• June 10, 2025
  • NewsEditor
  • 0

“அமுல் வருகிறது என்ற பூச்சாண்டிக்கு பயப்பட மாட்டோம்..” – மனோ தங்கராஜ்

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆவின் நிறுவனம் மற்றும் ஆவின் குளிர் பதனக் கிடங்கு ஆகியவற்றை பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் கலந்து கொண்டு ஆய்வு மேற்கொண்டனர். 

இதன் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், 

“விவசாயிகளுக்கு 3 ரூபாய் விலை உயர்வு ,3 ரூபாய் மானியம் தரமான பாலுக்கு மேலும் ஒரு ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

தி.மு.க ஆட்சிக்கு வந்த பின், லிட்டருக்கு 10 ரூபாய் வரையில் கூடுதலாக லாபம் கிடைக்க விழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆவின் மட்டும் தான் சீரான விலையை ஆண்டு முழுவதும் கொடுத்து வருகிறது. ஆவினில் நிரந்தர பணியாளர்களை நியமிக்க நடடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சில பணிகளுக்கு தற்காலிக பணியாளர்களை தவிர்க்க முடியாது. தற்காலிக பணியாளர்களை பணிக்கு எடுக்க போகிறோம். அவர்கள் மூலம் ஆவின் பொருள்களை மார்கெட்டிங் செய்து மக்களிடம் கொண்டு செல்ல உள்ளோம். ஆவின் நிறுவனம் லாபத்தில் இயங்குகிறது. அமுல் வருகிறது என்ற பூச்சாண்டிக்கு எல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம். ஆவின் பாலை மக்கள் நம்ப வேண்டும்.

mano thangaraj

ஆவின் பால் கொள்முதல்

விவசாயிகளை தக்க வைக்க அனைத்து விதமான நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். கடந்த ஒரு வருடத்தில் ஆயிரம் கோடி ரூபாய் வரையில் விவசாயிகளுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.

ஆவின் நிறுவனம் சார்பில் பால் கொள்முதல் செய்யும் விவசாயிகளுக்கு கடந்த ஆட்சி காலத்தில் போனஸ் வழங்கப்படாமல் இருந்தது. ஆனால், இந்த ஆட்சி பொறுப்பேற்றவுடன் கடந்த நான்கு ஆண்டுகளாக போனஸ் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் உள்ள பால் சொசைட்டிகளை லாபம் ஈட்டும் சொசைட்டிகளாக மாற்றுவதற்கு உள்ள நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

ஆவின் நிறுவனத்தை விட தனியார் நிறுவனங்கள் விவசாயிடமிருந்து பல்லாயிரக்கணக்கான லிட்டர் பால் அதிகமாக கொள்முதல் செய்யப்படுவது குறித்து கேட்கிறீர்கள். இதில் ஆவின் நிறுவனம் சார்பில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், விவசாயிகள் ஆவின் நிறுவனத்தை நோக்கி வரவேண்டும். விவசாயிகள் ஆவின் நிறுவனத்தை நம்ப வேண்டும்.

பாலுக்கு பண பட்டுவாடா தாமதம்

கடந்த ஆட்சிக் காலத்தில் விவசாயிகளுக்கு பண பட்டுவாடா வழங்குவது என்பது காலதாமதமாக இருந்ததால் விவசாயிகள் தனியார் பால் நிறுவனத்தை நோக்கி சென்றனர். ஆனால், தற்போது அவர்களை ஆவின் நிறுவனம் நோக்கி வருவதற்கு உண்டான வேலைகளை ஆவின் நிறுவனம் எடுத்து வருகிறது. ஆவின் நிறுவன மட்டுமே விவசாயிகளுக்கு சீரான விலையை ஆண்டுதோறும் கொடுத்து வருகிறது. இது, விவசாயிகளுக்கு போய் சேர வேண்டும்.

ஆவின் பால் பொருள்கள்

ஆவின் பூத்

ஆவின் மட்டுமே விற்பனை செய்யப்படும் கடைகளில் வேறு எந்த பொருளும் விற்பனை செய்யப்படுவது கிடையாது. ஆனால், ஆவின் பூத் கொடுக்கும் போது அவர்கள் பல்வேறு விதமான பொருட்களை அங்கு விற்பனை செய்து வருகின்றனர். இதுபோன்று ஆவின் பொருள்கள் மட்டுமல்லாது, பிற பொருள்களை விற்பனை செய்யும் முகவர்களை கண்காணிப்பதற்கு மார்க்கெட்டிங் லெவல் ஆள்கள் நியமிக்கப்பட உள்ளனர். 

ஆவினில் மாற்றங்கள் வரும்

ஆவின் நிறுவனம் சார்பாக தற்போது 200 -க்கும் மேற்பட்ட பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை கூட்டுவதற்கு உண்டான நடவடிக்கைகளை ஆவி நிறுவனம் எடுத்து வருகிறது. கூடுதல் பொருள்கள் உற்பத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது சப்ளை செயினில் பிரச்னை இருந்து கொண்டுள்ளது. அதனை தீர்ப்பதற்கு உண்டான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். ஓரிரு மாதத்திற்குள் ஆவினில் மிகப்பெரிய மாற்றங்கள் வரவுள்ளது.

`டிலைட் பாலை வாங்குங்கள்..’

ஆவின் பால் பாக்கெட்டில் அளவு குறைவாக இருப்பதற்கு வாய்ப்பே கிடையாது. தமிழகத்தில் ஆவின் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்படும் பச்சை பாக்கெட் பால் தட்டுப்பாடாக உள்ளதாக கேள்வி எழுப்புகிறீர்கள்.

நீங்கள் ஆவின் நிறுவனம் சார்பாக தயாரிக்கப்படும் டிலைட் பாலை வாங்குங்கள். தமிழக அரசு எடுத்துள்ள பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக பல்வேறு கூட்டுறவு பால் சொசைட்டிகள் லாபத்தில் இயங்கி வருகிறது.

ஆவின் பால்

`அப்படி, நான் கூறவில்லை..’

புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆவியின் குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடையே, விவசாயிடையே இல்லை.

கோயில் மற்றும் கிரிக்கெட் கிரவுண்ட் ஆகியவற்றில் அதிக மக்கள் கூட்டம் கூட்டமாக செல்வது நாகரிக அரசியலுக்கு நல்லதல்ல என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு நான் கருத்து கூறியதாக சர்ச்சை எழுந்தது பற்றி கேட்கிறீர்கள்.

ஆனால், அது குறித்த கேள்வி எழுப்பும்போது நான் கூறிய கருத்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. அப்படி, நான் கூறவில்லை. நான் கூறிய கருத்து என்னுடைய எக்ஸ் வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *