
மதுரை: மாநிலங்களுக்கு நிதியை வழங்கினால் மட்டும் போதாது, அந்த நிதி சரியாக பயன்படுத்தப்படுகிறதா என்பதையும் மத்திய அரசு கண்காணிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் கூறினர்.
மதுரையைச் சேர்ந்த் கே.கே.ரமேஷ், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பேருந்து நிலையங்கள், சாலையோரங்களில் முதியோரை உறவினர்கள் தனியே விட்டுச் செல்லும் போக்கு அதிகரித்துள்ளது. முதியோரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்து வந்து, அங்கேயே விட்டுச் செல்லும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு தனித்து விடப்படும் முதியோர், யாசகம் எடுக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.