
தமிழக வெற்றிக் கழகத்தில் புதிதாக இணைந்திருக்கிறார் விருப்ப ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ் அதிகாரி அருண் ராஜ். இணைப்பு நிகழ்விலேயே அவருக்கு கொள்கைப் பரப்புப் பொதுச்செயலாளர் பதவியை கொடுத்து அலங்கரித்திருக்கிறார் விஜய். யார் இந்த அருண் ராஜ்? அவரின் பின்னணி என்ன? அவரைச் சுற்றி வட்டமடிக்கும் கேள்விகளோடு பேட்டிக்காக அணுகினோம். நிறையவே பேசினார்.
ஐ.ஆர்.எஸ் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று விஜய்யின் கட்சியில் இணைந்திருக்கிறீர்கள். யார் இந்த அருண் ராஜ்? உங்களைப் பற்றிய பின்னணியை கொஞ்சம் விவரியுங்களேன்.
பிறந்து வளர்ந்ததெல்லாம் சேலம்தான். மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில் மருத்துவம் பயின்றேன். 1997-2003 காலக்கட்டத்தில் கல்லூரிப் படிப்பை முடித்தேன். TNPSC மூலம் கிருஷ்ணகிரியிலுள்ள கக்கதாசம் என்கிற பகுதியிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணி செய்ய தேர்வானேன். அங்கிருக்கும் போதுதான் UPSC தேர்வுகளுக்கும் தயாரானேன்.
மற்றவர்களெல்லாம் நகர்ப்புறத்தில் தங்கியிருந்து கிராமத்துக்கு வந்து பணியாற்றி செல்வார்கள். ஆனால், நான் அங்கேயே அரசு விடுதியில் தங்கி பணியாற்றினேன். அது என்னுடைய தேர்வு தயாரிப்புப் பணிக்கும் பயனுள்ளதாக இருந்தது. மருத்துவமே ஒரு உன்னதமான பணிதானே…அப்படியிருக்க ஏன் சிவில் சர்வீஸ் என பலரும் கேட்டிருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை எல்லா தொழிலுமே புனிதமானதுதான். ஆனால், அரசியல் அதைவிட புனிதமானது.

அரசியல் அதிகாரம் சரியானதாக இருந்தால்தான் மற்ற எல்லா விஷயங்களுமே முறையாக நடக்கும். அதனால் மருத்துவத்தை விட அரசியலே புனிதமானது. என்னுடைய கல்லூரியில் இரண்டு சீனியர்கள் சிவில் சர்வீஸூக்கு தயாராகிக் கொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்த்துதான் எனக்கும் ஊக்கம் கிடைத்தது. சிவில் சர்வீஸூக்குள் வந்த ஆரம்பக்கட்டத்திலேயே உண்மையான அரசியல் அதிகாரம் மக்களிடம்தான் இருக்கிறது என்கிற புரிதல் எனக்கிருந்தது.
ஒரு ஐ.ஆர்.எஸ் அதிகாரியாக உங்களின் பணி அனுபவங்களைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்.
முதல் இரண்டு ஆண்டுகள் சென்னையில் பணிபுரிந்தேன். அடுத்த இரண்டு ஆண்டுகள் பாண்டிச்சேரி. அதன்பிறகு மீண்டும் சென்னை. சேகர் ரெட்டி, சசிகலா போன்றோரின் இடங்களில் நடந்த ரெய்டுகளில் நானும் ஒரு பங்காக இருந்தேன். ஒரே சமயத்தில் சசிகலா சம்பந்தப்பட்ட 175 இடங்களில் ரெய்டு செய்தோம். அதெல்லாம் வெளியில் பேசப்பட்டதை போல திடீரென நடந்த ரெய்டு அல்ல. 6 மாதங்களாக அதற்கென உழைத்து விவரங்களை சேகரித்துதான் ரெய்டில் இறங்கினோம்.

விஜய் வீட்டில் ரெய்டு செய்தது கூட நீங்கள்தான் என ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஓடிக்கொண்டிருக்கிறதே. நீங்கள்தானா அது?
அந்த வீடியோவை நானும் பார்த்தேன். அது என்னுடன் பணிபுரிந்த சக ஊழியர். நான் 2016 – 19 வரையில்தான் விசாரணை செய்யும் பொறுப்பில் இருந்தேன். விஜய் வீட்டில் 2020 இல் தான் ரெய்டு நடந்திருந்தது. விஜய்யை எனக்கு அதற்கு முன்பாகவே தெரியும். ஐ.ஆர்.எஸ் ஆக தேர்வானவுடன் எங்களுக்கு நாக்பூரில் 16 மாதங்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெறும். அதில் இடையில் 2 மாதங்கள் ‘On The Job Training’ என்று ஒன்று உண்டு. ஒவ்வொரு குழுவாக பிரிந்து வெவ்வேறு மாநிலங்களுக்கு செல்வோம். என்னோடு சேர்த்து 7 பேர் சென்னைக்கு வந்தோம்.
அலுவல் செயல்பாடுகள் எப்படியிருக்கும் என்பதைப் போன்ற பயிற்சிகள் வழங்கப்படும். அதில் ஒன்றாக வெற்றிபெற்ற மனிதர்களை சந்தித்து அவர்களுடன் உரையாடும் நிகழ்வும் நடக்கும். அப்படித்தான் 2011 இல் நாங்கள் 7 பேரும் விஜய்யை சந்திக்க சென்றோம். விஜய்யை சந்திக்க செல்கையில் என்னுடைய மனதில் பெரிதாக எந்த அபிப்ராயமும் இல்லை. ஆனால், அவரை சந்தித்தப் பிறகு அவரின் பணிவை பார்த்து அவரின் ரசிகனாகிவிட்டேன். இப்போது இன்னமும் பெரிய உயரத்தில் இருக்கிறார். இன்னமும் அதே பணிவு இருக்கிறது. நிறையவே பண்பட்டு இருக்கிறார்.

கடந்த நான்கைந்து ஆண்டுகளாகத்தான் அவருடன் நெருங்கி பழகுகிறேன். ஆரம்பத்திலிருந்தே அவருக்கு சமூகம் குறித்த ஒரு பார்வை இருந்தது. எனக்கும் சமூகம் அரசியல் சார்ந்து சில சிந்தனைகள் இருந்தது. இருவரின் சிந்தனையும் ஒரே நேர்க்கோட்டில் இணைந்ததால் சேர்ந்து பயணிக்கிறோம்.
விரிவான பேட்டி, கீழே இணைக்கப்பட்டிருக்கிறது!