
அதர்வா நடித்திருக்கும் ‘DNA’ திரைப்படம் இம்மாதம் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அதர்வாவுடன் மலையாள நடிகை நிமிஷா சஜயனும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இப்படத்தை ‘மான்ஸ்டர்’, ‘பர்ஹானா’ படங்களை இயக்கிய இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கியிருக்கிறார்.
இந்தப் படத்திற்கு மொத்தமாக ஐந்து இசையமைப்பாளர்கள் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.
படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் மாரி செல்வராஜ் பேசுகையில், “நான் முதன் முதலில் ‘பரியேறும் பெருமாள்’ கதையை அதர்வா ப்ரோவிடம்தான் சொன்னேன்.
அவருக்கு அது நினைவில் இருக்கிறதா என்று தெரியவில்லை. எனக்கு முரளி சாரை மிகவும் பிடிக்கும். முரளி சாருடைய மகன் சினிமாவுக்கு வந்திருக்கிறார் என்று தெரிந்ததும், ‘பானா காத்தாடி’ படத்தைப் பார்த்து, ‘பரியேறும் பெருமாள்’ கதைக்குள் அவரைப் பொருத்திப் பார்த்தேன்.
முரளி சாருடைய மகன் நம்மைப் போலவே இருப்பார், அவர் இந்தக் கதாபாத்திரத்திற்கு சரியாக இருப்பார் என்று நினைத்து வைத்திருந்தேன்.

நான் கதை சொன்ன சமயத்தில் அவருடைய தேதிகள் கிடைக்கவில்லை. முரளி சாருடைய மகன் ‘பரியேறும் பெருமாள்’ கதையைச் செய்யவில்லை என்று அப்போது வருத்தப்பட்டேன்.
அதர்வா என்னை இயக்குநராக ஏற்றுக்கொள்ளவில்லை, வேறு யார் என்னை இயக்குநராக ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைத்திருந்தேன்.
அவரைப் பார்க்கும்போது இந்த விஷயங்களையெல்லாம் சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன்.
ஏழு வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் அதர்வா ப்ரோவை நெருக்கமாகச் சந்திக்கிறேன்.
இன்னும் பல உயரங்களுக்குச் செல்லக்கூடிய ஆற்றல் அதர்வா ப்ரோவிடம் இருக்கிறது. இந்த ‘DNA’ படம் அவருக்கு முக்கியமான ஒரு படமாக இருக்கும்.
இயல்பான மனிதராகத் தோன்றக்கூடிய தோற்றம் நிமிஷாவிடம் இருக்கிறது. என்னுடைய படத்திற்கு நிமிஷா சஜயன் மாதிரியான ஒரு பெண் இந்தக் கதாபாத்திரத்திற்கு சரியாக இருக்கும் என்று நான் என்னுடைய உதவி இயக்குநர்களிடம் சொல்வேன்.

என்னுடைய மனைவி, ‘படங்களில் அரசியல் பேசு. ஆனால், வெளியில் அரசியல்வாதியைப் போலப் பேசிவிடாதே.
அப்படி ஆகிவிட்டால் உன்னுடைய படங்களில் இருக்கக்கூடிய படைப்பாற்றல் போய்விடும்’ என்று சொல்லியிருக்கிறார்.
ஆனால், இந்தப் படத்தின் தயாரிப்பாளர் அரசியல்வாதியாக இருந்துகொண்டே 10 படங்கள் தயாரித்திருக்கிறார்” என்றார்.