
பீகார் மாநிலம் கைமூர் மாவட்டத்தைச் சேர்ந்த மணமகனுக்கும் மணமகளுக்கும் பெரியோர்களால் நிச்சயக்கப்பட்ட திருமணம் நடத்தப்பட்டது.
மணமகன் ஊர்மக்கள் படைசூழ திருமண ஊர்வலத்துடன் மணமகள் வீட்டுக்கு வந்திருக்கிறார். அனைத்து சடங்குகளும், இசைக் கச்சேரியும் நடந்து முடிந்தது. சடங்கின் இறுதியில் மணமகளுக்கு நெற்றியில் குங்குமம் வைக்கும் நிகழ்வு நடந்தது. அப்போது மணமகனுக்கு கை நடுங்கியிருக்கிறது. இதைப் பார்த்த மணமகள், திருமணத்தை நிறுத்தி, ‘மணமகனுக்கு ஏதோ குறை இருக்கிறது. அவர் பைத்தியம். எனவே, அவரை திருமணம் செய்துகொள்ளமாட்டேன்’ எனக் கத்தியிருக்கிறார்.
இதனால் இருவீட்டாரும் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர். இதற்கிடையில், மணமகள் குடும்பத்தினர் கொடுத்த வரதட்சணைப் பணத்தை திரும்பக் கேட்டனர். இது தொடர்பான செய்திகள் காவல் நிலையத்துக்கும் சென்றது. இருவீட்டாரையும் காவல்நிலையம் வரவழைத்த காவல்துறை அதிகாரி இருவீட்டாரையும் சமாதானம் செய்ய முயன்றார். இறுதிவரை பெண் வீட்டார் திருமணத்தை தொடர்வதற்கு ஒப்புக்கொள்ளவே இல்லை.
இது தொடர்பாக பேசிய மணமகனின் தந்தை,“திருமணம் ரூ. 1 லட்சத்திற்கு நிர்ணயிக்கப்பட்டது. எங்களுக்கு ரூ90,000 ரொக்கமாக கிடைத்தது. நகைகளுக்கு ரூ30,000, புடவைகளுக்கு ரூ20,000, டிஜே இசைக்கு ரூ10,000, மீதமுள்ள பணம் போக்குவரத்துக்கு செலவிட்டோம். எல்லா பணமும் ஏற்கெனவே செலவாகிவிட்டது. அனைத்து சடங்குகளும் முடிந்துவிட்டன. சிந்தூர் வைக்கும்போது, மணமகனின் கை நடுங்கியது.
ஒருவேளை சத்தம் அல்லது அழுத்தம் காரணமாக அந்த நடுக்கம் இருக்கலாம். பெண் திடீரென்று மணமகனுக்கு பைத்தியம் பிடித்திருப்பதாகக் கூறினார். பின்னர் அவரது குடும்பத்தினர் பணத்தைத் திரும்பக் கேட்கத் தொடங்கினர்.” என்றார்.
இது தொடர்பாக பேசிய காவல்துறையினர், “இருவீட்டாரையும் சமாதானம் செய்துவைக்க முயன்றோம். ஆனால் தீர்வு எட்டப்படவில்லை. இதுவரை இருவீட்டார் தரப்பிலிருந்தும் எந்த புகாரும் கொடுக்கவில்லை” என்று தெரிவித்தனர்.