
இந்தூர்: மேகாலயாவில் தேனிலவுக்கு சென்றபோது கணவர் ராஜா ரகுவன்சியை கொலை செய்த அவரது மனைவி சோனம் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கில் ஒவ்வொரு நாளும் பல்வேறு புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில் அண்மைத் தகவலாக, கொலைக்குப் பின்னர் சோனம் இந்தூரில் தேவாஸ் நகா எனும் பகுதியில் மே 25 முதல் 27 வரை வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்துத் தங்கியது தெரியவந்துள்ளது. இதனை இந்தூர் போலீஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தின் இந்தூரை சேர்ந்த டிராவல்ஸ் நிறுவன அதிபர் ராஜா ரகுவன்சி (28). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சோனத்துக்கும் (25) கடந்த மே 11-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இருவரும் தேனிலவை கொண்டாட மேகாலயா சென்றனர். கடந்த மே 23-ம் தேதி ராஜாவையும் சோனத்தையும் காணவில்லை.