
சென்னை: “மக்களிடம் மனு வாங்கி அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதுதான் ஓர் ஆட்சியின் கடமை. ஆனால், ஒரு திட்டத்துக்கு பல்வேறு பெயர்களைச் சூட்டி மக்களை ஏமாற்றிவிடலாம் என்று விளம்பர மாடல் ஸ்டாலினும், அவரது கூட்டமும் நினைத்தால், அவர்களுக்கு 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது, தமிழக மக்கள் தக்க பதிலடி தருவதற்கு தயாராக உள்ளார்கள்,” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
மேலும், “எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது புகார் பெட்டி மூலம் மனுக்களை வாங்கி சாவியை தொலைத்துவிட்ட விளம்பர முதல்வர் ஸ்டாலின், தற்போது பொதுத் தேர்தல் நெருங்கி வருவதை மனதில்கொண்டு, மீண்டும் தமிழக மக்களை ஏமாற்றும் நோக்கத்தில், வரும் நாட்களில் ‘இல்லந்தோறும் நேரில் சென்று கோரிக்கை மனுக்களைப் பெறும் திட்டமிட்ட நாடகத்தை’ அரங்கேற்ற உள்ளதாகத் தெரிய வருகிறது” என்று அவர் கூறியுள்ளார்.