• June 11, 2025
  • NewsEditor
  • 0

பிரான்ஸ் நாட்டின் நைஸ் நகரில் ஜூன் 9-ம் தேதி ஐக்கிய நாடுகள் பெருங்கடல் மாநாடு தொடங்கியது.

ஜூன் 13-ம் தேதி வரை நடைபெறும் இந்த மாநாட்டில் உலக நாடுகளைச் சேர்ந்த பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் கலந்துகொண்டவர்கள், ஆழ்கடலின் அடிவாரத்திலிருந்து முக்கிய கனிமங்கள் சேகரிக்கத் தோண்டப்படும் சுரங்கம் குறித்த சர்ச்சைக்குரிய விதிகள் மற்றும் கடலில் பிளாஸ்டிக்கால் ஏற்படும் மாசுபாடு குறித்த உலகளாவிய ஒப்பந்தத்தின் விதிமுறைகள் ஆகியவை குறித்துக் கலந்துரையாடினர்.

அன்டோனியோ குட்டரஸ்

அதில், ஐ.நா பொதுச்செயலாளரான அன்டோனியோ குட்டரெஸ், “கடலிலுள்ள பல்லுயிர்களின் பெருக்கத்தைப் பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம்.

ஆழ்கடலில் குவிந்து கிடக்கும் வளங்களை உலக நாடுகள் அழிக்க விடக்கூடாது. எனவே, ஆழ்கடலில் கட்டுப்பாடில்லாமல் சுரங்கம் அமைக்க அனுமதித்தல் கூடாது” என வலியுறுத்தினார்.

இதே கருத்தைப் பிரதிபலித்த பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான், “ஆழ்கடல் சுரங்கத் தொழிலுக்குத் தடை விதிப்பது சர்வதேச அளவில் மிகத் தேவையான நடவடிக்கை.

ஆழ்கடல் அடிவாரத்தை சீர்குலைத்து, பல்லுயிர் பெருக்கத்தை சீர்குலைத்து, அதைக் கொள்ளையடிக்கும் பொருளாதார நடவடிக்கையைத் தொடங்குவது பைத்தியக்காரத்தனம் என்று நான் நினைக்கிறேன்.

கடல் விற்பனைக்கு இல்லை. அனைவருக்குமான பொது நன்மையைப் பற்றி நாங்கள் பேசுகிறோம்” எனக் கூறினார்.

இம்மானுவேல் மேக்ரான்
இம்மானுவேல் மேக்ரான்

அதேபோல், பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, “ஆழ்கடலில் முக்கிய கனிமங்களைத் தேடிக் கொள்ளையடிப்பது தொடர்பாக நாடுகளுக்கிடையே நிலவும் பந்தயத்தை முடிவுக்குக் கொண்டுவர, கடற்பரப்பு அதிகாரிகளின் தெளிவான நடவடிக்கை தேவை. கடலில் ஒருதலைபட்சமாக அச்சுறுத்தல் உருவாகி வருவதை நாம் காண்கிறோம். சர்வதேச வர்த்தகத்திற்கு நடந்தது போன்ற நிலையைக் கடலுக்கும் நாம் அனுமதிக்க முடியாது” எனத் தெரிவித்தார்.

உலகளாவிய கடல் ஒப்பந்தத்தை 60 நாடுகள் அங்கீகரிக்கச் செய்து, அதை நடைமுறைப்படுத்தி, சர்வதேச நீரில் வாழும் கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாக்கத் தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதே ஐக்கிய நாடுகள் பெருங்கடல் மாநாட்டின் முக்கிய நோக்கமாகும்.

2030-க்குள், சர்வதேச நீர்நிலைகளில் 30 சதவீத நீர்நிலைகளை கடல்சார் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் சேர்க்க வேண்டும் என இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இந்த ஒப்பந்தம் மூலம், சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாத்து ஆழ்கடல் வளங்களை மீட்டெடுக்க முடியும் என நம்பப்படுகிறது.

ட்ரம்ப்
ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், சர்வதேச நீரில் முக்கியமான கனிமங்களைப் பிரித்தெடுப்பதற்கான அனுமதி வழங்க, கடந்த ஏப்ரல் மாதம் எடுத்த முடிவைத் தொடர்ந்து இந்தக் கருத்துக்கள் வெளிப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *