• June 10, 2025
  • NewsEditor
  • 0

மனிதர்களின் ஆயுள் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றது. கடந்த 60 ஆண்டுகளில் உலக மக்களின் ஆயுள் படிப்படியாக அதிகரித்துக் கொண்டேதான் போகின்றது. இந்த நிலையில் “மனிதர்களின் உண்மையான ஆயுள் காலம்தான் என்ன?” என்பதை அறிவியல் அடிப்படையில் இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

நாழிகைப்பூச்சியின் ஆயுள்

நாம் ஒரு விந்தையான உலகத்தில் வாழ்ந்து வருகின்றோம். இவ்வுலகில் வாழும் கோடான கோடி உயிரினங்களில் நாழிகைப்பூச்சியும் (Mayfly) ஒன்று. இவைப் பார்க்கச் சிறிய தட்டான் மாதிரி இருக்கும்.

இவைப் பறக்க ஆரம்பித்த 24 மணி நேரம் மட்டுமே உயிர் வாழ்கின்றன. இந்த ஒருநாளுக்குள் தன் ஜோடியைக் கண்டறிந்து இணைந்து, நீரின் மேற்பரப்பில் நிறைய முட்டைகளையிட்டு இறந்து விடுகின்றன!

நாழிகைப்பூச்சி (Mayfly)

சுறா மீன் ஆயுள்

கிரீன்லாந்தை ஒட்டிய அட்லாண்டிக் பெருங்கடலில் ஒரு பெரிய சுறா மீன் வாழ்கிறது. இந்தச் சுறா மீன் கடந்த 400 வருடங்களாக உயிர் வாழ்ந்து வருகின்றது! அதாவது இந்தச் சுறா அக்பர் இந்தியாவை ஆண்ட காலத்தில் பிறந்தது. அதிசயிக்கும் வகையில் இது இன்றும் உயிர் வாழ்ந்து வருகின்றது!

80 ஆயிரம் ஆண்டுகள் வாழும் மரம்

இதற்கு எல்லாம் மேலாக அமெரிக்க ஐக்கிய நாட்டின் யூட்டா என்ற மாநிலத்தில் ஒரு மரம் 80 ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றது. ஆச்சரியம் என்னவென்றால் இந்தக் காலத்தில்தான் தற்கால மனிதன் ஆப்பிரிக்காவிலிருந்து ஆசியக் கண்டத்திற்குள் குடிபெயர்ந்தான்! அன்று பிறந்த இந்த மரம் இன்றும் உயிர்வாழ்ந்து வருவது அதிசயமே!

இவ்வாறாகப் பூமியில் வாழும் உயிரினங்களின் வாழ்நாள்களில் மிகப் பெரிய அளவிலான வித்தியாசத்தைப் பார்க்கலாம்.

மனிதர்களின் வாழ்நாள்

ஆச்சரியப்படும் அளவில் மனிதர்களின் வாழ்நாள்கள் கூட நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றது. உதாரணமாக, இவ்வுலகில் அதிக காலம் ஜப்பானியர்கள்தான் வாழ்கின்றனர்‌. இவர்களின் சராசரி ஆயுள் காலம் 84 ஆண்டுகள் ஆகும். அடுத்ததாகச் சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, ஸ்பெயின், இத்தாலி நாட்டு மக்கள் சராசரியாக 83 ஆண்டுகள் உயிர் வாழ்கின்றனர். சீனர்கள் சராசரியாக 77 வயதுவரை உயிர் வாழ்கின்றனர்.‌ ஆனால் ஆப்பிரிக்க நாட்டு மக்கள் சராசரியாக 64 ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ்கின்றனர். அதிலும் ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியா நாட்டு மக்களின் சராசரி ஆயுள் வெறும் 53 ஆண்டுகள் தான்.

Japanese
Japanese

மேற்கண்ட தகவல் “வளர்ந்த நாட்டில் மக்கள் நீண்ட காலம் வாழ்கின்றனர்” என்பதை எடுத்துரைக்கின்றது.

“வளர்ந்த நாடுகளில் மக்களுக்கு அப்படி என்ன கிடைக்கின்றது?” எனக் கூர்ந்து நோக்கினால், “தேவையான சத்தான உணவுடன் தரமான மருத்துவ வசதிகளும் இந்த நாட்டு மக்களுக்குக் கிடைக்கின்றன” எனத் தெரிகின்றது.

முயல் ஆய்வு சொல்வதென்ன?

முயல்களும் இப்படித்தான். இயற்கையாகக் காடுகளில் வாழும் இவை குறைவான உணவு கிடைப்பதாலும்; பல்வேறு நோய்களின் தாக்கத்தாலும்; மற்றும் பிற விலங்குகளால் வேட்டையாடப்படுவதாலும் காடுகளில் வாழும் முயல்கள் சுமார் மூன்று ஆண்டுகளே உயிர்வாழ்கிறன.

ஆனால் தேவையான உணவும் நல்ல பராமரிப்பும் கிடைக்கும் படி வீடுகளிலோ அல்லது மிருகக்காட்சி சாலைகளிலோ வளர்க்கப்படும் முயல்கள் 13 ஆண்டுகள்வரை கூட உயிர் வாழ்கின்றன!

