
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த சோனம் என்பவரும், அவரது கணவர் ராஜா ரகுவன்சியும் கடந்த மாதம் மேகாலயாவிற்குத் தேனிலவு சென்றனர்.
அவர்கள் கடந்த 23ம் தேதி திடீரென காணாமல் போய்விட்டனர். ஆனால் 10 நாட்கள் கழித்த பிறகு கடந்த 2ம் தேதி ஆழமான பள்ளத்தாக்கில் ராஜா ரகுவன்சியின் உடல் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டது.
அதோடு அவர்கள் பயன்படுத்திய வாடகை இரு சக்கர வாகனம் மற்றும் ராஜா ரகுவன்சியின் ரத்தக்கரை படிந்த மழை கோட் போன்றவையும் கண்டுபிடிக்கப்பட்டது.
ஆனால் சோனம் உடல் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனையடுத்து அவரை போலீஸார் தேடி வந்தனர். இக்கொலையில் திடீர் திருப்பமாக சோனம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உத்தரப்பிரதேச மாநிலம் காசிப்பூர் என்ற இடத்தில் போலீஸில் சரணடைந்தார்.
சோனம் நேற்று முன் தினம் உத்தரப்பிரதேச மாநிலம் காசிப்பூர் ஹோட்டல் ஒன்றிலிருந்து கொண்டு தனது சகோதரனுக்கு போன் செய்துள்ளார். உடனே போலீஸார் சுதாரித்துக்கொண்டு அந்த ஹோட்டலுக்குச் சென்றனர்.
அவர் அங்கு மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது போலீஸில் சரணடைந்துள்ளார்.
இக்கொலை தொடர்பாக சோனம் காதலன் ராஜ், அவரது கூட்டாளிகள் விக்கி, ஆனந்த், ஆகாஷ் ஆகியோர் மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் ராஜா ரகுவன்சி எப்படிக் கொலை செய்யப்பட்டார் என்ற விவரம் தெரிய வந்துள்ளது.
ராஜா ரகுவன்சியின் மனைவி தேனிலவுக்குச் செல்லும் போது தனது காதலனின் கூட்டாளிகளையும் உடன் வரும் படி அழைத்துள்ளார். அவர்கள் மேகாலயாவில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்திற்குச் சென்றபோது, அவர்கள் இரண்டு பேரையும் கூலிப்படையினர் பின் தொடர்ந்துள்ளனர்.
தனது கணவனிடம் புகைப்படம் எடுக்கலாம் என்று கூறி, ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு சோனம் அழைத்துச் சென்றுள்ளார். கொலை செய்யவேண்டிய இடம் வந்ததும் வேண்டுமென்றே தனக்குச் சோர்வாக இருப்பதாகக் கூறி சோனம் மிகவும் மெதுவாக நடந்துள்ளார்.
குறிப்பிட்ட இடம் வந்ததும், பின்னால் நடந்து வந்து கொண்டிருந்த கூலிப்படையிடம் அவனைக் கொலை செய்யுங்கள் என்று கூறி உத்தரவிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து கூலிப்படையினர் ராஜா ரகுவன்சியைக் கொலை செய்து ஆழமான பள்ளத்தாக்கில் தூக்கிப் போட்டுள்ளனர்.

ரூ.4 லட்சத்தை ரூ. 20 லட்சமாக உயர்த்திய சோனம்
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ”சோனம் ஆரம்பத்தில் கூலிப்படைக்கு ரூ.4 லட்சம் கொடுப்பதாகத் தெரிவித்துள்ளார். ஆனால் அந்தத் தொகையைப் பின்னர் சோனம் ரூ.20 லட்சமாக அதிகரித்துள்ளார்.
அதோடு ராஜா ரகுவன்சியின் உடலைப் பள்ளத்தில் தள்ளிவிட உதவி செய்வதாகக் கூலிப்படையிடம் தெரிவித்துள்ளார். கொலையாளிகள் புதுமணத்தம்பதியைக் கடந்த மாதம் 21ம் தேதி கவுகாத்திக்குப் பின் தொடர்ந்து சென்றுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து 22ம் தேதி ஷில்லாங்கிற்குப் பின் தொடர்ந்துள்ளனர். 23ம் தேதிதான் கொலை செய்துள்ளனர். கொலைக்கான கத்தியை கவுகாத்தியிலிருந்து வாங்கி வந்துள்ளனர்.
ஒரு முறை ராஜாவின் பின் புறமும், ஒரு முறை முன் பகுதியிலும் குத்தியுள்ளனர். கூலிப்படையுடன் சோனம் காதலன் ராஜ் செல்லவில்லை. ஆனால் அவர் திட்டம் தீட்டிக்கொடுத்துள்ளதாக நம்புகிறோம். சோனம் தனது கணவனைக் கொலை செய்வதற்காகவே மேகாலயா வந்துள்ளார் என்று தெரிவித்தனர்.

இதற்கிடையே சோனம் கர்ப்பமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அவருக்கு 3 பெண் மருத்துவர்கள் சோதனை செய்து பார்த்தனர். இதில் உறுதியான தகவல் கிடைக்கவில்லை.
எனவே ஒரு வாரம் கழித்து மீண்டும் ஒரு முறை சோதனை செய்து பார்க்க மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர். அதோடு தனது கணவனைக் கொலை செய்து விட்டு, கணவன் மொபைல் போனில் உள்ள சமூக வலைத்தளக் கணக்கில் தனது கணவன் பதிவிடுவது போன்று ஒரு பதிவையும் வெளியிட்டுள்ளார்.