
சஃபாரி வாகனங்களைத் தாக்காமல் இருப்பதன் காரணம் தெரியுமா?
ஆப்பிரிக்க காடுகளுக்குள்ள ‘லயன் சஃபாரி’ போறவங்க, ‘முழுசா மூடப்படாத ஜீப்’கள்ல செல்கிற ரீல்ஸ் அடிக்கடி கண்கள்லபட்டுக்கிட்டே இருக்கு. சில ரீல்ஸ்ல, ரிசார்ட் வெளியே புல்வெளியில சில டூரிஸ்ட்டுகள் டீ குடிச்சிக்கிட்டு உட்கார்ந்திருக்க, சிங்கங்கள் அவங்களை கண்டுக்காம கடந்து போகுது. இது என்னடா சிங்கங்களுக்கு வந்த சோதனை..? அடிக்கடி தங்களைப் பார்க்க வர்ற மனுஷங்களைப் பார்த்து பார்த்து சிங்கங்கள் ‘நார்மலைஸ்’ ஆயிடுச்சா? சிங்கங்களோட இந்த அமைதிக்குப் பின்னாடி வேற ஏதாவது காரணங்கள் இருக்கா? தங்களை வேடிக்கைப் பார்க்க வர்ற மனுஷங்ககிட்ட சிங்கங்கள் எப்பவும் அமைதியா தான் நடந்துக்குமா? இவற்றைப்பத்தி எல்லாம் வன ஆர்வலர்களும், ஆராய்ச்சியாளர்களும் என்ன சொல்றாங்கன்னு தேடினோம்.
சிங்கங்களின் பார்வையில் சஃபாரி வாகனங்கள்!
சிங்கங்கள் சஃபாரி வாகனங்களைப் பார்க்கிறபோது, அவற்றின் வடிவம் அவற்றின் நரம்பு மண்டலத்துக்கு கடத்தப்படும். அப்படிக் கடத்தப்படும்போது, பூனைக்குடும்பத்தைச் சேர்ந்த விலங்குகளின் மூளையில் உள்ள நரம்பு செல்கள், சஃபாரி வாகனங்களின் அளவு, அது இருக்குமிடம், அது எப்படி நகர்கிறது என்பதை மிகத் துல்லியமாக கணிக்கும். அதனால், சிங்கங்களைப் பொறுத்தவரை, சஃபாரி வாகனங்களில் பல மனிதர்கள் இருக்கிறார்கள் என்று எடுத்துக்கொள்ளாது. அந்த சஃபாரி வாகனத்தையே தன்னைவிட பெரிய சைஸில் இருக்கும் ஓர் உருவமாகவே எடுத்துக்கொள்ளும். தன்னைவிட பெரிய உருவத்துடன் மோத எந்த விலங்குகளும் விரும்புவதில்லை, சிங்கம் உள்பட.
அச்சப்படுகின்றனவா காட்டு ராஜாக்கள்?

அடிக்கடி தங்கள் மத்தியில் சஃபாரி வாகனங்கள் வந்து செல்வதால், இவற்றால் நமக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்பதை சிங்கங்கள் உணர்ந்துக்கொண்டதாலும்கூட அவை அந்த வாகனங்களைத் தாக்காமல் இருக்கலாம். சஃபாரி செல்பவர்கள் சிங்கங்களின் அமைதியைக் குலைக்கும்படி சத்தம் எழுப்பாத வரைக்கும், ஒரு சிங்கக்குடும்பத்தின் ஒற்றுமையைக் குலைக்கும்படி எதையும் செய்யாமல் இருக்கும் வரைக்கும், சிங்கங்கள் சஃபாரி வாகனங்களை எதுவும் செய்யாது. சஃபாரி வாகனங்கள் ஒரே பாதையில் அமைதியாக, ஒரே சீராக செல்லும் வரைக்கும் சிங்கங்கள் அவற்றை கண்டுகொள்ளாது என்கிறார் சிங்கங்கள் குறித்த ஆராய்ச்சியாளரும் வனவிலங்கு நிபுணருமான டாக்டர் கிரெய்க் பேக்கர்.
மனிதர்களுடன் மோதலை விரும்பவில்லையா சிங்கங்கள்?

