
அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றும் நாயகன் ஜீவா (விஜித் பச்சான்), குழந்தை கடத்தல் வழக்குக்காகக் கைது செய்யப்படுகிறார். சிறைக்குச் செல்ல வேண்டும் என்று திட்டமிட்டே அவர் அதைச் செய்தது போலீஸ் விசாரணையில் தெரிய வருகிறது. அவர் போலீஸிடம் சில ரகசியங்களைச் சொல்கிறார். செய்யாத குற்றத்தைச் செய்ததாகக் கூறி ஜீவா சிறைக்குச் சென்றது ஏன்? போலீஸாரிடம் அவர் தெரிவித்த ரகசியம் என்ன? ஆகிய கேள்விகளுக்கு விடை சொல்கிறது, படம்.
உலகம் வேகமாக மாறிக்கொண்டிருந்தாலும் இன்னும் சாதி கொடுமைகள் பற்றியும் அதை வைத்து அரசியல் நடத்தும் அரசியல்வாதிகளின் பின்னணியிலும் எத்தனை படங்கள் வந்தாலும் அவை அனைத்தும் இன்றைய தேவையே. அப்படி ஒரு பின்னணியில் ஆணவக் கொலை பற்றி அழுத்தமாகப் பேசுகிறது, அறிமுக இயக்குநர் சிவபிரகாஷ் இயக்கி இருக்கும் இந்த படமும். பழிவாங்கும் கதைதான் என்றாலும் அதை மட்டுமே வைத்து சாதாரணம் என்று ஒதுக்கிவிட முடியாது.