
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த சோனம் என்ற பெண்ணும் அவரது கணவர் ராஜா ரகுவன்சி என்பவரும் கடந்த மாதம்தான் திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் இருவரும் மேகாலயாவிற்கு தேனிலவு சென்றனர். மேகாலயாவில் உள்ள சிரபுஞ்சி மலையில் கணவர் ராஜா ரகுவன்சியை கூலிப்படை வைத்து கொலை செய்ததாக சோனம் இரண்டு நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டுள்ளார். அவரோடு சேர்ந்து இக்கொலைக்கு சதித்திட்டம் தீட்டிய சோனம் காதலன் ராஜ் மற்றும் கூலிப்படையை சேர்ந்த 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.
முன்னதாக தேனிலவுக்கு சென்ற இரண்டு பேரும் கடந்த மாதம் 23ம் தேதி திடீரென காணாமல் போனார்கள். அவர்களை போலீஸார் தேடி வந்த நிலையில் கடந்த 2ம் தேதி ராஜா ரகுவன்சியின் உடல் மேகாலயா மலை பள்ளத்தாக்கில் கண்டுபிடிக்கப்பட்டது.
மேகாலாயாவில் இருந்து உ.பி வந்தது எப்படி?
ஆனால் சோனம் தொடர்ந்து மிஸ்ஸிங். இதையடுத்து சோனத்தை போலீஸார் தேடி வந்த நிலையில் அவர் உத்தரப்பிரதேச மாநிலம் காசிப்பூரில் கண்டுபிடிக்கப்பட்டார். அங்குள்ள போலீஸில் சோனம் சரணடைந்தார். போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் ராஜா ரகுவன்சி கொலை செய்யப்பட்ட பிறகு கூலிப்படையுடன் சேர்ந்து ராஜா ரகுவன்சியின் உடலை பள்ளத்தில் தூக்கிப்போட சோனம் உதவி செய்துள்ளார்.
அதன் பிறகு டாக்சி மூலம் ஷில்லாங் வந்துள்ளார். அங்கிருந்து சுற்றுலா டாக்சி மூலம் கவுகாத்தி வந்து அங்கிருந்து ரயில் மூலம் பாட்னா செல்லும் ரயிலில் ஏறி வந்துள்ளார். போலீஸாரின் கவனத்தை திசை திருப்பவேண்டும் என்பதற்காக அவர் திட்டமிட்டு பாட்னா செல்லும் ரயிலில் ஏறி இருக்கிறார் என்று போலீஸார் தெரிவித்தனர்.
திருமணாகி 6 நாளில் கொலைக்கு சதி
கொலைக்கான சதித்திட்டம் குறித்து போலீஸார் கூறுகையில், ”கொலைக்கான சதித்திட்டத்தை மே 17-ம் தேதி சோனம் தீட்டியுள்ளார். அதாவது திருமணம் முடிந்த 6 நாட்கள் கழித்து இச்சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது. மே 15ம் தேதியே சோனம் தனது பெற்றோர் விட்டிற்கு வந்துவிட்டார். அங்கு வந்தபிறகு வேறு ஒரு சிம்கார்டை பயன்படுத்தி மே 16ம் தேதி தனது காதலன் ராஜ் உடன் பல மணி நேரம் பேசியுள்ளனர். மே 17ம் தேதி ராஜ் தனது நெருங்கிய நண்பர்கள் மூன்று பேரை ரெஸ்டாரண்ட் ஒன்றில் சந்தித்து கொலையை எப்படி செய்வது என்பது குறித்து ஆலோசித்துள்ளனர்.
மேகாலயா சென்ற பிறகு சோனம் தாங்கள் எங்கு இருக்கிறோம் என்ற விபரத்தை அடிக்கடி கூலிப்படையினருக்கு தெரிவித்துக்கொண்டே இருந்துள்ளார். ஆள்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து ராஜாவை மலையில் இருந்து கீழே தள்ளி விட முயன்றனர். அது முடியாமல் போய்விட்டது.
இதனால் கத்தியால் குத்திக்கொலை செய்தனர். அதனை சோனம் பார்த்துக்கொண்டிருந்தார். இச்சம்பவத்திற்கு பிறகு சோனம் பாட்னா வழியாக இந்தூர் சென்று தனது காதலனை சந்தித்து அடுத்த கட்ட திட்டம் குறித்து ஆலோசித்துள்ளார். அந்த ஆலோசனைக்கு பிறகுதான் ராஜ் குஷ்வாஹா டாக்சி ஏற்பாடு செய்து சோனத்தை உத்தரப்பிரதேசத்திற்கு அனுப்பி வைத்தார்” என்று போலீஸார் தெரிவித்தனர்.
அவர் உத்தர பிரதேசத்திற்கு எதற்காக சென்றார் என்பது போலீஸாருக்கு மர்மமாகவே இருக்கிறது. போலீஸாரின் கவனத்தை திசை திருப்ப இது போன்று செய்திருக்கலாம் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
ராஜாவை கூலிப்படையினர் கொலை செய்து கொண்டிருந்தபோது ராஜா ரகுவன்சியின் தாயாருடன் சோனம் போனில் பேசிக்கொண்டிருந்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். சோனம் மேகாலயாவிற்கு தேனிலவு சென்ற புகைப்படங்கள் எதையும் சோனம் சமூக வலைத்தளத்தில் பகிரவில்லை. தங்களது மகனுக்கு இக்கொலையில் தொடர்பு கிடையாது என்று ராஜ் பெற்றோர் தெரிவித்துள்ளனர். இதே போன்று சோனம் பெற்றோரும் தங்களது மகள் இக்காரியத்தை செய்திருக்கமாட்டார் என்று தெரிவித்துள்ளனர்