
வகுப்புத் தோழர்கள்
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் வி.ஜே. பாபு (62). இவர் 50 ஆண்டுகளுக்கு முன்பு பாலால் கிராம பஞ்சாயத்தில் உள்ள மாலோமின் நாடக்கல்லு உதவி பெறும் பள்ளியில் 4 வகுப்பு படித்திருக்கிறார்.
இவருடன் படித்த வகுப்புத் தோழர்கள் மாலோத்து பாலகிருஷ்ணன், மேத்யூ வலியப்ளாக்கல். இவர்கள் மூவரும் ஒரே பகுதியில் விவசாயம் செய்துவருகின்றனர்.
வகுப்புத் தோழர்கள் என்பதால், நட்பையும் பேணிவந்தனர். இந்த நிலையில், நேற்று மாலோமில் உள்ள ஜானகிராம் ஹோட்டல் முன் மூவரும் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தனர்.
மருத்துவமனையில் அனுமதி
அப்போது, பழைய கதைகளை நினைவுகூர்ந்தனர். அப்போது வி.ஜே. பாபுவுக்கும் மாலோத்து பாலகிருஷ்ணனுக்கு இடையே 4-ம் வகுப்பு படித்தபோது ஏற்பட்ட சண்டை தொடர்பாக வாக்குவாதம் நடந்திருக்கிறது.
அப்போது, மாலோத்து பாலகிருஷ்ணன் வி.ஜே. பாபுவைக் கீழே தள்ளினார், மேத்யூ வலியப்ளாக்கல் வி.ஜே பாபுவின் முகத்திலும் அவரது உடலிலும் கல்லால் அடித்திருக்கிறார். இதில், வி.ஜே பாபுவின் பற்களில் சில உடைந்திருக்கின்றன. அதைத் தொடர்ந்து வி.ஜே பாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பாரதிய நியாய சன்ஹிதாவின் கீழ்
இது தொடர்பாகப் பேசிய காவல்துறை அதிகாரி, “சம்பவத்தின் போது பற்கள் உடைந்தால், அந்தச் செயல் ஜாமீனில் வெளிவர முடியாத குற்றமாக மாறும். மருத்துவர்களிடம் விசாரணை நடத்துகிறோம்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) பிரிவுகள் 126 (2), 118 (1), மற்றும் 3 (5) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வி.ஜே. பாபு வாக்குமூலம்
சம்பவத்திற்குப் பிறகு வி.ஜே பாபு அளித்த வாக்குமூலத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான பாலகிருஷ்ணன் 4-ம் வகுப்பில் ஒரு முறை தன்னை அடித்ததாகவும், இப்போது இரண்டாம் முறை அடித்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
மேலும், இந்தச் சண்டையை நீதிமன்றம் கொண்டுசெல்ல விரும்பவில்லை எனத் தெரிவித்திருக்கும் அவர், நஷ்ட ஈடாக ரூ1.5 லட்சம் பெற்றுத் தரும்படி தெரிவித்திருக்கிறார்” என்றார்.