
கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என கடந்த 27 ஆண்டுகளாக பல்வேறு தரப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். 2021 சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என வாக்குறுதியளித்தார். ஆனால், 4 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டபோதிலும், கும்பகோணம் புதிய மாவட்டம் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், அரசு விதிகளின்படி புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டுமானால், மாவட்டத்தின் பரப்பளவு 2,500 ச.கி.மீ. முதல் 9,000 ச.கி.மீ. வரை இருக்க வேண்டும். ஆனால், தற்போது 3,396.57 ச.கி.மீ. பரப்பளவுள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து கும்பகோணம் கோட்டத்தை பிரித்தால் 940.22 ச.கி.மீ. மட்டுமே இருக்கும். அதேபோல, மக்கள் தொகை 30 லட்சம் இருக்க வேண்டும். ஆனால், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மக்கள்தொகையான 16,67,609 பேரில், கும்பகோணம் கோட்டத்தில் 6,39,486 பேர் மட்டுமே உள்ளதால், இந்த அளவுகோலும் பூர்த்தியாகவில்லை.