
புதுக்கோட்டை தி.மு.க வடக்கு மாவட்டச் செயலாளராக இருப்பவர் கே.கே.செல்லப்பாண்டியன். இவரை எதிர்த்துத்தான், தி.மு.க வடக்கு மாவட்ட லிமிட்டுக்குள் வரும் 14 ஒன்றிய செயலாளர்களில் 11 ஒன்றிய செயலாளர்கள் ரகசியமாக எதிர்ப்பு ஆலோசனைக் கூட்டம் போட்டு, மாவட்டச் செயலாளரைப் பதற வைத்திருக்கிறார்கள்.
இதுபற்றி, புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க-வினர் சிலரிடம் பேசினோம்.
“புதுக்கோட்டை நகரில் உள்ள ஒரு தனியார் விடுதியில் வடக்கு மாவட்டச் செயலாளர் கே.கே.செல்லப்பாண்டியனுக்கு எதிராக ஒன்றிய செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. புதுக்கோட்டை வடக்கு மாவட்ட எல்லைக்குள் வரும் அன்னவாசல் தி.மு.க ஒன்றிய செயலாளர் சந்திரன் ஏற்பாட்டில் இந்தக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
இதில், விராலிமலை ஒன்றிய செயலாளர்கள் சத்தியசீலன், ஐயப்பன், இளங்குமரன், அன்னவாசல் ஒன்றிய செயலாளர்கள் சந்திரன், ஆர்.ஆர்.எஸ்.மாரிமுத்து, கந்தர்வக்கோட்டை ஒன்றிய செயலாளர்களில் பரமசிவம், தமிழய்யா, கறம்பக்குடி வடக்கு ஒன்றிய செயலாளர்கள் முத்துக்கிருஷ்ணன், புதுக்கோட்டை ராமகிருஷ்ணன் ஆகிய 11 ஒன்றிய செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
மொத்தமாக, தி.மு.க புதுக்கோட்டை வடக்கு மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றிய செயலாளர்களில் 11 ஒன்றிய செயலாளர்கள் கலந்து கொண்டனர். கே.கே.செல்லப்பாண்டியன் மாவட்டச் செயலாளராக மட்டும் பதவி வகித்து வருகிறார்.
எம்.எல்.ஏ மாதிரியான எந்த மக்கள் பதவிகளிலும் அவர் இல்லை. இதனால், ‘காற்றுள்ள போதே தூற்றிக்கொள்’ என்பது போல், பதவியில் இருக்கும் மட்டும் சம்பாதிக்க நினைத்து அரசு ஒப்பந்தப் பணிகளைத் தனக்கு வேண்டியவர்களுக்கே கொடுக்கிறார் என்ற புகார் எழுந்தது.
அதோடு, கட்சி பதவிகளும் தனக்கு வேண்டியவர்களையே நியமித்து வந்தார். ஒன்றிய செயலாளர்கள் சிலர் பரிந்துரைக்கும் கட்சிக்காக உண்மையாக உழைக்கும் ஆட்களை அவர் கண்டுகொள்வதில்லை. இதனால் ஒன்றிய செயலாளர்களுக்கு எந்த மரியாதையும் இல்லை.
அவர்களால் சம்பாதிக்கவும் முடியவில்லை. உச்சக்கட்டமாக, அங்கன்வாடி உள்ளிட்ட சிபாரிசில் போடப்படும் வேலைகளுக்குத் தங்களைக் கேட்காமலும், தகுதியாக இல்லாதவர்களுக்கும் பணி வழங்கச் சிபாரிசு செய்து வருகிறார்.
இதைப் பலமுறை மாவட்டச் செயலாளரிடம் முறையிட்டும் அவர் ஒன்றிய செயலாளர்களின் பேச்சை மதிக்கவில்லை. இதனால், நொந்துபோன 11 ஒன்றிய செயலாளர்கள் நேற்று புதுக்கோட்டையில் சந்தித்துப் பேசி, மாவட்டச் செயலாளரின் விரோத போக்கு பற்றி முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோரிடம் முறையிட முடிவு செய்தனர்.