சுதந்திரத்திற்குப் பிறகு மக்களின் ஆயுள்

“நம் இந்தியத் திருநாட்டிலும் 1960 வாக்கில் மக்களின் சராசரி ஆயுள் காலம் 46 ஆண்டுகளாகவே இருந்தது. அப்போதைய இந்தியா இன்றைய நைஜீரியாவைவிட மோசமாகவே இருந்தது.

இந்தியாவில் 1960-க்கு அடுத்த 20ஆண்டுகளில் மக்களின் சராசரி ஆயுள் காலம் 55.6 ஆண்டுகளாக முன்னேறியது.

பின்னர் 2000 ஆண்டில் நம்நாட்டு மக்களின் ஆயுள் 63.5 ஆண்டுகளாக உயர்ந்தது. 2021ஆம் ஆண்டு கணக்கெடுப்புப்படி இந்திய மக்களின் சராசரி ஆயுள்காலம் 67 ஆண்டுகளை எட்டிப் பிடித்துள்ளது” எனக் கண்டறியப்பட்டுள்ளது.

சுதந்திர இந்தியாவில் இந்தியப் பொருளாதாரம் அவ்வப்போது வீழ்ச்சியைச் சந்தித்தாலும் சுதந்திரத்திற்குப் பிறகு நம் பொருளாதாரம் படிப்படியாக முன்னேறி வருவது மறுக்க முடியாத உண்மை.

இதனால் நம் மக்களுக்குச் சற்று ஊட்டச்சத்துள்ள உணவுடன் அடிப்படை மருத்துவ வசதியும் படிப்படியாக முன்னேறியபடி தான் உள்ளது. எனவேதான் 1947-ல் இருந்து இன்றுவரை மக்களின் சராசரி ஆயுள்காலமும் படிப்படியாக முன்னேறிக்கொண்டிருக்கின்றது.

ஆயுளை கணிக்கும் இரத்தப் பரிசோதனை

இதுபோல உலக மக்களின் சராசரி வாழ்நாளும் படிப்படியாக முன்னேறிக் கொண்டுதான் இருக்கின்றது. இந்த நிலையில், “மனிதனின் அதிகபட்ச வாழ்வுகாலம் தான் என்ன? இதனைக் கண்டறிவது எப்படி?” என்ற கேள்விகள் எழுகின்றன.‌

“முழுமையான இரத்தப் பரிசோதனை (Complete Blood test) செய்து மேற்கண்ட கேள்விகளுக்கு விடை காண முடியும்” என சிங்கப்பூர், ரஷ்யா, மற்றும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் இணைந்து கண்டறிந்துள்ளனர். இந்தக் கண்டுபிடிப்பை 2021ஆம் ஆண்டு நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் என்ற பத்திரிகையில் வெளியிட்டனர்.

இவர்கள் “இரத்தத்தில் அப்படி என்னதான் கண்டறிந்தனர்? மற்றும் எப்படி மனிதர்களின் அதிகபட்ச வாழ்நாளைக் கண்டறிந்தனர்?” என்பதை பார்ப்போம்.

Blood test
Blood test

நம் உடல் முழுவதும் உள்ள கோடான கோடி செல்களுக்குச் சுவாசிக்க ஆக்சிசனை இரத்த சிவப்பணுக்கள்தான் எடுத்துச் செல்கின்றன.

வயதாக வயதாக இந்த இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைகின்றன எனவும், மேலும் வட்ட வடிவில் இருக்கும் இந்தச் சிவப்பணுக்கள் வயதானவர்களின் இரத்தத்தில் ஒழுங்கற்ற உருவத்தில் மாறியும் வருகின்றன எனவும், அதே நேரத்தில் வயதானவர்களின் உடலில் நீயூட்ரோபில் என்ற இரத்த செல்களின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுகின்றன எனவும் கண்டுபிடிக்கப்பட்டது.

Red blood cells
Red blood cells

நீயூட்ரோபில் வகை செல்கள் நோய்த் தொற்று ஏற்பட்டால் இரத்தத்தில் அதிகமாகும். காரணம் இவை நோய்கிருமிகளை அழிக்க வல்லது. ஆனால் வயதானவர்களின் உடலில் இவற்றின் எண்ணிக்கை எப்போதும் அதிகமாகவே உள்ளன.

குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை லட்சக்கணக்கானவர்களிடம் இவ்வாறு இரத்த சோதனை செய்த ஆராய்ச்சியாளர்கள், “இரத்த சோதனைமூலம் ஒருவரின் வயதைக் கணிக்கலாம். மேலும் இதனை வைத்து மனிதனின் அதிக பட்ச வாழ்நாளையும் அறியலாம்” என கண்டறிந்துள்ளனர்.

இந்த ஆய்வின்படி “மனிதர்களின் ஆயுள் காலம் அதிகபட்சமாக 120 முதல் 150 ஆண்டுகளுக்குள் இருக்கும்” எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இது உண்மையானால், சுமார் 800 கோடி மக்கள் வாழ்ந்துவரும் இந்தப் பூமியில் யாராவது 120 வயதையும் கடந்து வாழ்ந்திருக்க வேண்டும்.

