
தயாரிப்பாளரும் தொலைக்காட்சி அதிபருமான ஏக்தா கபூர், அனுராக் காஷ்யப் கூறிய “மாமியார் மருமகள் கதைகள்” விமர்சனத்துக்காக கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளார்.
தற்போது பாலிவுட்டில் பெரும் விவாதமாகியிருக்கும் இந்த பிரச்னைகள் நெட்ஃபிளிக்ஸ் சி.இ.ஒ டெட் சரண்டோஸின் கருத்துக்களில் இருந்து தொடங்கியது.
“சேக்ரட் கேம்ஸ்… சரியான முடிவா?”
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “இந்தியாவில் சேக்ரட் கேம்ஸ் நிகழ்ச்சியுடன் நெட்ஃபிளிக்ஸை லான்ச் செய்தது சரியான முடிவா எனத் தெரியவில்லை. இன்னும் அதிக மக்கள் ஆதரவு கிடைக்கும் நிகழ்ச்சியுடன் தொடங்கியிருக்கலாம் என நினைக்கிறேன். எனக்கு அதை மீண்டும் மாற்றியமைக்க வாய்ப்பு கிடைத்தால் சேக்ரட் கேம்ஸை இரண்டு ஆண்டுகள் கழித்துதான் எடுத்திருப்போம்” எனப் பேசியிருந்தார்.
அனுராக் காஷ்யப் சேக்ரட் கேம்ஸ் தொடரின் இணை இயக்குநரும் தயாரிப்பாளரும் ஆவார்.
Anurag Kashyup பேசியது என்ன?
நெட்ஃபிளிக்ஸ் சி.இ.ஒ கருத்தால் கொதிப்படைந்த அவர், “டெட் சரண்டோஸ் மாமியார் மருமகள் (சாஸ்-பாஹு) கதையுடன் தொடங்கியிருக்க வேண்டும்… அதை நன்றாக செய்திருப்பார்.

கதை சொல்லுதல் என வந்துவிட்டால் இந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் முட்டாள்கள் என்பது எனக்கு எப்போதும் தெரியும். ஆனால் டெட் சரண்டோஸ் முட்டாள்தனத்துக்கான வரையறையாக இருந்திருக்கிறார் என்பது எனக்கு தெரியாது. இதைக் கண்டுபிடித்ததில் மகிழ்ச்சி, இப்போது எல்லாமும் தெளிவாகிறது” எனக் கடுமையாக சமூக வலைத்தளங்களில் எழுதினார்.
அனுராக் நெட்ஃபிளிக்ஸை விமர்சிப்பது இது முதன்முறை அல்ல.
சமீபத்தில் ஏக்தா கபூரின் பாலாஜி டெலிஃபிலிம்ஸ் மற்றும் நெட்ஃபிளிக்ஸ் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தைச் சுட்டிக்காட்டியே அனுராக் ‘சாஸ்-பாஹு’ எனப் பேசியதாகக் கருதப்படுகிறது.

நீங்கள்தான் வர்க்கவாதிகளாக இருக்கிறீர்கள்!
அனுராக் கருத்தை எதிர்த்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ஏக்தா கபூர், “‘நீ பெரிய முட்டாள்’ எனக் கூறுவதன் மூலம் நீங்கள் (அனுராக்) மிகவும் புத்திசாலியாகவும் கூலான ஆளாகவும் இருப்பதுபோல உங்களுக்கு ஒரு சாதகம் ஏற்படுகிறது… ஆனால் அப்படியில்லை. சுய விழிப்புணர்வு வேண்டாமா?
சாஸ்-பாஹு (மாமியார் மருமகள் நாடகங்கள்) இந்திய மக்களிடம் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் (இந்தியாவில் பெண்களுக்கு எப்படி ஒரு குரல் கிடைத்தது என்பது) மதிப்புமிக்க சிகாகோ ஆராய்ச்சியால் நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது!
எல்லாரையும் உள்ளடக்கிய உலகத்தைப் பேசும் கலைஞர்கள்தான் மிகவும் வர்க்கவாதிகளாக இருக்கிறீர்கள்.
ஜனநாயகம் மற்றும் நியாயத்துக்காக ‘நாங்கள் சிறந்தவர்கள்.. நீங்கள் எங்களுடன் சேர்ந்து அமர முடியாது’ என்ற மனப்பான்மையை (attitude) நாம் கைவிட வேண்டும். எல்லோருக்கும் அன்பும் ஒளியும் கிடைக்கட்டும்”. என பதிவிட்டிருந்தார்.