• June 10, 2025
  • NewsEditor
  • 0

கொழும்பில் இருந்து மும்பை சென்ற சிங்கப்பூர் கொடியுடன் கூடிய `வான் ஹாய் 503′ கப்பல் கேரள மாநிலம் கண்ணூர் அழிக்கால் துறைமுகத்திலிருந்து 44 நாட்டிக்கல் மைல் தொலைவில் நேற்று காலை தீபிடித்து எரிந்தது.

கப்பலில் கேப்டன் உள்பட மொத்தம் 22 பேர் இருந்தனர். அதில் கேப்டன் உள்பட 18 பேர் லைஃப் ஜாக்கெட் அணிந்துகொண்டு கடலில் குதித்து தப்பினர். அவர்களை கடலோர காவல் படையினர் மீட்டு நேற்று இரவு 10 மணி அளவில் மங்களூருக்கு அழைத்துச்சென்றனர்.

அதில் 5 பேர் தீ காயம் அடைந்துள்ளதால், அவர்கள் மங்களூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அதில் படுகாயம் அடைந்த 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளா கடல் அருகே தீபிடித்து எரியும் கப்பல்

கடலோர காவல்படை, இந்திய கப்பல் படை ஆகியவை தீ விபத்துக்குள்ளான கப்பலை சுற்றி கண்காணித்து வரும் நிலையில், கொழுந்துவிட்டு எரியும் தீயால் ஏற்பட்டுள்ள அதிக வெப்பம் காரணமாக கப்பலின் அருகில் சென்று தீயை அணைக்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது. கண்டெய்னர்கள் எப்போதுவேண்டுமானாலும் வெடித்துச் சிதறலாம் என்பதாலும் அருகில் செல்வது ஆபத்தானது என கருதப்படுகிறது.

கடலில் விழுந்ததாக சந்தேகிக்கப்படும் சுமார் 20-க்கும் மேற்பட்ட கண்டெய்னர்களின் நிலை என்னவென்றும் தெரியவில்லை.

கொழும்பு துறைமுகத்தில் இருந்து மும்பை நவசேவா துறைமுகம் நோக்கிச் சென்ற அந்த சரக்கு கப்பலில் நேற்று காலை 9.30 மணியளவில் ஒரு கண்டெய்னரில் வெடிச்சத்தம் கேட்டதாகவும், 12.40 மணியளவில் தீ பற்றி எரிந்ததாகவும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

காணாமல்போன கப்பல் ஊழியர்கள் நான்குபேரில் 2 பேர் தைவான் நாட்டைச் சேர்ந்தவர்கள், ஒருவர் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர் மற்றொருவர் மியான்மார் நட்டைச்சேர்ந்தவர் ஆவார். இந்தியாவைச் சேர்ந்த ஊழியர்கள் யாரும் கப்பலில் பணியில் இருக்கவில்லை என உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தீ விபத்துக்குள்ளான கப்பல்

தீ விபத்துக்குள்ளான கப்பல் 270 மீட்டர் நீளம் உள்ளது. இக்கப்பல் 20 ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ளது. அந்த கப்பலில் மொத்தம் 157 கண்டெய்னர்கள் இருந்துள்ளது. அவற்றில் ஆசிட், கன் பவுடர், லித்தியம் பேட்டரி, மண்ணெண்ணெய், பெயிண்ட், தீப்பெட்டிகள் உள்ளிட்ட எளிதில் தீப்பிடிக்கும் தன்மைகொண்ட பொருள்கள் இருந்துள்ளதாகவும். சுவாசித்தாலே மரணம் ஏற்படும் அளவுக்கு ஆபத்தான ரசாயனங்கள் கப்பலில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

கப்பலில் இருந்த பொருட்களின் விபரங்களை கடலோர காவல்படை சேகரித்த நிலையில் இன்னும் வெளியிடவில்லை.

தீ விபத்துக்குள்ளான கப்பலில் இரண்டாவது நாளாக இன்றும் மீட்புப்பணிகளுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *