
சேலத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு காவல்துறையின் கூடுதல் இயக்குநர் டேவிட்சன் தேவாசீர்வாதம் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியது, “தமிழகம் முழுவதும் உள்ள காவல்துறை உட்கோட்ட காவல்நிலையங்களில் கைது எண்ணிக்கை, கண்டுபிடிக்காமல் உள்ள வழக்குகள், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு குறித்து தொடர்ச்சியாக ஆய்வு செய்து வருகிறோம்.
இந்த வகையில், சேலம் மாவட்டத்தில் ஓமலூர், சங்ககிரி, மேட்டூர், சேலம் ஊரகம் உள்ளிட்ட பகுதிகளிலும் ஆய்வு செய்ய இருக்கிறோம்.
குற்றம் அதிகமாக நடக்கும் பகுதிகள், குற்றம் குறைவாக நடக்கும் பகுதிகள், குற்றத்திற்கான காரணம் என ஒரு முறைப்படுத்தப்பட்ட ஆய்வு மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
பெரும்பாலும் நிலம் தொடர்பான வழக்கு, அடிதடி, விபத்து வழக்குகள் அதிகமாக வருகின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மாதம் 150-160 கொலைகள் நடக்கும். ஆனால், தற்போது மாதம் 70 கொலைகளாகக் குறைக்கப்பட்டுள்ளன.
அந்தளவிற்கு மாவட்ட எஸ்.பி., மாநகர ஆணையர், டி.ஐ.ஜி., மூலம் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று கூறினார்.
மேலும், “கொலைகளைப் பொறுத்தவரை தென்மண்டலம் முதலிடத்திலும், மேற்கு மண்டலம் 2வது இடத்திலும் உள்ளது. தமிழகத்தில் உள்ள பண்ணைத் தோட்டங்களில் 26 கொலைகள் நடந்துள்ளன.
பண்ணை வீடுகளில் நடக்கும் கொலைகளுக்கு வடமாநில பவாரியா கும்பலுக்கும் தொடர்பு இருப்பதாக முதலில் சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் அனைத்து கொலைகளும் வெவ்வேறு காரணத்திற்காக நிகழ்ந்தன.

இதற்கும் பவாரியா கும்பலுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை. கொங்கு மண்டலத்தில் பண்ணை வீடுகளில், தனியாக வசிக்கும் முதியவர்களைக் குறி வைத்து நடக்கும் கொலை சம்பவங்களைத் தடுக்க கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சிசிடிவி கேமரா, வார்னிங் சிஸ்டம் வைக்கவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சிசிடிவி கேமராக்களை ஜியோ-டேக் மூலம் பதிவு செய்து, கேமரா எங்கு உள்ளது, எந்த நிலையில் உள்ளது என்பது குறித்துக் கண்காணிக்கப்படுகிறது” என்றார்.
“போதைப்பொருள் விற்பனை, கஞ்சா கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களுக்குத் துணை போகும் காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போதைப்பொருள் விற்பனை தொடர்பாக ஆந்திரா, ஒடிசா மாநிலங்களிலிருந்து வரும் நபர்களைத் தொடர்ச்சியாகக் கண்காணிக்கிறோம்.
போதைப்பொருள் பயன்பாடு என்பது சமுதாய பிரச்னை உள்ளது. இதனைப் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் குறைக்கலாம். போதைப்பொருள் புழக்கத்தைத் தடுக்க உளவுத்துறை மூலம் கண்காணிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி உள்ளோம்.
பள்ளி, கல்லூரி என அனைத்து இடங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குற்றம் அதிகளவில் நடக்கும் ஹாட்ஸ்பாட் பகுதிகளைக் கண்டறிந்து, அங்குத் தொடர்ச்சியாகக் கண்காணிப்பில் ஈடுபட போலீசாருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

குற்றச் சம்பவங்கள் அதிகம் நிகழும் பகுதிகளில் பதிவேடுகளின் அடிப்படையில் விரைந்து தண்டனை பெற்றுத்தரச் சம்பந்தப்பட்ட காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் ரவுடிகள் கொலைகள், கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. இதனை இன்னும் குறைக்க ஊரக உட்கோட்டப் பகுதிகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தி உள்ளோம்.
பொது மக்களிடையே விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால் போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது” என்று தெரிவித்தார்.