
தமிழ்நாட்டின் பல மாவட்டங்கள் நீர் நிலைகள் பராமரிப்பில் சிறந்து விளங்குகின்றன. குளங்கள் சீரமைப்பு, ஏரிகள் மற்றும் கண்மாய்களைப் பேணுதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி விவசாய மற்றும் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்வதில் சில மாவட்டங்கள் முன்னோடியாகத் திகழ்கின்றன.
இந்த நிலையில், நாடு முழுவதும் நீர் நிலைகள் பராமரிப்பில் சிறந்து விளங்கும் மாவட்டங்களை மத்தியரசு தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது.
இந்தாண்டில் இந்த விருது பெற தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் விண்ணப்பித்த நிலையில், நெல்லை மற்றும் நாமக்கல் மாவட்டங்களை மட்டும் மத்தியரசு விருது பெற தேர்வு செய்துள்ளது.
நெல்லை மாவட்ட நிர்வாகம் அளித்துள்ள விண்ணப்பத்தில், நெல்லையில் மோசமான நிலையில் இருந்த பல குளங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், தாமிரபரணி ஆறு– கருமேனியாறு – நம்பியாறு ஆகிய ஆறுகளை இணைக்கும் நதிநீர் இணைப்பு திட்டத்தை சிறந்த முறையில் செயல்படுத்தி இந்தியாவிற்கு முன்னுதாரணமாக திகழ்வதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.
தாமிரபரணி நதியை செம்மைபடுத்தி வருவதால் தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் தென்காசி ஆகிய அருகாமை மாவட்டங்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்வதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.
விண்ணப்பத்தில் குறிப்பிட்டதன்படி நீர் நிலைகள் முறையாகப் பராமரிக்கப்படுகிறதா? நீர் நிலைகளில் மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறதா? என மத்திய நீர்வளத்துறை விஞ்ஞானிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். மத்திய நீர்வளத்துறையின் முதுநிலை விஞ்ஞானி ராஜ்குமார் மற்றும் செயற்பொறியாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையிலான குழுவினர் நெல்லை மாவட்டத்திற்கு வந்தனர்.

வண்ணாரப்பேட்டை பலாப்பழ ஓடை, வேய்ந்தான்குளம், தாமிரபரணி ஆற்றுப்படுகை, மழை நேரங்களில் ஓடும் வெள்ளம் தாமிரபரணியில் கலக்கும் வாறுகால்கள் ஆகிய பகுதிகளில் 3 நாள்கள் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வறிக்கையை ஓரிரு நாளில் மத்தியரசுக்கு சமர்ப்பிக்க உள்ளனர். இந்தியாவிலேயே நதிநீர் இணைப்புத் திட்டமாக தாமிரபரணி ஆறு– கருமேனியாறு – நம்பியாறு இணைப்புத்திட்டத்தை சாத்தியப்படுத்தியதே நெல்லை மாவட்டம் விருது பெற முக்கியக் காரணம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.