• June 11, 2025
  • NewsEditor
  • 0

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே தாமலேரிமுத்தூர் கூட்ரோடு பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 179A, ஆம்பூர், வேலூர், கிருஷ்ணகிரி, சென்னை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் வாகன ஓட்டிகளால் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இந்த நெடுஞ்சாலையில் வாகனங்கள் திசை மாறி செல்லும் இடத்தில் எந்த பாதுகாப்பு முன்னெடுப்புகளும்  இல்லாததால், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தன. குறிப்பாக, காலை மற்றும் மாலை வேளைகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் இப்பகுதியில் சாலையைக் கடக்க மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் பேசியபோது, “நெடுஞ்சாலை என்பதால் வாகனங்கள் அதிவேகத்தில் வருகின்றன. சென்னை நோக்கி செல்லும் வாகனங்களும், திருப்பத்தூர் மற்றும் நாட்டறம்பள்ளி நோக்கி செல்லும் வாகனங்களும் ஒரே நேரத்தில் முந்த முயல்வதால், இங்கு விபத்து ஏற்படும் சூழல் உருவாகிறது. சிறிது தொலைவிற்கு முன்னரே வேகத்தைக் குறைத்து வர வேண்டும். ஆனால் ஒரு சிலர் எதையும் பொருட்படுத்தாமல் வருவதால் வாரத்திற்கு ஒரு விபத்தாவது இங்கு நடந்தேறுகிறது‌.

இதனால் மாணவர்களும் பொதுமக்களும் சாலையைக் கடக்க திக்கு முக்காடுகின்றோம். எனவே விபத்துகளைத் தடுத்து வாகனங்கள் பாதுகாப்புடன் செல்ல அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். 

இந்த விவகாரம் தொடர்பாக விகடன் தளத்தில் ஸ்பாட் விசிட் அடித்து தாமலேரிமுத்தூர்: நெடுஞ்சாலையில் தொடரும் விபத்துகள்; பாதுகாப்பை உறுதிசெய்ய நடவடிக்கை கோரும் மக்கள்! என்ற‌ தலைப்பில் செய்தி ஒன்றினை மே22-ம் தேதி வெளியிட்டிருந்தோம். மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு போயிருந்தோம். விகடனில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, (03/06/2025) அன்று அதிகாரிகள் விபத்து சூழலைக் கருத்தில் கொண்டு விரைந்து நான்கு பேரிகார்டுகள் அமைத்து, விபத்து அபாயத்தை தடுக்க நடவடிக்கை எடுத்திருக்கின்றனர். 

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *