருச்செந்தூரில் முருகன் மாநாடு நடத்தியது. அந்த மாநாடு நடத்தியது பிளவுபடுத்துவதற்காகவா?. அது இல்லையென்றால் தற்போது நடைபெறும் முருகன் மாநாடு பிளவுபடுத்துவதற்கு இல்லை.

வரும் 2026 – ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தமிழகத்தில் அமையப்போவது உறுதி. கூட்டணி ஆட்சியாகவும், கூட்டணி அமைச்சரவையாகவும் தான் இருக்கும். அதில், தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள வெற்றி பெற்ற கட்சிகள் அனைத்தும் இருக்கும்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமிழக வெற்றி கழகம் இணையுமா என்று கேட்க்கிறீர்கள். தி.மு.க-வை தோற்கடிக்க நினைக்கும் அனைத்து கட்சிகளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய வேண்டும். இணையாமல் தனித்து நின்றால் வாக்குகளை பிரிப்பதற்கு வேண்டுமானால் அது உபயோகமாக இருக்குமே தவிர தி.மு.க ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்படாது. எனவே, தமிழக வெற்றிக்கழகம் மட்டுமல்ல, தி.மு.க-வை எதிர்க்கும் அனைத்து கட்சிகளும் ஓரணியில் என்.டி.ஏ கூட்டணியில் இணைய வேண்டும்.
முதல்வர், டெல்லி எப்போதுமே தமிழக அவுட் ஆப் கன்ட்ரோல் தான் என்று கண்துடைப்புக்காக கூறுகிறார். உண்மையில் முதல்வரின் குடும்பமே முதல்வருக்கு அவுட் ஆப் கன்ட்ரோலில் தான் உள்ளது. முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தைச் சேர்ந்த மற்றும் நண்பர்கள் வெளிநாட்டிற்கு தப்பி ஓடிச் சென்று ஒளிவது ஏன் என்று கருத்துக்கு முதல்வர் பதில் கூற வேண்டும். ரத்திஷ் யார் ஆகாஷ் பாஸ்கரன் யார் என்று விளக்க வேண்டும். இதனை மறைப்பதற்காக முதல்வர், `டெல்லிக்கு தமிழகம் அவுட் ஆப் கன்ட்ரோல்’ என்று கூறுகிறார். அதேபோன்று, தி.மு.க-வும், தி.மு.க மந்திரிகளும் முதல்வருக்கு அவுட் ஆப் கன்ட்ரோலில் தான் உள்ளனர்.
பாட்டாளி மக்கள் கட்சி பிரச்னையில் பா.ஜ.க தலையிடுவதில் தவறு இல்லை. ஏனென்றால், கடந்த 2024 தேர்தலில் பா.ஜ.க-வோடு பா.ம.க கூட்டணி வைத்தது. கூட்டணி கட்சி என்ற முறையில் இந்த கட்சியின் பிரச்னையில் பா.ஜ.க தலையிடுவது தவறில்லை” என்றார்.