
அரியலூர்: “தமிழகத்தில் இப்போது பருவமழை முன்கூட்டியே துவங்கி இருக்கிற சூழலில் தமிழக முதல்வர் அனைத்து பணிகளுக்கும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என ஆய்வுக்கூட்டத்தில் அறிவுறுத்தியுள்ளார். எனவே பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல் எல்லா வகையிலும் மின்துறை செயல்படும்,” என்று அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சன்னதி தெருவில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஜெயங்கொண்டம் கோட்டம் புதிய செயற்பொறியாளர் அலுவலக திறப்பு விழா இன்று (ஜூன் 11) நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி தலைமை வகித்தார். ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் முன்னிலை வகித்தார். போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் புதிய செயற்பொறியாளர் அலுவலகத்தை திறந்து வைத்தார்.