
சென்னை: “9.69 விழுக்காடு பொருளாதார வளர்ச்சியுடன் இந்தியாவின் வளர்ச்சி இன்ஜினாக தமிழகம்தான் இருக்கிறது” என்று உலக வங்கியின் உலகளாவிய வணிக மையத் திறப்பு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். மேலும், “உலக வங்கியுடனான நம்முடைய உறவு வெறும் கடனுதவி சார்ந்தது மட்டுமல்ல. டெக்னாலஜி, கொள்கை உருவாக்கம் மற்றும் அறிவு சார்ந்த ஒரு பார்ட்னர்ஷிப் ஆக தான் இதை நான் பார்க்கிறேன்” என்று அவர் கூறினார்.
சென்னை, தரமணியில் உலக வங்கியின் உலகளாவிய வணிக மையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 10) திறந்துவைத்தார். இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியது: “உலக வங்கியுடன் நம்முடைய பார்ட்னர்ஷிப் 1971-ம் ஆண்டு தமிழ்நாடு விவசாயக் கடன் திட்டத்தில் தொடங்கியது. அப்போது இருந்து, தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு, சுகாதாரம், கல்வி, பேரிடர் மேலாண்மை, நகர்ப்புற வளர்ச்சி போன்ற பலதரப்பட்ட துறைகளில் உலக வங்கி நமக்கு உறுதுணையாக இருந்து வருகிறது. குறிப்பாக, 2022-ம் ஆண்டில், புதுடெல்லிக்கு வெளியே தன்னுடைய முதல் மண்டல அலுவலகத்தை உலக வங்கி சென்னையில்தான் அமைத்தார்கள்.