
வரும் சட்டமன்ற தேர்தலில் முதன்முதலாகக் களம் காணும் தமிழக வெற்றிக் கழகத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி, விருப்ப ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ் அதிகாரி, மூன்று முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஜேப்பியார் கல்விக் குழுமத்தைச் சேர்ந்த மரியவில்சன் ஆகியோர் நேற்று தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர்.
நேற்று தங்களை த.வெ.க இணைத்து கொண்டவர்களில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் டேவிட் செல்வினும் ஒருவர்.
பல்வேறு மாவட்டங்களுக்கும் நிர்வாகிகளை நியமித்து வரும் விஜய், தூத்துக்குடி மாவட்டத்துக்கு இன்னும் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகளை நியமிக்கவில்லை. பொறுப்பாளராக அஜிதா ஆக்னஸ் நியமிக்கப்பட்டிருந்தாலும் அவர் மாவட்டச் செயலாளர் ஆக்கப்படுவாரா என்பது இன்னும் தெரியவில்லை.
இந்நிலையில், இரு தினங்களுக்கு முன் மாவட்ட அளவில் பதவிகளைப் பிடிப்பது தொடர்பாக இருதரப்பு போனில் மோதிக்கொண்டதாக ஆடியோ ஒன்று வெளியாகி கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
முன்னதாக வி.சாலையில் கட்சியின் முதல் மாநாட்டில் கட்சியின் கொள்கைகளை வாசித்த கோவில்பட்டியைச் சேர்ந்த பேராசியர் சம்பத் உள்ளிட்ட பலரும் மாவட்டத்தில் பல்வேறு பதவிகளுக்கு முயற்சி செய்வதாக சொல்லப்படும் சூழலில், டேவிட் செல்வினின் என்ட்ரியும் நிகழ்ந்திருப்பது குறித்து அவருக்கு நெருக்கமான சிலரிடம் பேசினோம்.
ஈழ ஆதரவு… வைகோ… எம்.எல்.ஏ!
”டேவிட் செல்வினின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் மண்ணாரந்தட்டு. ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டமா இருந்த போதே வைகோ சிபாரிசால் திமுக மாணவர் அணியில் பொறுப்பு வாங்கியவர். படிச்சிட்டிருந்த நாட்கள்லயே ஈழ ஆதரவு குரல் கொடுத்த வகையில் வைகோவால் ஈர்க்கப்பட்டார். தூத்துக்குடி மாவட்டம் உதயமான பிறகு திருவைகுண்டம் தொகுதியில் தொடர்ந்து போட்டியிட்டார்.
ஒரேயொரு முறை அதாவது 1996ல் சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப் பட்டார். அடுத்த தேர்தல்ல சொற்ப ஓட்டுகள்ல வெற்றி வாய்ப்பை இழந்தார்.
தூத்துக்குடி திமுகவைப் பொறுத்தவரை மறைந்த பெரியசாமி வச்சதுதான் சட்டம். ஆரம்பத்தில் அவருடைய ஆதரவாளரா இருந்த செல்வின் பிறகு அவர்கிட்ட இருந்து விலகினார். அப்ப இருந்தே திமுக-வுல ஓரங்கட்டப்பட்ட நிலைமைனுதான் சொல்லணும்.
இருந்தாலும் மாநில இளைஞரணித் தலைவரா இருந்த இப்போதைய முதல்வர் ஸ்டாலின் மூலம் பனை தொழிலாளர் நல வாரியத் தலைவர் பதவியையும் வகித்தார்.
ஆனா ஒரு கட்டத்துக்கு மேல் மாவட்ட திமுக-வில் வளர்ச்சி இல்லைனு தெரிஞ்சதுல இருந்தே கட்சி மீது அதிருப்தி உண்டாகிடுச்சு.
தொடர்ந்து அதிமுக பக்கம் போனார். அங்கயும் எதிர்பார்த்த வளர்ச்சி இல்லாததால் சில வருடங்களுக்கு முன் திரும்பவும் திமுக-வுக்கே வந்தார்.இந்தச் சூழல்ல தான் இப்ப தவெக-வுல சேர்ந்திருக்கார்’ என்கிறார்கள் இவர்கள்.

தவெக உதயமானது முதலே இவருக்கு அந்தக் கட்சியில் சேர்கிற எண்ணம் வந்ததாகவும், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் உள்ளிட்ட சிலருடன் தவெக-வில் சேர்வது குறித்து தொடர்ச்சியாக இவர் பேசி வந்ததாகவும் கூடச் சொல்கிறார்கள் சிலர். இவர் தற்போது கட்சியில் சேர்ந்திருக்கும் சூழலில் கடைசிக் கட்டத்தில் சகாயத்தைக் கூட்டி வந்தாலும் வரலாம் என்கிறார்கள்.
மறுபக்கம், தவெக தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் நியமனம் தாமதமாவது குறித்து அந்தக் கட்சி வட்டாரத்தில் சிலரிடம் பேசினோம்.
”கட்சி ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே, அதாவது விஜய் மக்கள் மன்றமா இருந்தப்ப அந்த மன்றத்தின் முகமா இருந்தது பில்லா ஜெகன். திமுகவின் அனிதா ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளரா இருக்கிற ஜெகன் விஜய் கட்சி ஆரம்பிச்சதும் இங்கு வந்திடுவார்னு நினைச்சாங்க. ஆனா அவர் வரலை. இப்பவும் திமுகவுலதான் இருக்கார்.

அவருடைய சகோதரி அஜிதா. அவரைத்தான் இப்ப பொறுப்பாளரா நியமிச்சிருக்கிறது தவெக தலைமை. என்னதான் ரசிகர் மன்றத்துல தீவிரமா இயங்கினாலும், நாம தீவிரமா எதிர்க்கிற கட்சியில இருக்கிறவருடைய குடும்பத்துல இருந்து ஒருத்தர் எப்படி மாவட்டச் செயலாளரா வரமுடியும்னு அஜிதாவுக்கு எதிரான சிலர் தலைமைக்குப் புகார் தெரிவிக்க, அதனாலேயே வேற சிலரையும் ஆப்ஷனா கையிலெடுக்க நினைச்சதாம் தலைமை.
இந்தப் பஞ்சாயத்துலதான் நியமனங்கள் அப்படியே நிலுவையில் இருக்கு. அஜிதா தவிர மேலும் சிலரும் மாவட்டச் செயலாளர் பதவிக்கு காய் நகர்த்திட்டிருக்கிறாங்க. இந்தச் சூழல்ல மாவட்டம் முழுக்க ஓரளவு அறிமுகம் இருக்கிற டேவிட் செல்வினும் நிச்சயம் பதவியை எதிர்பார்ப்பார்னு தெரியுது.
எது எப்படியோ இந்தப் பஞ்சாயத்தையெல்லாம் சரிக்கட்டி சீக்கிரம் நிர்வாகிகளை நியமிச்சா மட்டுமே தேர்தலுக்குக் கட்சி தயாராக முடியும். தலைமை இதைப் புரிஞ்சுக்கணும்’ என்கின்றனர் இவர்கள்.