சிங்கங்களால் நமக்கு உயிர் ஆபத்து நேரலாம் என்று மனிதர்களுக்கு எப்படித் தெரியுமோ, அதேபோல சிங்கம் போன்ற வலுவான வேட்டையாடிகளுக்கும் அவற்றின் ‘பரிணாம உள்ளுணர்வு’ எவற்றுடன் மோதலாம்; எவற்றுடன் மோதக்கூடாது என்பதை தெரியப்படுத்தும். ஜர்னல் ஆஃப் அனிமல் ஈக்காலஜியில் வந்த ஓர் ஆய்வு, ‘சிங்கம் போன்ற பெரிய மாமிச உண்ணிகள், பல நூறு ஆண்டுகளாக தாங்கள் உயிர்வாழ வேண்டுமென்றால் மனிதர்களைத் தவிர்க்க வேண்டும் என்கிற உத்தியை தெரிந்து வைத்திருக்கின்றன’ என்கிறது. அதாவது, சிங்கம் போன்ற பெரிய வேட்டையாடி விலங்குகள்கூட மனிதர்களை ஆபத்தானவர்கள் லிஸ்ட்டில்தான் வைத்திருக்கின்றன என்பதுதான் இதன் அர்த்தம். அதனால்தான், மனிதர்கள் வாகனங்களில் அருகில் இருக்கும்போதுகூட, சிங்கங்கள் அவர்களைவிட்டு பெரும்பாலும் ஒதுங்கியே செல்கின்றன.
சிங்கங்களின் பாடி லாங்வேஜ்!

வாகனங்கள் சற்று வேகமாக சென்றாலோ, அல்லது ஆர்வத்தில் அவற்றின் அருகே சென்றாலோ, சிங்கங்கள் தங்களை தற்காத்துக்கொள்ள தாக்குதலுக்கு தயாராகும். லயன் சஃபாரி செல்கையில், உடன் வரும் கைட் சிங்கங்களின் பாடி லாங்வேஜுக்கு ஏற்ப, தூரம், சத்தம், தொந்தரவு செய்யாமல் இருத்தல் போன்ற விஷயங்களை சஃபாரி செல்பவர்களுக்கு அறிவுறுத்தி, மனிதன் – சிங்கம் மோதல் நிகழாமல் தடுப்பார்.
சிங்கங்கள் பொதுவாக சூரியன் அஸ்தமிக்கிற வேளையிலும், அதிகாலையிலும் வேட்டை மனநிலையில் இருக்கும். அந்த நேரத்தில் சஃபாரி செல்லும்போது கைட் சொல்கிற அனைத்து பாதுகாப்பு வழிகாட்டுதல்களையும் பின்பற்ற வேண்டும்.
அரிதாக தாக்கும்!

சிங்கங்களை அச்சுறுத்தினால், கால்களைத்தூக்கி கர்ஜனை செய்து நம்மை எச்சரிக்கும். அதை அலட்சியப்படுத்தும்போது சிங்கங்கள் தாக்கக்கூடும். 2022-ல் உலகம் முழுக்க எடுத்த தரவுகளின்படி, கிட்டத்தட்ட ஒரு கோடி பேரின் மரணத்துக்கு கொசுக்கள் காரணமாக இருந்திருக்கின்றன. இரண்டாவது இடத்தில் பாம்பும், மூன்றாவது இடத்தில் நாயும் இருக்கின்றன. ஆனால், மனிதர்களைக் கொல்கிற விலங்குகளில் சிங்கங்கள் 12-வது இடத்தில்தான் இருக்கின்றன. 10-வது மற்றும் 11-வது இடங்களில் நீர் யானையும், யானையும் இருக்கின்றன. கடந்த மாதம் நமீபியாவை சேர்ந்த 59 வயது தொழிலதிபரான பெர்ன்ட் கெபல் என்பவரை சிங்கம் தாக்கிக் கொன்றது நினைவிருக்கலாம். இவர் தன்னுடைய காரின் மேல் சிறிய கூடாரம் அமைத்து தங்கியிருந்ததாகவும், இரவில் இயற்கை உபாதையைக் கழிக்க கூடார த்தில் இருந்து கீழே இறங்கியபோதுதான் ஒரு சிங்கத்தால் தாக்கப்பட்டு இறந்திருக்கிறார்.
லயன் சஃபாரி செய்ய வாய்ப்புக் கிடைத்தவர்கள் கவனமாக இருப்போம்!