“அப்படி யாராவது இருகின்றார்களா?” என்ற தேடலில் பிரான்ஸ் நாட்டில் பிறந்த ஜீனி கல்மேன்ட் (Jeanne Calment) என்ற அம்மையார் பூமியில் 122 ஆண்டுகளும் 164 நாட்களும் இவ்வுலகில் வாழ்ந்தது தெரிந்தது.

Jeanne Calment
Jeanne Calment

இவர் 1875ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதி பிறந்து 1997ஆம் ஆண்டுஆகஸ்ட் 4 வரை வாழ்ந்துள்ளார். இந்த அம்மையார் போல 122 ஆண்டு உயிர் வாழ நைஜீரிய மக்கள் இரண்டு பிறவிகள் எடுத்தாலும் போதாது!

“இவர்தான் பூமியில் நீண்ட காலம் வாழ்ந்தவர் “என்ற பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். இவர்போல வேறுயாரும் 120 வயதுக்கும் மேல் வாழ்ந்ததாக அறியப்படவில்லை.

இருந்தாலும் மனிதர்களின் அதிகபட்ச ஆயுள் 120-க்கு மேலும் 150 க்கு கீழும் இருக்கும் என்ற கணிப்பை உண்மையென நிரூபிக்கும் படியே ஜீனி கல்மேன்ட் அம்மையாரின் வாழ்க்கை உள்ளது.

சுண்டெலி ஆய்வு சொல்வதென்ன?

ஆமைகள்தான் 150 ஆண்டு உயிர் வாழ்வதாக அறியப்பட்ட நிலையில், மனிதனுக்கும் இது சாத்தியம் எனக் கணிக்கின்றது இந்த ஆராய்ச்சி.

மேலும் சுண்டெலிகளைக் கொண்டு நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சியும் இந்தக் கணிப்பிற்கு ஆதரவளிக்கிறது. சுண்டெலிகளை இரண்டு குழுக்களாக எடுத்துக் கொண்டனர். முதல் குழு சுண்டெலிகளுக்குத் தேவைக்கும் அதிகமாகச் சாப்பாடு வழங்கப்பட்டது. இரண்டாம் குழு சுண்டெலிகளுக்குத் தேவையான அளவுக்கு மட்டும் சாப்பாடு வழங்கப்பட்டது.

முதல் குழு சுண்டெலிகள் ஓராண்டில் ஒவ்வென்றாகச் செத்து மடிந்தன. காரணம் இவை உடலுழைப்பின்றி நிறைய தின்று தீர்த்தன. இதனால் இரத்த கொதிப்பு, நீரிழிவு நோய், பக்கவாதம், மாரடைப்பு போன்ற வகை வகையான நோய்கள் வந்தன. இந்த நோய்களே இந்தச் சுண்டெலிகளின் அரைகுறையான ஆயுளுக்கு காரணங்களாக அமைந்தன.

ஆனால் இரண்டாம் குழு சுண்டெலிகள் வழக்கமாக ஆய்வகத்தில் வாழும் இரண்டு ஆண்டுகள் வாழ்ந்து முதுமை அடைந்து இறந்தன.

பணக்கார நாட்டில் வாழும் மனிதர்களின் வாழ்வும் ஒருவகையில் முதற்குழு சுண்டெலி போல் இருக்கவும் வாய்ப்புள்ளது. ஏழை நாட்டு மக்களைவிட இவர்கள் அதிக காலம் உயிர் வாழ்கின்றனர் என்பது உண்மைதான். இருந்தாலும் அளவுக்கு அதிகமான உணவும் குறைவான உடல் உழைப்பும் வளர்ந்த நாட்டு மக்களின் உடல் ஆரோக்கியத்தை கெடுத்து ஆயுளைக் குறைக்கவும் வாய்ப்புள்ளது.

ஆக, அதிநவீன மருத்துவ வசதிகளுள்ள ஊரில், தரமான உணவைத் தேவையான அளவுக்கு உட்கொண்டு, வேண்டிய உடற் பயிற்சியும் செய்து, கூடவே நல்ல வாழ்க்கை முறையையும் அமைத்துக் கொண்டால் நாம் அதிக பட்சம் எவ்வளவு காலம் வாழ முடியும்? என்ற கேள்வி எழுகின்றது.

இந்தக் கேள்விக்குச் சரியான பதில் கண்டறியப்படவில்லை. காரணம் முயல் மற்றும் சுண்டெலிகளைக் கொண்டு ஆராய்ச்சி செய்தது போல மனிதர்களைக் கொண்டு இப்படியொரு ஆராய்ச்சி நடந்ததில்லை.

ஆனால், `திட்டமிட்டு வரையறுக்கப்பட்ட ஒரு நல்வாழ்வு கிடைத்தால் மனிதன் 150 ஆண்டுகளுக்கு மேலும் வாழ வாய்ப்புள்ளது’ என்றே ஆராய்ச்சி முடிவுகள் மூலம் அறியமுடிகிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *