
டெக் உலகில் நொடிப்பொழுது விரும்பியது எல்லாம் நம் கைகளை வந்து சேர்ந்துவிடுகிறது. அந்த வகையில் ஒவ்வொன்றிற்கும் ஒரு ஆப்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
தற்போது வீட்டுக்கு தேவையான பொருள்கள் வாங்குவதற்கும் வசதியாக வெறும் “10 நிமிடத்தில் டெலிவரி” என்ற அடையாளத்துடன் ஆன்லைன் ஆப்கள் செயல்பட்டு வருகின்றன. ஆனால் அதற்கு பின்னால் நடக்கும் கொடூரமான விஷயங்கள் குறித்து தொழிலாளர் ஒருவர் reddit இல் பகிர்ந்து கொண்டது, இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிளிங்கிட் என்ற ஆப்பில் பகுதி நேர வேலை பார்க்கும் ஒருவர் ”10 நிமிடம் டெலிவரிக்கு” பின்னால் தொழிலாளர்கள் எவ்வாறு கொடூரமான அனுபவத்தை அனுபவிக்கின்றனர் என்பது குறித்து பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில் “நாம் அனைவரும் 10 நிமிடங்களில் மளிகை பொருள்கள் வீட்டுக்கு வரும் யோசனையை விரும்புகிறோம். ஆனால் பெரும்பாலான மக்களுக்கு அதன் பின்னால் என்ன நடக்கிறது என்பது தெரியாது.
டார்க் ஸ்டோர் என்று அழைக்கப்படும் இருட்டான குடோன்களில் தான் மளிகை பொருள்கள் அடுக்கப்பட்டிருக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு பொருள்களை நிர்ணயிக்கப்பட்ட நேரங்களில் தொழிலாளர்கள் எடுக்க வேண்டும். தொழிலாளர்கள் நாள் முழுவதும் இறுக்கமான இடங்களில் ஓடுகிறார்கள்.
பொருள்களை எடுக்க அவர்கள் ஓட வேண்டும். அப்படி ஓடும் போது தினமும் விபத்துகள் நடக்கும். ஒருவரை ஒருவர் மோதிக்கொள்வார்கள், செல்போன் உடையும் என்பதை பயனர் நினைவு கூர்ந்தார்.
ஒரு அழுத்தமான சூழ்நிலையில்தான் அங்கு வேலை நடக்கும். ஒரு பொருளை கண்டுபிடிக்க சில வினாடிகள் கூடுதலாக எடுத்துக் கொண்டாலும் அந்த வேலையை விட்டு நீக்கி வீட்டுக்கு அனுப்பப்படுகிறார்கள்.
பகுதி நேர தொழிலாளர்களின் நிலையே இவ்வாறு இருக்கிறது என்றால், முழு நேர ஊழியர்களின் நிலைமைகள் இன்னும் மோசமாக இருக்கும். சரியான நேரத்தில் பொருள்களை எடுக்க வேண்டும், பேக் செய்ய வேண்டும், மீண்டும் சேமித்து வைக்க வேண்டும் என்று அவர்களின் நிலை நொடிப்பொழுது நடக்க வேண்டும்.

இந்த முயற்சி மற்றும் மன அழுத்தம் அனைத்தும், யாராவது 10 நிமிடங்களில் கோக் மற்றும் மேகியைப் பெற வேண்டும் என்பதற்காகவா? டெலிவரிகளுக்கு 15 அல்லது 20 நிமிடங்கள் எடுத்தால், அது மோசமாக இருக்குமா? இந்த வேகத்தின் மீதான வெறி மனித இழப்பை புறக்கணிக்கிறது என்று அந்த பயனர் வாதாடுகிறார்.
இந்த பதிவு இணையத்தில் வைரலாகி பலரும் இது குறித்து விவாதிக்கத் தொடங்கியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து ஆராய்ந்த மஹாராஷ்டிராவின் உணவு பாதுகாப்பு ஆணையம், புனே அருகேயுள்ள பலேவாடி பகுதியில் அமைந்துள்ள Blinkit நிறுவனத்தின் உணவு உரிமத்தை, ஒழுங்குமுறை மீறல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. மேலும் இதுகுறித்து தீவிரமாக விசாரித்து வருகிறது.