
புதுடெல்லி: 2034-ம் ஆண்டில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை மத்திய அரசு அமலுக்கு கொண்டு வரும் என்று நாடாளுமன்றக் கூட்டுக் குழுத் தலைவர் பி.பி.சவுத்ரி அறிவித்துள்ளார். அவரது அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மத்திய அரசு கொண்டு வரவுள்ள திட்டமாகும். இதன்படி, நாட்டில் உள்ள அனைத்து தேர்தல்களையும் ஒரே நாளில் அல்லது ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் நடத்துவதாகும். நாட்டில் உள்ள 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களின் மக்களவை மற்றும் மாநில சட்டப் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவது என்பதே இந்தத் திட்டமாகும். குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு இதுதொடர்பான வரைவு மசோதாவை தயாரித்து மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. இதையடுத்து இதுதொடர்பான மசோதா, மாநிலங்களவை, மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் விசாரணைக்கு அனுப்பப்பட்டது.