
இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் உரிமையாளர் மாறுவதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் பரவி வருகின்றன.
தற்போது உரிமையாளராக இருக்கும் பிரிட்டீஷ் பன்னாட்டு மதுபான நிறுவனமான டியாஜியோ பிஎல்சி, பகுதியளவு அல்லது முழுவதுமாக அணியின் உரிமையை விற்க விரும்புவதாக வெளியான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
RCB அணியின் விலை மதிப்பு என்ன?
கடந்த வாரம், RCB அணி 18 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது. இந்த வெற்றியால் டியாஜியோ பிஎல்சி குறிப்பிடத்தக்க உயர்வை எட்டியிருக்கிறது.
இந்தியாவில், டியாஜியோ பிஎல்சி மூலம் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் ஆர்சிபி நடத்தப்படுகிறது, ஐபிஎல் கோப்பையை வென்ற பிறகு அணியின் உரிமையை பணமாக்கும் வழிகளைத் தேடி வருகிறது மதுபான நிறுவனம் என வதந்திகள் பரவின.
இதுவரை RCB அணிக்கான உரிமையின் மதிப்பு எவ்வளவாக இருக்கும் என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்றாலும், ப்ளூம்பெர்க் தளம் அதன் உரிமையாளர்கள் 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (தோராயமாக 16,834 கோடி ரூபாய்) எதிர்பார்க்கலாம் எனக் குறிப்பிட்டிருக்கிறது.
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, நிறுவன செயலாளர் மிட்டல் சங்க்வி, “மேற்கூறப்படும் மீடியா அறிக்கைகள் எல்லாம் யூகங்களின் அடிப்படையானதே என்பதை எங்கள் நிறுவனம் தெளிவுபடுத்த விரும்புகிறது. இதுபோன்ற எந்த விவாதத்தையும் நாங்கள் தொடங்கவில்லை” என இந்திய பங்குச் சந்தையின் ஒழுங்குமுறை அமைப்பான BSE-க்குத் தெரிவித்துள்ளார்.

RCB அணி விற்கப்படுவது உறுதியாக தெரியாமலேயே, செய்தி பரவியதும் செவ்வாய்க்கிழமை (10.06.2025) யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 3.3% உயர்ந்துள்ளது.
RCB அணி நீண்ட போராட்டத்துக்குப் பிறகு வெற்றி பெற்றாலும், வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட நெருக்கடியால் பெங்களூருவில் 11 உயிர்கள் பலியானது சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
2008ம் ஆண்டு RCB அணி தொடங்கப்பட்டபோது விஜய் மல்லையா அதன் உரிமையை வாங்கினார். பின்னர் அவர் கடன் வலையில் சிக்கிய பிறகு டியாஜியோ பிஎல்சி தனது துணை நிறுவனமான யுனைடெட் ஸ்பிரிட்ஸ் மூலம் RCB -யை வாங்கும் வாய்ப்பைப் பெற்றது. இப்போது உலக அளவில் அதிக பின்தொடர்பவர்களைக் கொண்ட அணிகளில் ஒன்றாக விளங்குகிறது RCB.