
சென்னை: “இனி, சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் சந்தித்துக் கொள்ளும் உறவுகளும் நட்புகளும், அன்பை பரிமாறிக்கொள்வதைப் போல், புத்தகங்களைக் கொண்டு அறிவைப் பரிமாறிக்கொள்ளச் சென்னை புத்தகப் பூங்காவைத் தொடங்கியுள்ளோம்” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் 1.85 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள சென்னை புத்தகப் பூங்காவை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூன் 10) திறந்து வைத்தார். இந்தப் புத்தகப் பூங்காவில் பல்வேறு பதிப்பாளர்களால் வெளியிடப்படும் தமிழ், ஆங்கிலம் மற்றும் பிற மொழி நூல்களும், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியிட்டுள்ள உயர்கல்வி பாடநூல்கள், இலக்கிய மொழிபெயர்ப்பு நூல்கள், நாட்டுடைமை நூல்கள், போட்டித் தேர்வு நூல்கள், சிறார் இலக்கிய நூல்கள் மற்றும் பள்ளிப் பாடநூல்கள் ஆகியவை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.