
திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளராக பொள்ளாச்சி ஜெயராமன் பொறுப்பேற்று ஐந்தாண்டுகள் ஆகும் நிலையில், வாரக் கடைசியில் மட்டுமே கட்சி நடவடிக்கைகளுக்காக திருப்பூருக்கு வந்து செல்வதைச் சுட்டிக்காட்டி, ‘வீக் எண்ட்’ மாவட்டச் செயலாளர் என அதிமுக-வுக்குள் இருக்கும் சிலரே அவரை சத்தமில்லாமல் கலாய்க்கிறார்கள்.
திருப்பூர் அதிமுக-வுக்குள் இருக்கும் கோஷ்டி பூசலை சமாளிக்க பொள்ளாச்சியிலிருந்து ஜெயராமனை திருப்பூர் மாநகர் மாவட்டச் செயலாளராக இறக்குமதி செய்தது அதிமுக தலைமை. இந்த நிலையில், குடும்பத்தை பொள்ளாச்சியில் வைத்துவிட்டு அரசியல் நடவடிக்கைகளுக்காக அவ்வப்போது திருப்பூருக்கு வந்து செல்வதை வழக்கமாக்கிக் கொண்டார் ஜெயராமன். முக்கிய நிகழ்வுகள் ஏதும் இல்லாத போது பெரும்பாலும் அவர் வாரக் கடைசியிலேயே திருப்பூருக்கு வந்து செல்வதால் அவரை ‘வீக் எண்ட்’ மா.செ என தமாஷ் பண்ணுகிறார்கள்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய திருப்பூர் அதிமுக சீனியர்கள் சிலர், “இப்போது அதிமுக-வில் எல்லோருக்கும் எஸ்.பி.வேலுமணியைத் தான் பிரதானமாக தெரிகிறது. ஆனால், வேலுமணி அதிமுக-வுக்குள் வரும் போதே கோவை மாவட்ட அதிமுக செயலாளராக இருந்தவர் பொள்ளாச்சி ஜெயராமன். திருப்பூர் மாவட்ட அதிமுக-வை பொறுத்தவரை முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், எம்எல்ஏ-வான கே.என்.விஜயகுமார், முன்னாள் எம்எல்ஏ-வான சு.குணசேகரன், முன்னாள் எம்பி-யான சிவசாமி என நான்கு பேரும் நான்கு திசையில் பாராமுக அரசியல் செய்து வருகிறார்கள். இதனாலேயே உள்ளூர்க்காரர்களை தவிர்த்துவிட்டு வெளியூர்காரரான பொள்ளாச்சி ஜெயராமனை மாநகர் மாவட்டத்துக்கு செயலாளராக்கியது தலைமை.