
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி, கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை வென்ற கையோடு, சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றார்.
அதையடுத்து, இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடர் நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்திலேயே சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாகத் திடீரென அறிவித்தார்.
ஜூன் 20-ம் தேதி இங்கிலாந்துக்கெதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்கும் நேரத்தில் கோலி இவ்வாறு அறிவித்ததால், இந்திய அணியில் அவரின் இடத்தை யார் நிரப்புவார் என்ற கேள்வி தொடர்ந்த வண்ணமே இருக்கிறது.
இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும் அதிரடி வீரருமான சாகித் அப்ரிடி, விராட் கோலிக்குப் புகழாரம் சூட்டியிருக்கிறார்.
டெலிகாம் ஆசியா ஸ்போர்ட் ஊடகத்திடம் பேசிய அப்ரிடி, “கோலியைப் பற்றி நிறைய கூறலாம். அவர் மிகவும் தீவிரமானவர்.
சில நேரங்களில் சர்ச்சைக்குரியவர். எதுவாக இருந்தாலும், இந்திய கிரிக்கெட்டுக்கு அவர் செய்ததை யாராலும் மறுக்க முடியாது.
தனது அணிக்காக அனைத்தையும் அவர் செய்தார். தனியாளாகப் போட்டிகளை வென்று கொடுத்திருக்கிறார்.

அவரைப் போன்றவர்கள் மிகவும் அரிதானவர்கள். முன்பு அவர் மிக ஆக்ரோஷமாக இருப்பார்.
ஓருமுறை சுனில் கவாஸ்கர் கூட, அவரை கட்டுப்படுத்துமாறு பிசிசிஐ-யிடம் கேட்டது நியாபகமிருக்கிறது.
ஆனால், திருமணத்துக்குப் பிறகு கோலி நிறைய முதிர்ச்சியடைந்திருக்கிறார். அதிகப்படியான மரியாதைக்கு அவர் தகுதியானவர்.” என்று கூறினார்.