அதற்கு முன்பாக, இன்று மாவட்டச் செயலாளர் கே.கே.செல்லப்பாண்டியனைச் சந்தித்து, நியாயம் கேட்பது. அவர் தங்கள் குறைகளைக் காது கொடுத்துக் கேட்டு தன்னை மாற்றிக் கொள்ள உத்தரவாதம் கொடுத்தால், முதல்வரைச் சந்திப்பதைத் தள்ளி வைப்பது, மாறாக ஒத்துவரவில்லை என்றால், முதல்வர், துணை முதல்வர் ஆகியோர்களைச் சந்தித்து முறையிடுவது என்று முடிவெடுத்தார்கள்.
அதன்படி, இன்று புதுக்கோட்டை தி.மு.க வடக்கு மாவட்டச் செயலாளர் கே.கே.செல்லபாண்டியனைச் சந்தித்து தங்கள் உள்ளக்கிடக்கையை முறையிட இருக்கிறார்கள். தங்கள் கண்டிஷன்களுக்கு மாவட்டச் செயலாளர் ஒத்துவராமல் போனால், அடுத்தகட்ட நகர்வு குறித்து பிறகு முடிவெடுக்க இருக்கிறார்கள்.
ஏற்கனவே, தி.மு.க வடக்கு மாவட்ட லிமிட்டுக்குள் வரும் புதுக்கோட்டை மாநகரச் செயலாளர் நியமனத்தை எதிர்த்து 28 வட்டக் கழக செயலாளர்கள் போர்க்கொடி தூக்கி வருகிறார்கள். அந்தப் பஞ்சாயத்தையே மாவட்டச் செயலாளரால் தீர்க்க முடியாமல் திண்டாடி வரும் நிலையில், தற்போது அவரது பதவிக்கே ஆப்பு வைக்கும் விதமாக ஒன்றிய செயலாளர்கள் தனி ஆவர்த்தனத்தில் குதித்திருப்பது அவரைக் கலங்கடிக்க வைத்திருக்கிறது” என்றார்கள்.
இதுபற்றி, புதுக்கோட்டை தி.மு.க வடக்கு மாவட்டச் செயலாளர் கே.கே.செல்லப்பாண்டியன் தரப்பில் பேசினோம்.
“அண்ணன், எல்லோரையும் அரவணைத்துச் செல்கிறார். கட்சித் தலைமை தொடங்கி மாவட்டத்தில் உள்ள கடைசி தொண்டன் வரை அனைவரின் கருத்துக்கும் மதிப்பு கொடுத்து, அதற்கேற்ப கட்சி பணி ஆற்றி வருகிறார்.

இவரின் வளர்ச்சியைப் பிடிக்காத சிலர் ஒன்றிய செயலாளர்களை டிவிஸ்ட் செய்து வருகிறார்கள். ஒன்றிய செயலாளர்களைக் கேட்காமல் அண்ணன் துரும்பையும் அசைப்பதில்லை. அப்படி இருக்க, அவருக்கு எதிராக அவர்களைச் சிலர் மடைமாற்றிவிடுகிறார்கள்.
அண்ணனைப் பற்றி தலைமைக்கு நன்றாகத் தெரியும். ஒன்றிய செயலாளர்களுக்கு ஏற்பட்டிருக்கும் லேசான மனக்கசப்பை அண்ணன் இன்று பேசி சரிபண்ணிவிடுவார்” என்றார்கள்.
தி.மு.க மாவட்டச் செயலாளருக்கு எதிராக ஒன்றிய செயலாளர்கள் முஷ்டியை முறுக்கி வருவது, புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க வட்டாரத்தில் அனலைக் கிளப்பியிருக்கிறது.