
தமிழக வெற்றிக் கழகத்தின் திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலாளர் பாரதிதாசன். இவர், திருவண்ணாமலை தியாகி அண்ணாமலை நகரில் புதிதாக வீடு கட்டியிருக்கிறார். கடந்த 8-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) புதுமனை புகுவிழாவையும் சிறப்பாக நடத்தினார் பாரதிதாசன்.
இந்த நிகழ்வுக்கு த.வெ.க-வினரை விட தி.மு.க-வினருக்கு அதிகமாக அழைப்புவிடுத்து, அவர்களின் வருகைக்காகவும் காத்திருந்து பாரதிதாசன் உபசரித்தது, பேசுபொருளானது.
பொதுப்பணித்துறை அமைச்சரும் தி.மு.க-வின் தெற்கு மாவட்டச் செயலாளருமான எ.வ.வேலு, அவரின் மகனும் தி.மு.க-வின் மாநில மருத்துவர் அணி துணைத் தலைவருமான கம்பன், திருவண்ணாமலை எம்.பி-யும் தி.மு.க மாவட்ட இளைஞரணி அமைப்பாளருமான சி.என்.அண்ணாதுரை உள்பட ஆளும்கட்சி முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
அரசியல் நாகரிகம் என்றாலும், அமைச்சர் எ.வ.வேலுவுக்கு மயில் இறகு அலங்கார மாலையும், ரூபாய் நோட்டு மாலையும் அணிவித்து காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார் த.வெ.க மாவட்டச் செயலாளர் பாரதிதாசன்.
அதோடு நிற்காமல், அமைச்சர் மகன் கம்பனின் காலிலும் விழுந்தது தான் அங்கு கூடியிருந்த த.வெ.க-வின் மற்ற நிர்வாகிகளிடமும், விஜய் ரசிகர்களிடமும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
தி.மு.க-வினர் சென்ற பிறகு அங்குவந்த த.வெ.க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்துக்கு அமைச்சருக்கு வழங்கப்பட்ட மரியாதையைக் காட்டிலும் பாரதிதாசன் குறைவாகத்தான் வழங்கினார் என்கிற பாகுபாட்டையும் பார்த்து த.வெ.க நிர்வாகிகள் கொதித்துப்போனார்கள்.
அதாவது, புஸ்ஸி ஆனந்துக்கு வெறும் சால்வை மட்டுமே அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. ஆனாலும், புஸ்ஸி ஆனந்த் த.வெ.க கொடியை மாலையாக அணிவித்து பாரதிதாசனையும், அவரின் மனைவியையும் ஆசீர்வாதம் செய்தார்.
`அரசியல் களத்தில் த.வெ.க-வுக்கு முதல் எதிரி தி.மு.க தான்’ என்று அக்கட்சியின் தலைவர் விஜய் சூளுரைக்கிறார். ஆனால், அவர் கட்சி மாவட்டச் செயலாளர் ஒருவர் தி.மு.க-வின் அமைச்சருக்கு முதல் மரியாதை அளித்து, அவரின் வருகைக்கு முக்கியத்துவம் வழங்கி ஆர்வம் காட்டியிருப்பது கட்சிக்குள் பெரும் சர்ச்சையாகியிருக்கிறது.
இந்த நிலையில், தன் மீதான விமர்சனத்துக்கு த.வெ.க மாவட்டச் செயலாளர் பாரதிதாசன் தன்னிலை விளக்கமொன்றையும் விஜய்க்கு கடிதம் மூலமாக அனுப்பியிருக்கிறார். அதில், “எனது புதிய இல்ல புதுமனை விழாவுக்கு நம் கழக சொந்தங்கள் அனைவரையும் அழைத்தேன்.

அதேபோன்று, எனது குடும்ப நண்பரான மாற்றுக் கட்சி அமைச்சர் அவர்களையும் அழைத்தேன். குடும்ப நண்பர் என்பதால், அவரை மரியாதை செய்யும் வகையில் தவறுதலாக மாலை அணிவித்துவிட்டேன். இச்செயலுக்காக நான் மிகவும் மனம் வருந்தி தலைவர் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இனிவரும் காலங்களில், என் சம்பந்தப்பட்ட விழாக்களில் நம் கழக சொந்தங்களை தவிர வேறு எந்த ஒரு மாற்றுக்கட்சி நிர்வாகிகளையும் அழைக்க மாட்டேன் என்று உறுதியளிக்கிறேன். இதுபோன்ற நிகழ்வுகள் இனிமேல் நடக்காமல் பார்த்துக்கொள்கிறேன். தலைவர் அவர்கள் என்னை மன்னிக்க வேண்டும். கழகத்துக்கு உண்மையாக செயல்படுவேன்’’ எனக் குறிப்பிட்டிருக்கிறார் பாரதிதாசன்.