
கொல்கத்தா: ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின்போது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியா தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தது என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேலும், மோடியும் பாஜகவும் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு ஆயுதப் படைகளின் வீரத்தை அரசியலாக்க முயற்சிப்பதாக அவர் சாடினார்.
மேற்கு வங்க சட்டப்பேரவையில் இது தொடர்பாக பேசிய மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, "பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும். நாட்டு மக்களுக்குப் பாதுகாப்பு வழங்க மத்திய அரசு தவறியதற்காக பாஜக அரசு, ராஜினாமா செய்ய வேண்டும். இந்தக் கொடூரமான தாக்குதல் நமது குடிமக்களைப் பாதுகாப்பதில் மத்திய அரசின் தோல்வியை அம்பலப்படுத்துகிறது. நமது வீரர்கள் ஒப்பிடமுடியாத துணிச்சலைக் காட்டிய போதிலும், மீண்டும் மீண்டும் நிகழும் பாதுகாப்பு மீறல்களுக்கு மத்திய அரசு என்ன செய்தது?