
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் திருக்கோயிலில் அ.தி.மு.க கொள்கைப் பரப்பு துணைச் செயலாளர் நடிகை கௌதமி சுவாமி தரிசனம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஆண்டாளின் அழைப்பின் பெயரில் எதிர்பாராமல் கோயிலுக்கு வந்து வழிபாடு நடத்தியுள்ளேன். தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக-வினர், அதிமுக பரம்பரை வாக்காளர்களை நேரில் சென்று சந்திக்க உள்ளேன்.
யாருக்கு எந்த தொகுதி என முடிவு செய்ய காலம் உள்ளது. இது குறித்து எடப்பாடி பழனிச்சாமி முடிவெடுக்க வேண்டும். சரியான நேரத்தில் சரியான முடிவு எடுப்பார்.
அதிமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இணைய வேண்டும் என்பதிலும் அவர் சரியான முடிவு எடுப்பார். உள்துறை அமைச்சர் அமித்ஷா, கூட்டணி ஆட்சி என குறிப்பிட்டதன் வார்த்தைகளின் அர்த்தம், பின்னணி குறித்து இந்த நேரத்தில் ஆராய வேண்டிய அவசியம் இல்லை.
அதிமுக., பாஜக கூட்டணி முடிவான பின்னர் தேர்தலுக்கான அனைத்து பணிகளும் நடைபெறும் என்பதில் உள்துறை அமைச்சர் அமித் ஷா மிக உறுதியாக இருக்கிறார். அதை நேற்று ஒருமுறை உறுதிப்படுத்தி இருக்கிறார்.
திமுக ஆட்சியை வீழ்த்த வேண்டும். மீண்டும் தலையெடுத்து பார்க்கக்கூட முடியாத அளவு திமுக-வுக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும். திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற நிலையை வரவேற்பதா? போனால் போகட்டும் என பொறுத்து விட்டு விடவா? எனத் தெரியவில்லை.

அடுத்த தேர்தலில் திமுகவை தலை நிமிர்ந்துகூட பார்க்க முடியாத அளவுக்கு முடிவு செய்தால்தான் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நியாயமான மக்களாட்சி கொண்டு வந்து தமிழ்நாட்டை காப்பாற்ற இயலும்.
கூட்டணி குறித்து யார் என்ன சொன்னாலும் அது அவர்களுடைய கருத்து. வரும் 2026-ம் ஆண்டு நடைபெறும் தேர்தலை பொறுத்தவரை கூடுதலான விழிப்புணர்வு பொதுமக்களுக்கு ஏற்படுத்த வேண்டியுள்ளது.” என்றார்.