
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த ராஜா ரகுவன்சி என்பவர் கடந்த மாதம் சோனம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இத்திருமணத்தை தொடர்ந்து தனது மனைவி சோனமுடன் சேர்ந்து மேகாலயாவுக்கு தேனிலவு சென்றனர். அங்கு கடந்த 23ம் தேதி அத்தம்பதி திடீரென காணாமல் போனார்கள்.
10 நாட்கள் கழித்து ராஜா ரகுவன்சி உடல் மலை பள்ளத்தாக்கில் கண்டுபிடிக்கப்பட்டது. ராஜா ரகுவன்சியின் மனைவி சோனமும், அவரது காதலன் ராஜ் குஷ்வாஹாவும் சேர்ந்து ஏற்பாடு செய்த கூலிப்படையினர் இப்படுகொலையை செய்தனர். இது தொடர்பாக கூலிப்படையை சேர்ந்த 3 பேர் மற்றும் சோனம், அவரது காதலன் ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் மேகாலயாவில் உள்ள ஷில்லாங் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள கோர்ட்டில் இன்று ஆஜர்படுத்தப்படுகின்றனர்.
சோனமும், கூலிப்படையினரும் சேர்ந்து திட்டமிட்டு ராஜாவை கொலை செய்த பிறகு, தனித்தனியாக தப்பிச்சென்றுள்ளனர். போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் சோனம் திருமணத்திற்கு முன்பே தனது தாயாரிடம், தான் ராஜ் குஷ்வாஹாவை காதலிப்பதாக தெரிவித்துள்ளார்.
ஆனால் அதற்கு அவரது தாயார் எதிர்ப்பு தெரிவித்ததோடு, தாங்கள் சொல்லும் நபரைத்தான் திருமணம் செய்யவேண்டும் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து சோனம் சகோதரர் விபுல் கூறுகையில், ”எங்களது குடும்ப நிறுவனத்தில் வேலை செய்யும் ராஜ் குஷ்வாஹா என்பவரை காதலிப்பது குறித்து சோனம் எங்களின் தாயாரிடம் தெரிவித்தார். அதோடு ராஜாவை திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
ஆனால் நமது சமுதாயத்தில் ஒருவரை தான் திருமணம் செய்யவேண்டும் என்று தாயார் தெரிவித்தார். இதனால் தான் ராஜாவை திருமணம் செய்து கொள்கிறேன் என்று சோனம் தெரிவித்தார். ஆனால் அத்திருமணத்தால் கடும் விளைவு ஏற்படும் என்று சோனம் மிரட்டினார். அந்த நபருக்கு(ராஜா) என்ன நடக்கும் என்று பார் என்று மிரட்டினார். நீங்கள் அனைவரும் அதற்கான விளைவுகளை எதிர்கொள்ளவேண்டும் என்று தெரிவித்தார். ஆனால் கொலை செய்யும் அளவுக்கு செல்வார் என்று நாங்கள் நினைத்து பார்க்கவில்லை.
கொலை செய்த பிறகு சோனமும், ராஜும் ஒரு ஹோட்டலில் தங்கி இருந்தனர். அங்கிருந்து சோனமை ராஜ் இந்தூருக்கு அனுப்பி வைத்தார். சோனம் இந்தூரில் இரண்டு நாட்கள் இருந்தார்”என்றார்.

சோனம் ராஜ் குஷ்வாஹாவை காதலிக்கும் விவகாரம் ராஜா குடும்பத்திற்கு தெரியாமல் இருந்துள்ளது. அதனால்தான் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். அதோடு ராஜ் குஷ்வாஹா எப்போதும் சோனத்தை சகோதரி என்று அழைப்பது வழக்கம் என்று ராஜ் குஷ்வாஹாவின் சகோதரி சுஹானி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சுஹானி கூறுகையில்,”இருவரும் அலுவலகம் தொடர்பானவற்றை மட்டுமே பேசுவார்கள். சில நேரம் சோனம் போன் செய்யும்போது நாங்கள் எடுத்து பேசியிருக்கிறோம். சோனம் குறித்து ஒருபோதும் ராஜ் குடும்பத்தில் பேசியது கிடையாது. அதோடு இருவரும் அடிக்கடி பேசிக்கொள்வது கிடையாது. சோனத்தை சகோதரி என்றுதான் ராஜ் அழைப்பது வழக்கம்”என்று தெரிவித்தார்.
2003ம் ஆண்டு பெங்களூருவில் இது போன்ற ஒரு படுகொலை நடந்தது. சாப்ட்வேர் எஞ்சினியரான கிரீஷ் என்பவருக்கு சுபா(21) என்ற சட்டக்கல்லூரி மாணவியுடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இத்திருமண நிச்சயதார்த்தம் முடிந்த 3 நாட்கள் கழித்து கிரீஷ் படுகொலை செய்யப்பட்டார். சுபா கிரீஷை ரெஸ்டாரண்ட் ஒன்றிற்கு அழைத்து சென்றார். அங்கிருந்து விமானத்தை பார்க்கலாம் என்று கூறி கிரீஷை சுபா அழைத்து சென்றார். அங்கு மர்ம நபர்கள் கிரீஷை சரமாறியாக அடித்தனர். அடுத்த நாள் கிரீஷ் சிகிச்சை பலனளிக்காமல் இறந்து போனார். போலீஸ் விசாரணையில் சுபா தனது கல்லூரி நண்பர் அருண் வர்மாவுடன் சேர்ந்து கிரீஷை கொலை செய்திருப்பது தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.